பதிவுகள்

Tuesday 12 July 2016

நம் காலத்தின் சஞ்சய் காந்தி

 நரேந்திர மோடியை, நான் உட்பட, இந்திரா காந்தியுடன் பல அரசியல் விமர்சகர்கள் ஒப்பிட்டிருக்கிறோம். இந்திரா காந்திக்குப் பிறகு, அப்பதவிக்கு வந்தவர்களில் அதிக அதிகாரம் படைத்தவராகக் காட்சிதருவது மோடி மட்டுமே. ஐந்தாண்டுக் காலம் முழுதாகப் பிரதமராக இருந்த வாஜ்பாய், நரசிம்ம ராவ் கூட இந்த அளவுக்கு அதிகாரம் கொண்டிருக்கவில்லை. இந்த அதிகாரமும் செல்வாக்கும் உள்நாட்டில் கட்சி மீதும் அரசு மீதும் செலுத்தப்படுகிறது, வெளியில் நாட்டின் மீதும் உலகம் மீதும் செலுத்தப்படுகிறது.
இந்திராவைப் போலவே மோடியும் தனிமையானவர். அவரைப் போலவே தன்னுடைய கருத்துகளைத் தனக்குள்ளேயே வைத்துக்கொள்கிறார். அவருடைய நம்பிக்கைக்குரியவரும் அவருக்குச் சமமானவராகக் கருதப்படுபவரும் அமித் ஷா மட்டுமே. குஜராத் முதல்வராக மோடி இருந்தபோது, அமைச்சர் அமித் ஷாவிடம் 12 துறைகளைக் கொடுத்திருந்தார்!
2014 மக்களவைப் பொதுத் தேர்தலில் பாஜகவின் பிரதமர் வேட்பாளராக மோடி தேர்ந்தெடுக்கப்பட்டபோது, பிரச்சாரத்தில் அமித் ஷாவுக்கு முக்கியப் பங்கு தர வலியுறுத்தினார். உத்தரப் பிரதேசத்தில் வேட்பாளர் தேர்வு, பிரச்சாரம் ஆகிய இரண்டும் அவர் வசம் ஒப்படைக்கப்பட்டது. 2014 ஜூலையில் பிரதமரான மோடியின் அறிவுறுத்தல் அல்லது கட்டளைப்படி அமித் ஷா கட்சியின் தேசியத் தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.
சஞ்சய் காந்தியும் அமித் ஷாவும்
அரசியல் ரீதியாக மோடி முழு நம்பிக்கை வைக்கும் ஒரே நபர் அமித் ஷா. 1975 முதல் 1980 வரையில் இந்திரா காந்தி முழுதாக நம்பிக்கை வைத்த ஒரே காங்கிரஸ்காரர் சஞ்சய் காந்தி. இந்திராவும் மோடியும் தங்களுடைய நம்பிக்கைக்குரியவராக, ஆலோசகராக, பொறுப்பாளியாக அவர்களைத் தேர்வுசெய்ததில் ஏதேனும் ஒற்றுமையைப் பார்க்கிறீர்களா?
ஒற்றுமை இருப்பதாகவே நான் கருதுகிறேன். இந்திராவின் மகன் சஞ்சய் என்பதைப் போல மோடிக்கும் ஷாவுக்கும் உறவு ஏதும் இல்லை. ஆனால், வேறு சில அபூர்வமான ஒற்றுமைகள் உள்ளன, அவை வரலாற்றாசிரியர்களுக்கு ஆர்வத்தை ஊட்டுபவை, பொதுமக்களுக்கோ கவலையை அளிப்பவை.
பிரதமராக நீண்ட நாள் பதவி வகிக்க இந்திரா ஆசைப் பட்டார். அதே சமயம், இந்தியாவை வளர்ச்சி பெறச் செய்து மாற்றிவிட வேண்டும், வரலாற்றில் தடம் பதிக்கச் செய்துவிட வேண்டும் என்றும் விரும்பினார். நரேந்திர மோடியும் அவ்வாறே அதிகாரத்தையும் புகழையும் கைப்பற்றிவிட வேண்டும் என்பதற்கும் மேலாக எதையோ சாதிக்க விரும்புகிறார் என்றே கருதுகிறேன். அவர் கூறும் வளமான, சக்திமிக்க இந்தியா என்பது இந்திராவோ, நேருவோ காண விரும்பியதைவிட நிச்சயம் வித்தியாசமானதாக இருக்கக் கூடும். தன்னைப் பிரபலப்படுத்திக்கொள்வதைவிட, மோடிக்கு வேறு எந்த நோக்கமும் இருக்காது என்று கூறுவது நாகரிகமற்ற பேச்சாகவே இருக்கும். ஆனால் அமித் ஷாவோ, சஞ்சய் காந்தியைப் போல அதிகாரம் செலுத்துவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டவர்போலத் தெரிகிறார்.
எதைச் செய்ய வேண்டும் என்று நினைக்கிறாரோ அதை மட்டுமே சிந்திப்பவர் சஞ்சய் காந்தி. அது மட்டுமல்ல, அதை எந்த வகையிலாவது செய்துவிடும் இரக்கமற்ற மனம் கொண்டவர். இவ்விரண்டும் நெருக்கடி நிலை அமலில் இருந்த காலத்தில் அப்பட்டமாக வெளிப்பட்டன. அதற்குப் பிறகு, ஜனதா கட்சிக்குள் பிளவை ஏற்படுத்தி, செல்வாக்குமிக்க சிலரைக் கட்சி மாற வைத்து ஆட்சியைக் கவிழ்க்க வைத்தார். காங்கிரஸ் கட்சி மீண்டும் அரசியல் அரங்கில் முக்கிய இடத்தைப் பிடிக்க உதவினார். 1977 தேர்தலுக்குப் பிறகு, துவண்டுபோன இந்திரா காந்தியைத் தேற்றி துணிச்சலை ஊட்டினார்.
சஞ்சய் வெற்றிகரமான அரசியல்வாதி
நன்கு படித்த, நாகரிகமுள்ள அரசியல் விமர்சகர்கள்கூட சஞ்சய் காந்தியை பிஞ்சிலேயே பழுத்தவர், மனம்போன போக்கில் செயல்பட்டவராகப் பார்த்தனர். ஆனால் உண்மையில், அவர் வெற்றிகரமான அரசியல்வாதி. இந்திரா மட்டும் மனசாட்சியின் குரலைக் கேட்டு, நெருக்கடிநிலையை முடிவுக்குக் கொண்டுவராமல் இருந்திருந்தால், சர்வாதிகார காலம் மேலும் நீண்டிருக்கும். காரணம் எதிர்க்கட்சிகள், பத்திரிகைகளின் வாய்கள் மூடப்பட்டிருந்தன. சஞ்சய் காந்தி நேரடியாக மேற்பார்வை செய்த 1980 மக்களவைப் பொதுத் தேர்தல் காங்கிரஸ் கட்சிக்குத் திட்டவட்டமான வெற்றியைத் தந்தது.
ஒற்றைச் சிந்தனை கொண்டவர், இரக்கமற்ற செயல்பாட்டாளர் என்ற அடைமொழிகள் அமித் ஷாவுக்கும் சூட்டப்படுகின்றன. நீதியை அவமதித்தார், சட்டப்படியான ஆட்சி என்ற கொள்கையை குஜராத்தில் அலட்சியப்படுத்தியதில் சர்ச்சைக்குரிய பங்காற்றினார் அமித் ஷா. இது தொடர்பாக மேலும் தெரிந்துகொள்ள விரும்புகிறவர்கள் ராணா அயூப் எழுதிய துணிச்சல் மிக்க நூலான ‘தி குஜராத் ஃபைல்ஸ்’ படிக்கலாம்.
குஜராத்திலிருந்து தேசிய அரங்குக்கு இடம்பெயர்ந்த பிறகு, அமித் ஷா செய்ததை மட்டும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்வோம். 2014 மக்களவைப் பொதுத் தேர்தலின்போது மேற்கு உத்தரப் பிரதேசத்தில் உள்ள மக்களை அவர் மதரீதியாகத் திரளவைத்தார்.
வாக்குச்சீட்டின் மூலம் இந்துக்கள் பழிதீர்த்துக்கொள்ள வேண்டும் என்று அறைகூவல் விடுத்தார். ஷாவின் மேற்பார்வையில் வேட்பாளராக நிறுத்தப்பட்டு மக்களவைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட யோகி ஆதித்யநாத், சாக்ஷி மகராஜ், சஞ்சீவ் பலியான் ஆகியோர் வெறுப்பைத் தூண்டும் வகையிலும் மதரீதியாக விரோதத்தை மூட்டும் வகையிலும் பேசுவது, பேட்டியளிப்பது, அறிக்கை வெளியிடுவது ஆகியவற்றை வாடிக்கையாக வைத்திருக்கின்றனர். அவற்றைக் கட்சித் தலைவர் (ஏன், பிரதமரே கூட) வேடிக்கை பார்க்கின்றனர்.
எப்படியாவது வெற்றி
இப்போது மீண்டும் உத்தரப் பிரதேசத்தையும் இந்தியாவையும் மதரீதியாகத் திரளவைப்பதில் முனைப்பாக இருக்கிறார் அமித் ஷா. ஒரேயொரு நாடாளுமன்ற உறுப்பினரின் பேச்சைக் கேட்டு, கைரானா நகரிலிருந்து ஏராளமான இந்துக்கள் வெளியேறிவிட்டார்கள் என்று பொதுக்கூட்டத்தில் குற்றஞ்சாட்டினார். அந்தக் கூற்று மிகைப்படுத்தப்பட்டது என்று ஒரு ஆங்கில நாளிதழ் ஆதாரங்களுடன் செய்தி வெளியிட்டது. அந்த உறுப்பினரே தான் கூறியதைத் திரும்பப் பெற்றார்.
ஆனால், ஷா அப்படிச் செய்யவில்லை. அந்த நாடாளுமன்ற உறுப்பினர் தான் திரும்பப் பெற்றதையே வேறு வகையில் வலியுறுத்தும்படி நெருக்கப்பட்டார். கைரானாவிலும் சுற்றுவட்டாரத்திலும் வகுப்புவாதத் தீயை விசிறிவிடுவதற்காக உள்ளூர் சட்டப்பேரவை உறுப்பினர் சங்கீத் சோம் அனுப்பிவைக்கப்பட்டார்.
மானுடவியல் ஆய்வாளர்களும் வரலாற்றாசிரியர்களும் பல்வேறு தருணங்களில் நிரூபித்திருப்பதைப் போல வகுப்புக் கலவரங்கள் பெரும்பாலும் வதந்தி காரணமாகவும், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளாலுமே பரவுகின்றன. பொறுப்புள்ள தலைவர் வதந்திகள் பரவாமல் தடுக்கும் செயலில் ஈடுபடுவார். அக்கறையுள்ள தலைவராக இருந்தால் 2013 முசாஃபர்பூர் கலவரத்துக்குப் பிறகு, வீடுகளிலிருந்து வெளியேறியவர்களை மீண்டும் அவரவர் வீடுகளுக்குத் திரும்ப உதவியிருப்பார்.
அமித் ஷாவுக்கு அத்தகைய அக்கறையோ பொறுப்போ இருப்பதாகத் தெரியவில்லை. உத்தரப் பிரதேச மாநில இந்துக்களுடைய மனங்களில் அச்சத்தையும் பீதியையும் விதைத்தால், அவர்கள் மதரீதியில் ஓரணியில் திரண்டு அடுத்த ஆண்டு சட்டப்பேரவைப் பொதுத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என்பதே அவருடைய இரக்கமற்ற, ஒற்றைச் சிந்தனையாக இருக்கிறது.
மதரீதியாக மக்களைப் பிளவுபடுத்த அவர் இரண்டு விதமான தோழமைகளை நம்பியிருக்கிறார். இதில் முதலாவது பிரிவினர், அவருடைய கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற - நாடாளுமன்ற உறுப்பினர்கள். அவர்களுடைய அரசியல் கண்ணோட்டமும் ஷாவினுடையதைப் போன்றதே. சமூகப் பிணைப்புகள் அறுந்துபோனாலும்கூடச் சரி, தங்களுக்கு எப்படியாவது தேர்தலில் வெற்றி கிடைத்துவிட வேண்டும் என்று அவர்கள் நினைக்கின்றனர்.
மரியாதை, அச்ச உணர்வு
இன்னொரு தோழமைப் பிரிவினர், உத்தரப் பிரதேசத்தை ஆளும் சமாஜவாதி கட்சியைச் சேர்ந்தவர்கள். முஸ்லிம்கள் முன்பைவிடத் தங்களுக்குப் பாதுகாப்பில்லை என்று அஞ்ச வேண்டும். அப்படி அஞ்சி தங்களுடைய வாக்குகளை நமக்கே அளிக்க வேண்டும் என்று சமாஜவாதித் தலைவர்கள் விரும்புகின்றனர். இல்லையென்றால், தேர்தல் காலத்தில் அவர்கள் வேறு கட்சிகளுக்கு ஆதரவளித்துவிடக் கூடும் என்று நினைக்கின்றனர்.
தனது செயல்கள் மூலம் காங்கிரஸ்காரர்கள் தன் மீது அச்சப்படவும் மரியாதை செலுத்தவும் செய்தார் சஞ்சய் காந்தி. அமித் ஷாவும் அப்படியே கட்சிக்காரர்களிடம் அச்சத்தையும் மரியாதையையும் தன் மீது ஏற்படுத்தியிருக்கிறார். சில வேளைகளில் அச்சம் காரணமாகக்கூட அவருக்கு மரியாதை செலுத்திவிடுகின்றனர். பாஜக தலைவர் மீதான அச்சம் அவருடைய கட்சியைத் தாண்டி மற்றவர்களிடமும் ஏற்பட்டிருக்கிறது. பத்திரிகைகளை ஒடுக்கவும் அடக்கவும் சஞ்சய் காந்திக்கு அவருடைய அன்னை நெருக்கடிநிலையை அமல்படுத்த வேண்டியிருந்தது.
அமித் ஷாவுக்கோ தன்னுடைய அரசியல் செல்வாக்கால் நெருக்கடிநிலை அமலில் இல்லாதபோதுகூட அதைச் சாதிக்க முடிகிறது. அமித் ஷாவை விமர்சனம் செய்ததற்காக ஒரு பத்திரிகையாளரை மும்பை பத்திரிகை நிறுவனம் வேலையைவிட்டு நீக்கிவிட்டது. அந்தப் பத்திரிகையின் உரிமையாளர் பாஜக ஆதரவுடன் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார். இது சொல்லும் செய்தி என்ன? எச்சரிக்கை! ஏனைய பத்திரிகையாளர்களுக்கு எச்சரிக்கை!
என்ன நினைக்கிறார் மோடி?
சஞ்சய் காந்தி தன்னுடைய மகன் என்ற பாசத்தால், அவர் செய்த தவறுகளையெல்லாம் கண்டுகொள்ளாமல் இருந்தார் இந்திரா காந்தி. மோடியும் அந்த வகையில் அமித் ஷாவை நடத்தலாம், நடத்தாமலும் போகலாம். ஆனால், அவருடைய அரசியல் வழிமுறைகளைக் கேள்வி கேட்பதே இல்லை. மாநிலங்களவையில் பாஜகவுக்கு ஆதரவு பெருக அவர் செய்வதெல்லாம் அவசியம் என்று கருதுகிறாரா மோடி? அப்படியென்றால், நாட்டின் மிகப் பெரிய மாநிலத்தில் மதக் கலவரம் காரணமாக ஏற்படும் காயங்களும் தழும்புகளும் பொருட்படுத்தப்பட வேண்டியதில்லை என்று நினைக்கிறாரா? உத்தரப் பிரதேசத்தையோ - ஏன் நாட்டையோ, இந்த வழிமுறைகள் மூலம் தேர்தலில் கைப்பற்றி நாட்டை முன்னேற்றிவிட முடியுமா?
நான் இந்திரா காந்தியின் அபிமானி அல்ல, அதேபோல நரேந்திர மோடியின் அபிமானியும் அல்ல. நெருக்கடிநிலையை நேரில் பார்த்திருக்கிறேன். 2002-க்கு முன்பும் அதற்குப் பிறகும் குஜராத் மாநிலத்துக்குப் பல முறை சென்று வந்ததன் மூலம், கொடூரமான அந்த ஆண்டின் நிகழ்வுகள் எந்த அளவுக்கு மாநிலத்தைச் சேதப்படுத்தியிருக்கிறது என்று எனக்குத் தெரியும். ஒரு அரசியல் தலைவரின் பயணம் அவருடைய மொத்த சாதனைகள், வேதனைகள் கொண்டு அளக்கப்பட வேண்டும்.
நெருக்கடி நிலையை அமல்படுத்தினார் என்பதைத் தவிர, இந்திராவின் சாதனைகள் அநேகம். வங்கதேசத்தை பாகிஸ்தானின் கொடுங்கோல் ஆட்சியிலிருந்து விடுதலை பெற வைத்தார். உணவு தானிய உற்பத்தியில் தன்னிறைவு ஏற்படுத்தினார். வனம், சுற்றுச்சூழல் காப்புக்காகவே தனித் துறையை உருவாக்கினார். நரேந்திர மோடி தனது பதவிக்காலத்தின் ஆரம்பத்தில் கலவரங்களைச் சந்தித்தார். பிறகு, மாநிலத்தின் வேளாண் உற்பத்தித் திறனை அதிகரிப்பதிலும் தொழில் முதலீட்டை ஈர்ப்பதிலும் அக்கறை செலுத்தினார். டெல்லியில் பிரதமராகப் பதவியேற்ற பிறகு, கடந்த 10 ஆண்டுகளாக அந்தப் பதவி இழந்திருந்த மரியாதையைத் திரும்ப ஏற்படுத்தியிருக்கிறார்.
மன்மோகன் சிங் செல்வாக்கில்லாமல் இருந்தார் என்பதற்காக, நரேந்திர மோடி அதிகாரத்தைச் செலுத்தும் விதம் ஆர்ப்பாட்டமாகவும் அச்சுறுத்தும் வகையிலும் இருக்கிறது என்றாலும், அதைப் புறக்கணித்துவிடப் பலர் தயாராக இருக்கின்றனர். சாதுவாக ஒருவர் இருந்தார் என்பதற்காக, அவருக்கு நேர் எதிராக இருப்பது சரிதான் என்று ஏற்றுக்கொண்டுவிட்டோமோ என்ற அச்சம் வரலாற்று மாணவன் என்ற வகையில் என்னுடைய மனத்தில் ஏற்பட்டிருக்கிறது. பிரதமர் முழு நம்பிக்கை வைத்திருக்கும் ஒரு நபர், அச்சத்தையும் சந்தேகத்தையும் பிளவையும் வெறுப்பையும் மூட்டி தேர்தலில் வெற்றிபெறப் பார்க்கிறவர் என்பது எனக்கு உண்மையிலேயே அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
பணம் கொடுத்துப் பதவி
ஒரு நல்ல முடிவுக்காக மோசமான வழிமுறையைக் கையாளக் கூடாது என்று காந்திஜி அடிக்கடி கூறுவார். இன்றைய அரசியல்வாதிகளோ ஆதாயத்தை மட்டும் தரவல்ல, லட்சியமற்ற வழிமுறைகளைக் கையாள்கின்றனர். மக்களின் நன்மைக்காக எப்படி வேண்டுமானாலும் செயல்படலாம் என்று நினைக்கின்றனர். நேருவோ, படேலோ நினைத்துக்கூடப் பார்க்க விரும்பாத வழிமுறைகளை இந்திரா கையாண்டார், மோடி கையாள்கிறார். இதர கட்சிகளின் தலைவர்களைத் தனிப்பட்ட முறையில் தாக்கிப் பேசுவது,
தங்களுடைய அமைச்சரவையில் உள்ளவர்களையே அலட்சியப்படுத்துவது, அதிகாரத்தில் இருக்கும்போது தான் தான் முக்கியமானவர் என்று ஆதிக்கம் செலுத்துவது போன்றவற்றை நேரு, படேல் போன்றவர்கள் செய்ய நினைக்க மாட்டார்கள். தேசிய நலனுக்காகவே அதிக அதிகாரத்தைக் கையில் வைத்திருக்கிறோம் என்று இவர்கள் நியாயப்படுத்தக் கூடும்.
இவர்களைத் தவிர, மூன்றாவது ரக அரசியல் தலைவர்களும் உண்டு. நேர்மையற்ற வழியில் செயல்பட்டுத் தீமையான செயல்களையே தங்களுடைய வாழ்நாளில் மேற்கொள்கிறவர்கள் அவர்கள். மாநில அளவிலான அரசியல்வாதிகள் குறுமதியாளர்களாகவும் கும்பல்களின் தலைவர்களாகவும் குற்றச் செயல்களில் கூசாமல் ஈடுபடுகிறவர்களாகவும் இருந்து, சட்டமன்ற - நாடாளுமன்ற உறுப்பினர்களாவதுடன் அமைச்சர் பதவிகளையும் வகித்து சொந்த நலனை வளர்த்துக்கொள்கின்றனர். ஊழல் தொழிலதிபர்கள் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை இதற்காகவே பணம் கொடுத்துப் பெறுகின்றனர்.
எந்த வழியைக் கடைப்பிடித்தாவது அதிகாரத்தைக் கைப்பற்றுவது, அந்த அதிகாரத்தை அப்படியே தக்கவைத்துக் கொள்வது என்று தேசிய அளவில் செயல்பட்டவர் சஞ்சய் காந்தி, இப்போது செயல்படுகிறவர் அமித் ஷா. எனவேதான், அமித் ஷாவை நவீன காலத்துச் சாணக்கியர் என்று எவராவது புகழும்போது முதுகுத்தண்டு சில்லிடுகிறது. சஞ்சய் காந்தியின் மறைவுக்குப் பிறகு - அமித் ஷாவுக்கு முன்னால் - இதுவரை எந்த தேசியத் தலைவரும் இப்படிச் செயல்பட்டதே இல்லை என்பதே உண்மை.

தமிழில்: சாரி 

Wednesday 4 February 2015

இந்தியாவை இந்தியாவாக இருக்க விடுங்கள்!

 “இந்திய அரசியல் சட்டத்தின் முகவுரையில் உள்ள ‘சமத்துவம்’, ‘மதச்சார்பின்மை’ என்ற சொற்கள் இனியும் தொடரத்தான் வேண்டுமா?” என்றும் “இதுகுறித்து தேசிய அளவில் விவாதம் நடத்தலாம்” என்றும் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பேசியிருப்பதை மதச்சார்பின்மை மீது தொடுக்கப்படும் மறைமுகத் தாக்குதலாகவே கருத வேண்டும்.
டெல்லியில் நடந்த குடியரசு தின அணிவகுப்பில், ஓர் அலங்கார ஊர்தியின் பிரச்சாரப் படத்துக்குக் கீழே, இந்தியக் குடியரசு சட்டத்தின் முகவுரையிலிருந்து ‘இறையாண்மை மிக்க ஜனநாயகக் குடியரசு’ என்ற வாசகங்கள் மட்டுமே இடம்பெற்றிருந்தன. ‘சமத்துவம்’, ‘மதச்சார்பின்மை’ ஆகிய இரண்டு சொற்களும் விடுபட்டிருந்தன. எதிர்க் கட்சிகள் விளக்கம் கேட்டபோது, “அவ்விரு சொற்களும் நீக்கப்படத்தான் வேண்டும்” என்று சிவசேனை கருத்து தெரிவிக்க, இந்த விவகாரம் பெரிய சர்ச்சையாக மாறியிருக்கிறது. நல்லவேளை, இவ்விரு சொற்களையும் நீக்கப்போவதேயில்லை என்று பாஜக தலைவர் அமித் ஷா இப்போது கூறியிருக்கிறார்.
1975-ல் நெருக்கடி நிலைப் பிரகடனத்துக்குப் பிறகு, இந்திய அரசியல் சட்டத்துக்கு 42-வது சட்டத் திருத்தத்தைக் கொண்டுவந்த இந்திரா காந்தி தலைமையிலான அரசுதான் ‘சமத்துவம்’, ‘மதச்சார்பின்மை’ என்ற இரண்டு சொற்களையும் முகவுரையில் சேர்த்தது. நெருக்கடி நிலை நீங்கிய பிறகு, நடந்த மக்களவைப் பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த ஜனதா கட்சி, அரசியல் சட்டத்தில் இந்திரா காந்தி அரசின் சில மாற்றங்களைத் திருத்தி, 44-வது திருத்தத்தைக் கொண்டுவந்தது. அந்த அரசுகூட ‘சமத்துவம்’, ‘மதச்சார்பின்மை’ என்ற சொற்களை விலக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. பாஜகவின் தாய்க் கட்சியான ஜனசங்கமும் அன்றைய ஜனதா கட்சியின் ஒரு அங்கம் என்பதை யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.
நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, அரசியல் நிர்ணய சட்டசபையிலும் இது தொடர்பாக விவாதம் நடந்தது. மதச்சார்பின்மையை வலியுறுத்தும் வகையில் சட்டப் பிரிவுகள் இருப்பதால் ‘மதச்சார்பின்மை’ என்ற சொல்லைச் சேர்க்க வேண்டாம் என்ற முடிவு எடுக்கப்பட்டது. சிறுபான்மைச் சமூகத்தவர்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் சம்பவங்கள் அடுத்தடுத்து நடைபெறத் தொடங்கியதால், பிற்பாடு அந்தச் சொல் சேர்க்கப்பட்டது. அதைப் போலவே, பெருவாரியான மக்கள் தங்களுடைய பொருளாதார எதிர்காலம்குறித்து அச்சப்படத் தொடங்கியதால் ‘சமத்துவம்’ என்ற சொல் சேர்க்கப்பட்டது. இது வரலாறு. எஸ்.ஆர். பொம்மை வழக்கில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தீர்ப்பை வழங்கிய உச்ச நீதிமன்றம், “மதச்சார்பின்மை என்பது நம்முடைய அரசியல் சட்டத்தின் அடித்தளத்தின் ஒருங்கிணைந்த அம்சம்” என்று வலியுறுத்தியதையும் நாம் மறந்துவிடலாகாது.

இந்தியாவின் உயிர்நாடியே அதன் பன்மைத்தன்மைதான். எத்தனை இனங்கள்! எத்தனை மொழிகள்! எத்தனை மதங்கள்! சமாதான சகவாழ்வின் மூலமாக மட்டுமே இந்தப் பன்மைத்தன்மையை நமது பலமாக ஆக்கிக்கொள்ள முடியும். ‘ஒரே இனம், ஒரே மொழி, ஒரே மதம்’ என்ற கொள்கையோ இந்தியாவை மிகவும் பலவீனமாக ஆக்கிவிடும். பலமான இந்தியா வேண்டுமா, பலவீனமான இந்தியா வேண்டுமா என்பதை மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும்

Sunday 26 May 2013

மதுவுக்கு ஏன் விலக்கு?

மக்கள் ஆரோக்கியத்துக்காக குட்கா, பான்பராக் உள்ளிட்ட போதைப் பாக்குகளை தமிழ்நாடு தடை செய்திருப்பதற்காக மகிழ்ச்சி கொள்ளவும் தமிழக அரசைப் பாராட்டவும் விழையும் அதே வேளையில், "டாஸ்மாக்' விற்பனையின் வளர்ச்சி குறித்து கவலை கொள்ளவும் வேண்டியிருக்கிறது.
 தமிழ்நாட்டில் மது விற்பனை மூலம் 2012-13-ஆம் ஆண்டில் ரூ.21,680 கோடி வருவாய் கிடைத்துள்ளது. 2003-04-ஆம் ஆண்டில் ரூ. 3,639 கோடியாக இருந்த மது விற்பனை பத்து ஆண்டுகளில் சுமார் 7 மடங்கு உயர்ந்துள்ளது. இதற்காக மகிழ்ச்சி அடைவதா, இல்லை வருத்தப்படுவதா?
 பான்பராக், குட்கா போன்ற போதைப் பாக்குகள் வாய், தொண்டைப் புற்றுநோய்க்குக்  காரணமாக இருக்கின்றன. பாக்குடன் பல்வேறு போதைப் பொருள்களையும் கலந்து விற்பதால், 2001-ஆம் ஆண்டிலேயே இவற்றின் விற்பனைக்குத் தமிழக அரசு, "உணவுக் கலப்படத் தடுப்புச் சட்டத்தின்' கீழ் தடை விதித்தது. ஆனால் அந்தச் சட்டத்தை மாநில அரசு பயன்படுத்த முடியாது என்கிற சட்டத்தின் ஓட்டையின் வழியாக மீண்டும் தமிழ்நாட்டில் பான்பராக், குட்கா விற்பனை தொடங்கியது. தற்போது  "உணவுப்பொருள் தரம் மற்றும் கேடு விளைவிக்காமை சட்டத்தின்' கீழ் இவற்றின் தயாரிப்பு, சேமிப்பு, விற்பனை ஆகியவற்றுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
 இந்த நேரத்தில் இன்னொரு கேள்வியைச் சேர்த்து கேட்கலாம்: மக்கள் ஆரோக்கியம் முக்கியம் என்றால் ஏன் மதுவிலக்கை அமல்படுத்தக்கூடாது?
 உணவுப்பொருள் தரம் மற்றும் கேடுவிளைவிக்காமை சட்டத்தின்படி, தற்போது தமிழகத்தில் விற்பனையாகும் மது தரமானதா? 
 மது புளிப்பேறுவதற்கான காலஅவகாசம் இல்லாமலேயே, எரிசாராயத்துடன் தண்ணீர் கலந்தவுடனேயே பாட்டிலில் அடைக்கப்பட்டு சந்தைக்கு வந்துவிடுவதால், அத்தகைய மதுபானம் எப்படி தரமானதாக இருக்க முடியும். இதில் மதுபான விற்பனையாளர்களும் "போலி சரக்குகளை' உள்ளே தள்ளிவிடுகிறார்கள். நிறைய இடங்களில் திடீர் ஆய்வுகளில் இத்தகைய சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 தமிழகம் மதுவினால் பெற்றுவரும் தீமைகளில் மிக முக்கியமான மூன்று:
 1. பதினெட்டு வயது நிரம்பாத, "பிளஸ்-2' மாணவர்களும் மது அருந்தத் தொடங்கியிருக்கிறார்கள். இதன் அடுத்த தொடர் நிகழ்வாக பாலியல் வல்லுறவு, பெண்கள் மீதான வன்முறைகள் தமிழகத்தில் அதிகரிக்கும். இவர்களைச் சிறார் நீதிமன்றத்தில்தான் விசாரிக்க முடியும்.
 2. அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றுவோர் குடித்துவிட்டு வேலைக்கு வருவது அதிகரித்து இருக்கிறது. அதிலும் குறிப்பாக, மாலை 5 மணிக்கு மேல் பணியாற்ற நேரும் ஊழியர்கள் இவ்வாறு குடித்துவிட்டு வேலைக்கு வருவது மிகமிக அதிகமாகிவிட்டது. மது போதையுடன் வேலைக்கு வரும் இவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் தொழிலாளர் அமைப்புகள் எதிர்க்கின்றன. நடவடிக்கை எடுக்க முடிவதே இல்லை. இதில் கடைநிலை ஊழியர் அல்லது உயர் அதிகாரி என்ற வேறுபாடெல்லாம் கிடையாது.
 3. மதுக் கூடங்கள் (பார்) தமிழகத்துக்கு ஏற்படுத்திவரும் கேடுகள், மதுவைவிட அதிகம். மதுவினால் சாவதைக் காட்டிலும் இந்த மதுக்கூடத்தின் தரமற்ற கலப்பட உணவினால் செத்துக்கொண்டிருப்போரே அதிகம். சாகாதவர்கள் தொற்று நோயால் பாதிக்கப்படுகிறார்கள். இவர்கள் போடும் பிளாஸ்டிக் குப்பைகள் மற்றொரு கேடு. காவல்துறைக்கும் உள்ளூர் அரசியல் பிரமுகர்களுக்கும் மாமூல் கொடுத்து வளர்ப்பது இதனுடன் தொடர்புடைய இன்னொரு சமூகக்கேடு.
 அடுத்ததாக,அப்பகுதி வாழ் மக்களுக்கு இந்தக் குடிமகன்களால் ஏற்படும் தொல்லைகள் மிக அதிகம். இந்தக் குடிமகன்கள் மதுக்கூடத்திலிருந்து (பார்) வீடு செல்லும்போதுதான் பெரும்பாலான தகராறுகளும் சாலை விபத்துகளும் நிகழ்கின்றன.
 இருபதாயிரம் கோடி ரூபாய் வருவாயை இழக்க எந்த அரசுக்கும் மனம் இருக்காதுதான். மாநில அரசுக்கு மத்திய தொகுப்பிலிருந்து கிடைக்கும் நிதி, அரசியல் காரணங்களால், மாநில அரசு கேட்பதைவிடக் குறைவாக தரப்படும்போது, மது  விற்பனையால் கிடைக்கும் மிகப்பெரும் வருவாய்தான் பொருளாதார பலத்தைத் தருகிறது என்பது உண்மை. நாம் அதை மறுக்கவில்லை.
 அப்படி ஒரு கட்டாயம் இருந்தால், குறைந்தபட்சம் மது விற்பனை, மது அருந்துதல் ஆகியவற்றுக்கு கட்டுப்பாடுகளை கடுமையாக்குவதும்கூட கடினமான செயலா? இப்படித் தெருவுக்குத் தெரு பார்களை அனுமதித்து சாமான்ய மக்களுக்குத் தொந்தரவும், சமூக விரோதிகளுக்கு சந்திப்பு மையமும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன?
 அரசிடம் கட்டணம் செலுத்தி, குடிப்பதற்கு உரிமம் பெற்றவர்களுக்கு மட்டுமே மது விற்பனை செய்வதும்; மதுஅருந்தி, போதையுடன் பணிக்கு வந்தால் உடனே பணியிடை நீக்கம் செய்வதும்; சாலையோரம் மட்டுமின்றி ஸ்டார் ஓட்டல்களிலும்கூட "பார்' உரிமம் ரத்து செய்யப்பட்டு, மது அருந்துவது அவரவர் வீட்டுக்குள் அல்லது அறைக்குள் நடைபெற வேண்டிய தனிப்பட்ட விவகாரமாக மாற்றப்படுவதும்; போதையுடன் சாலையில் நடமாடுவோர், வாகனம் ஓட்டுவோர் பிடிக்கப்பட்டு, போதை தெளியும்வரை காவல்நிலையத்தில் அடைத்து வைத்து, அபராதம் விதிக்கும் நடைமுறையும் இன்றைய குறைந்தபட்ச தேவைகள்.
கண்களை விற்று சித்திரம் வாங்குவது போன்ற முட்டாள்தனம்தான் மதுக் கடைகளைத் தெருத் தெருவாய்த் திறந்து வைத்துக் கொண்டு, இலவச அரிசியும், மருத்துவக் காப்பீட்டுத் திட்டமும், விலையில்லாப் பொருள்கள் விநியோகமும் நடத்துவது. பான்பராக், குட்கா தடைக்கு நன்றி. மதுவிலக்கும் கொண்டு வந்தால்தான் பாராட்டத் தோன்றும்!

Monday 1 April 2013

கூடாது, கூடவே கூடாது!

பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளைத் தடுப்பதற்காக கடுமையான தண்டனை விதிக்கும் குற்றவியல் சட்டத்திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள போதிலும், இசைவுக் கலவி (கன்ஸன்ட் செக்ஸ்) வயது நிர்ணயம் 18-லிருந்து 16-ஆக குறைக்கப்பட்டிருப்பது சரிதானா என்பதை நாடாளுமன்றம் விரிவாக விவாதிக்க வேண்டும்.
தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியாலும், இன்றைய இளம் தலைமுறை சிறிய வயதிலேயே கணினி மற்றும் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஈடுபாடு உடையவர்களாக இருப்பதாலும், இளம் வயதிலேயே பாலியல் தூண்டுதலுக்கு உள்ளாகிறார்கள். இன்றைய பள்ளிகளில் மிகப்பெரும் சவாலாக இருப்பது, கல்வியைவிட, இத்தகைய பாலினக் கவர்ச்சியும், அதைத் தொடர்ந்த காதலும் காமமும்தான்.
பல சம்பவங்களில், இந்தக் காதல் விவகாரம் அடிதடி தகராறுகளாகவும், சில சம்பவங்களில் பெண் கருவுறலாகவும் அமைந்துவிடுகிறது. அதைத் தொடர்ந்து கருக்கலைப்பு நடைபெறுவதும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இன்றைய "செக்ஸ் சர்வே' மற்றும் ஊடகங்களின் ஆலோசனைகள், திருமணத்துக்கு முன்பாகக் கலவி செய்வது தவறு அல்ல என்றும், ஆனால் பாதுகாப்புடன் கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் புத்திசொல்வதாக இருக்கின்றனவே தவிர யாருமே இது கூடாது என்று சொல்வதாக இல்லை.
நடைமுறை உண்மை இது என்ற போதிலும், இசைவுக் கலவி வயது வரம்பை 16 ஆகக் குறைப்பதன் மூலம், இன்றைய நாளில் மேனிலைப் பள்ளிகளில் படிக்கும் அனைத்து மாணவர், மாணவியர்களையும் சட்டப்படி தகுதியுடையவர்களாக ஆக்கிவிடுகிறோம். அதுமட்டுமல்ல, வேறு சட்டச் சிக்கல்களும் ஏற்பட இருக்கின்றன.
ஒரு 16 வயது மாணவி, அல்லது இளம்பெண், இசைவுக் கலவியில் கருவுற நேர்ந்தால், அந்தக் கருவைக் கலைக்க அவர் விரும்பவில்லை என்றால், என்ன ஆகும்? அவர் திருமணம் செய்துகொள்ள முடியாது; ஏனென்றால் 18 வயதுக்கு முன்பாக இளவயதுத் திருமணம் நடத்துவது சட்டப்படிக் குற்றம். ஆகவே, அவர் கன்னித்தாயாக, கல்யாணம் இல்லாமலேயே குழந்தை பெற வேண்டும் அல்லது கல்யாணம் செய்துகொள்ளாமல், உடனுறைத்தோழியாக வாழ்க்கை நடத்த வேண்டும். இத்தகைய அவல நிலை இந்தியாவில் சட்டப்படியாக உருவாகத்தான் வேண்டுமா?
இந்தியாவில் பாலியல் வன்கொடுமை மற்றும் வல்லுறவுக்கு ஆளாகும் சிறுமிகளில் பெரும்பகுதியினர் 16 வயது முதல் 18 வயதுக்குள் இருப்பவர்கள். இப்போதைய சட்டத்தின்படி, இந்தச் சிறுமிகள், மனம் இசைந்து கலவி கொண்டாலும்கூட, அவரை வல்லுறவு செய்ததாகத்தான் சட்டம் எடுத்துக்கொள்கிறது. தொடர்புடையவரைத் தண்டிக்கிறது. இப்போது இந்த வயது வரம்பை 16 ஆகக் குறைத்துவிட்டால், பல வல்லுறவு வழக்குகளில், பணம் கொடுத்தும், மிரட்டியும், "இசைவுக்கலவி' என்பதாக காவல்துறை உதவியுடன் வழக்கை திசைதிருப்பிக் குற்றவாளிக்கு சாதகமாக மாற்றப்படுவதற்கான வாய்ப்பு அதிகம். இது தேவையா?
இன்றைய நாள் வரை பாலியல் தொழிலில் சிறுமிகளை ஈடுபடுத்துவது இந்தியாவில் அரிதாக இருந்து வருகிறது. வயது வரம்பைத் தளர்த்துவதால், 16 வயது சிறுமிகளை ஈடுபடுத்தும் போக்கினை இது அதிகப்படுத்தும்.
சில இடங்களில், சில நேரங்களில் மறைவாக நடந்துகொண்டிருக்கும் சிறார்களின் திசைமாறல்,அத்துமீறல் அல்லது வன்கொடுமைகளை, நாடு முழுமைக்கும் சட்டப்படி பொதுமைப்படுத்துவது சரியல்ல. இது பாலினக் கவர்ச்சியில் இயல்பாகவே எழும் உள்ளுணர்வு சார்ந்த தடையை, அச்சத்தை, இல்லாமலாக்கிக் காமத்தை தாராளமயமாக்கிவிடும். கலாசாரச் சீரழிவை ஏற்படுத்திவிடும்.
இளவயதிலேயே பாலியல் தூண்டுதலுக்கு வடிகால் அமையுமானால், பாலியல் கொடுமை, வல்லுறவு ஆகிய குற்றங்கள் குறையும் என்று மத்திய அரசு கருதினால் அது அறிவுடைமை அல்ல. இந்திய விடுதலைக்கு முந்தைய காலகட்டத்தில் குழந்தைத் திருமணத்தால் எத்தகைய தீமைகள் விளைந்தனவோ அதற்குச் சற்றும் குறைவில்லாத தீமைகள் இந்த வயது குறைப்பிலும் வந்து சேரும் என்பதை அரசு உணர வேண்டும்.
இன்றைய தேவை - 16 வயதுச் சிறுவன் வல்லுறவு குற்றத்தில் ஈடுபட்டால், அந்தக் குற்றத்தின் தன்மை கருதி அவனைச் சிறுவனாகக் கருதாமல், 18 வயது நிரம்பியவரை விசாரிப்பது போல விசாரிக்கவும் தண்டிக்கவும் வேண்டும் என்பதுதான். "நிர்பய' வழக்கு நமக்கு உணர்த்துவதும் இதைத்தான்.
புதிய மசோதாவில் "பாலியல் தாக்குதல்' என்பதை "வல்லுறவு' என்று மாற்றித் திருத்தப்பட்டுள்ளது. வல்லுறவு என்பது ஒரு பெண்ணிடம் ஆண் நிகழ்த்தும் பாலியல் வன்கொடுமை என்பதாக மட்டுமே பார்க்கப்பட வேண்டும் என்பது சரியான வாதம் என்றாலும், மறுசிந்தனைக்கு உரியது.
சிறுவர்களைப் பெண்கள் தமது இச்சைக்குப் பயன்படுத்திக்கொண்டாலோ, அல்லது சிறார் அல்லது ஆணை மற்ற ஆண்கள் பயன்படுத்திக்கொண்டாலோ அதனை வல்லுறவு என்று கருதக்கூடாது என்ற எண்ணத்தில் இந்தத் திருத்தம் செய்யப்படுகிறது. அது அப்படியாகவே இருந்தாலும், "வல்லுறவு அல்லது பாலியல் தாக்குதல்' என்பதாக மாற்றப்படுவதுதான் சரியானதாக இருக்கும்.
அப்போதுதான், பாதிக்கப்பட்டவர் பெண்ணாக இருந்தால் வல்லுறவு என்ற வகைப்பாட்டிலும், பாதிக்கப்பட்டவர் சிறுவர் அல்லது ஆணாக இருந்தால் பாலியல் தாக்குதல் என்ற வகைப்பாட்டிலும் உறுதிபட ஒரே விதமான தண்டனை கிடைக்க வழியேற்படும்.
நுகர்வோர் கலாசாரமும், உலகமயமாக்கலும் மிக அதிகமான கலாசாரச் சீரழிவுகளையும், வக்கிரத்தனங்களையும் ஏற்படுத்தி இருப்பது 16 முதல் 18 வயதான வயதுப் பிரிவினரிடம்தான். இன்றைய தேவை இசைவுக் கலவிக்கான வயதைக் குறைப்பதல்ல; 18 வயதுக்குக் கீழேயுள்ள சிறார்கள் மத்தியில் காதல், கலவி போன்ற போக்குகளைத் தடுத்து நிறுத்துவது, பள்ளிக்கூட மாணவர்களின் காதலைக் கருவாக்கித் திரைப்படங்கள் எடுக்கும் போக்கு உள்ளிட்ட செயல்பாடுகளை சட்டப்படி தண்டனைக்கு உள்ளாக்குவதே!
 

Sunday 3 March 2013

திருத்துங்கள் சட்டத்தை!

சிறார் நிர்ணய வயதை 18-லிருந்து குறைக்கும் திட்டம் அரசிடம் இல்லை என்று மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் கிருஷ்ணா தீரத் இரு நாள்களுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
 அதேவேளையில், புதுதில்லியில், பேருந்தில் பயணம் செய்த 23 வயதான துணை மருத்துவ மாணவி மீது பாலியல் தாக்குதல், வல்லுறவு, கொலை, குழுவாகச் சேர்ந்து சதித்திட்டம் தீட்டியது, தடயங்களை அழித்தது ஆகிய குற்றங்களுக்காக 17 வயது வளர்இளம் பருவச் "சிறுவன்' மீது சிறார் நீதிமன்றத்தில் குற்றப்பதிவு தாக்கல் செய்யப்பட்டது. இத்தகைய குற்றங்களைச் செய்திருப்பவரை ஒரு சிறுவனாகக் கருத முடியுமா? இவை சிறுவன் செய்யக்கூடிய செயல்கள்தானா? என்கிற நியாயமான கேள்வி எழுகிறது.
 அண்மையில் குழந்தைகள் பாதுகாப்புச் சட்டத்தில் சிறுவன் என்பதற்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள வயது 18. இதை 16 ஆகக் குறைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடுக்கப்பட்டது. தில்லி வழக்கில் 17 வயது உள்ளவரை சிறுவனாகக் கருதுவது, அரசியல் சட்டத்தின் பிரிவு 14 வழங்கும் சம உரிமை, பிரிவு 21 வழங்கும் வாழ்வுரிமை மற்றும் தனியுரிமை ஆகியவற்றைப் பாதிப்பதாக இருக்கிறது என்பது இந்த பொதுநல வழக்கைத் தொடுத்தவரின் கருத்து. இந்த வழக்கு தொடர்பாக மத்திய அரசு கருத்துத் தெரிவிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றமும்கூட அறிவுறுத்தியிருந்தது.
 இந்நிலையில், மாநிலங்களவையில் எழுத்துமூலமாக அமைச்சர் அளித்த பதிலில்,  சிறார் வயதைக் குறைக்கும் எந்த திட்டமும் அரசிடம் இல்லை என்பது தெளிவாக்கப்பட்டுள்ளது.
 துணை மருத்துவ மாணவி தில்லியில் டிசம்பர் 16-ஆம் தேதி அடைந்த துயரகதிக்கு, இந்தச் சிறுவன் மீது எத்தனை பிரிவுகளில் வழக்குகள் போட்டாலும், இதனால் அவருக்குக் கிடைக்கப்போகும் தண்டனை என்னவாக இருக்க முடியும்? இந்தக் கும்பலில், அந்தப் பெண்ணுக்கு மிகஅதிகமான  கொடுமைகளை இழைத்தது இந்த 17 வயது சிறுவன்தான். ஆனாலும், தற்போது பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு அவசர சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ள தண்டனைகள் எதுவுமே இந்த சிறுவனுக்குப் பொருந்தாது. இது நன்றாகத் தெரிந்தும் சிறார் வயதைக் குறைக்கும் திட்டம் அரசிடம் இல்லை என்றால் எப்படி?
 மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் நடத்தப்பட்ட மாநில தலைமைச் செயலர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் கூட்டத்தில், சிறார் நிர்ணய வயதைக் குறைக்க பரிந்துரைக்கப்பட்டது. இருந்தாலும், வர்மா கமிஷன் அறிக்கையில், இவ்வாறு சிறார் வயதைக் குறைப்பதை ஆட்சேபித்துள்ளதைச் சுட்டிக்காட்டி சிறார் நிர்ணய வயதைக் குறைக்கும் திட்டம் இப்போது அரசிடம் இல்லை என்று விவகாரத்தைக் கிடப்பில் போடுவது சரியல்ல.
 திருடுதல், வழிப்பறி, கொள்ளை ஆகிய குற்றங்களில் ஈடுபடும் 18 வயதுக்கு உட்பட்டவரைச் சிறார் சட்டத்தில் தண்டிப்பது சரியானதுதான். சில தருணங்களில் கொலையும்கூட சிறார் தண்டனைச் சட்டத்திற்குப் பொருந்தும். ஆனால், வல்லுறவு மற்றும் பெண்கடத்தல், பெண்ணைத் தூக்கிச்செல்லுதல் ஆகிய குற்றங்களில் ஈடுபடும் ஆண், 18 வயது நிரம்பாதவர் என்பதால், அவரை சிறார் என்று சொல்லிவிட முடியுமா?
 இன்றைய சமூகச் சூழலும், ஊடகங்களும், தகவல் தொழில்நுட்பத்தால் காணக் கிடைக்கும் தடையற்ற ஆபாசங்களும் இளைஞர்களை சுமார் 15 வயதிலேயே பாலியல் வேட்கை அதிகம் உள்ளவர்களாக மாற்றிவிடுகின்றன. இதன் விளைவாக காதல் சார்ந்த தகராறுகள் அதிகரித்துள்ளன. வல்லுறவு, பெண்கடத்தல், பெண்ணைத்தூக்கிச் செல்லுதல் ஆகிய குற்றங்களில் 18 வயது நிரம்பாத சிறுவர்கள் ஈடுபடுவதும் அதிகரித்துள்ளது.
 நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் அளித்த, தேசிய குற்ற வழக்குகள் பதிவகத்தின் புள்ளிவிவரத்தின்படி, 2009, 2010, 2011 ஆகிய மூன்று ஆண்டுகளில் தில்லி பெருநகரில் மட்டும், கொலைக் குற்றத்தில் ஈடுபட்ட சிறார் எண்ணிக்கை முறையே 57, 35, 37. அதாவது குறைகிறது. ஆனால் அதே தில்லியில், வல்லுறவு குற்றத்தில் ஈடுபட்ட சிறார் எண்ணிக்கை மூன்று ஆண்டுகளில் முறையே 26, 37, 47. ஆண்டுதோறும் அதிகரிக்கிறது. பெண்கடத்துதல், தூக்கிச்செல்லுதல் ஆகிய குற்றங்களில் ஈடுபட்ட சிறார் முறையே 8, 11, 30. ஆண்டுதோறும் கூடுகிறது.
 இந்தப் புள்ளிவிவரம் தில்லி மாநகருக்கு மட்டுமானது என்றாலும், ஏறக்குறைய இதே நிலைமைதான் இந்தியா முழுவதிலும் என்று உணரலாம்.
 தற்போது தில்லி மாணவி வழக்கில், 17 வயது என்கின்ற ஒரே காரணத்துக்காக கடுமையான தண்டனையிலிருந்து அந்தக் குற்றவாளி தப்பிவிடுவார் என்றால், இது ஒரு தவறான முன்னுதாரணமாக ஆகிவிடும். வல்லுறவுக் குற்றத்தில் ஈடுபடுபவரை நிச்சயமாக சிறுவனாகக் கருத முடியாது. ஆகவே, குற்றத்தின் அடிப்படையில் அவரை "வளர்ந்த மனிதன்' என்றே பார்க்க வேண்டும்.
 சிறார் நிர்ணய வயதை 16 ஆகக் குறைக்கும்போது, அது சிறுமிகளுக்கும் பொருந்தும் என்பதாலும், அத்தகைய நிலையில் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் மகளிர் அநீதிக்கு ஆளாக நேரிடலாம், வேறு சட்ட சிக்கல்கள் எழக்கூடும் என்கின்ற அச்சம் அரசுக்கு இருந்தால் அது நியாயமானதுதான்.
 இருப்பினும், "16 வயது முதல் 18 வயது வரையிலான ஒரு ஆண், வல்லுறவு குற்றத்தில் ஈடுபட்டது உறுதிப்படுத்தப்பட்டால், குற்றத்தின் தன்மையைக்கொண்டு அவரைச்  சிறுவனாகக் கருத வேண்டியதில்லை' என்று சட்டத்திருத்தம் செய்து, குற்றத்தின் அடிப்படையில் அவரைத் தனிமைப்படுத்துவது மட்டுமே இதற்கான தீர்வாக இருக்க முடியும்.
 பெரிய வீட்டுப் பிள்ளைகளைக் காப்பாற்றுவதற்காகத்தான் சட்டத்திருத்தம் கொண்டுவர அரசு தயங்குகிறதோ என்கிற சந்தேகம் ஏற்படுகிறது. இந்திய நாடாளுமன்றம் ஆணாதிக்கவாதிகளின் கூடாரமாகிவிடக் கூடாது. பெண்களைத் தெய்வமாக மதிக்கும் இந்தியாவில் சட்டங்கள் பெண்களுக்கு எதிராகவும், பெண்களுக்கு அநீதி இழைப்பவர்களுக்கு சாதகமாகவும் இருத்தலும் கூடாது!

Wednesday 20 February 2013

அரங்கேறும் வக்கிரங்கள்!

இத்தனை நாளும் சமுதாய அவமதிப்புக்கு உள்ளாக நேருமோ என்கிற அச்சத்தில் மௌனமாகத் தங்கள் மீது தொடுக்கப்பட்ட வன்கொடுமையைச் சகித்துக் கொண்டிருந்த பெண்கள், இப்போது துணிந்து குற்றவாளிகளைச் சட்டத்தின் முன் நிறுத்த முற்பட்டு வருகிறார்கள் என்பது வரவேற்கப்பட வேண்டிய மாற்றம்.
 இந்த அளவுக்கு வக்கிரத்தனம் பிடித்த, அப்பாவிப் பெண்கள் மீது பாலியல் தாக்குதல் நடத்தும் அநாகரிகமான சமுதாயமாக நாம் மாறிவிட்டிருக்கிறோமே, அது எதனால்? விவரம் தெரியாத சிறுமியர், தகப்பன், பாட்டன் வயதையொத்தவர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகும் சம்பவங்களை ஜீரணிக்கவே முடியவில்லையே, பிறகல்லவா நடுத்தர வயதினரின் அநாகரிக வக்கிரங்களைப் பற்றி விவாதிக்க!
 முறை தவறிய உறவு முறைகள், காரணமே இல்லாத விவாகரத்துகள், அநாகரிகமான உணர்வுகளின் வெளிப்பாடுகள் இவையெல்லாம் மேலைநாட்டு நாகரிகத்தின் கூறுகள் என்று நம்மால் எள்ளி நகையாடப்பட்டதுபோய், மேலைநாட்டார் இந்தியாவை வக்கிரத்தனத்தில் ஊறிப் போயிருக்கும் தேசம் என்று முகம் சுளிக்கும் அளவுக்கு, பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் ஒன்றன் பின் ஒன்றாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்திய நாகரிகத்தின் மிகப்பெரிய பலமாகவும், உயர்வாகவும் கருதப்பட்ட தாய்மைக்கும் பெண்மைக்கும் தரப்பட்ட அங்கீகாரம் எல்லாம் வெறும் போலித்தனமானது என்றல்லவா  சமீபத்திய சம்பவங்கள் தோலுரித்துக் காட்டுகின்றன...
 கடந்த 20 ஆண்டுகளாக, சந்தைப் பொருளாதாரமும், நுகர்வோர் கலாசாரமும் வேரூன்றிவிட்ட நிலையில், ஏற்பட்டிருக்கும் சமுதாய மாற்றங்கள்தான், பெருகி வரும் இந்தப் போக்குக்குக் காரணம் என்று தோன்றுகிறது. குடும்பக் கட்டுக்கோப்புக் குலைந்து, நாகரிகம் என்கிற போர்வையில் ஒழுக்கக் கேடுகள் சமுதாய அங்கீகாரம் பெறத் தொடங்கி இருப்பதும், கல்வி என்பது ஒழுக்கத்தையும், நேர்மையையும், வாழ்க்கை நெறிமுறைகளையும் உணர்த்தாமல் வேலைவாய்ப்பை மட்டுமே முன்னிறுத்தி கற்பிக்கப்படுவதும் இந்தப் போக்குக்கு உறுதுணையாக இருக்கின்றன.
 இறைநம்பிக்கை குறைந்ததுகூட, இன்றைய வக்கிரத்தனங்களுக்குக் காரணமாக இருக்கக் கூடும். தவறு செய்தால் தெய்வம் தண்டிக்கும் என்கிற அச்ச உணர்வும், சமுதாய ஏளனத்துக்கு நாம் ஆளாக நேரும் என்கிற பயமும் இல்லாமல் போய்விட்ட சூழல், தவறுகளுக்குக்  கதவுகளைத் திறந்து வைக்கிறது.
 முன்பே ஒருமுறை தலையங்கத்தில் குறிப்பிட்டிருந்ததுபோல, கற்பைவிட சுகம்தான் பெரிது என்று பெண்களும், ஒழுக்கத்தையும் கௌரவத்தையும்விட பணம் சம்பாதிப்பதுதான் முக்கியம் என்று ஆண்களும் கருதிவிட்டால் அந்தச் சமுதாயத்தைச் சீர்கேடிலிருந்து காப்பாற்றவே முடியாது. ஆனால், அரங்கேறிவரும் பாலியல் கொடுமைகள் ஒருபடி மேலே போய், வக்கிரத்தனத்தை எட்டி விட்டிருப்பதுதான் அதிர்ச்சியிலும் பேரதிர்ச்சியாக இருக்கிறது.
 ஓரினச் சேர்க்கை, திருமணமாகாமல் சேர்ந்து வாழ்வது, இயற்கையை மீறிய திருமண பந்தங்கள், சின்னச் சின்னப் பிரச்னைகளுக்கும்கூட விவாகரத்து என்பவை எல்லாம் சமுதாயத்தில் சர்வ சாதாரணமான நிகழ்வுகளாக மாறிக் கொண்டிருப்பதை நாகரிகம் என்று இந்தியச் சமுதாயமும் ஏற்றுக்கொள்ளுமேயானால், அதைவிடப் பெரிய பேராபத்து வேறு எதுவாகவும் இருக்க முடியாது. உலகுக்கு வாழ்ந்து காட்டி வழிகாட்ட வேண்டிய இந்தியா, வழி தவறி வேறு எங்கோ பயணித்துக் கொண்டிருக்கிறதோ என்கிற அச்சம் ஆட்கொள்கிறது.
 அரங்கேறிவரும் இந்த வக்கிரங்களுக்கு எல்லாம், நமது ஊடகங்களும் துணை போகின்றன என்பதுதான் நம்மை முகம் சுளிக்க வைக்கிறது. கலையும் இலக்கியமும் இந்தியாவில் மக்களின் மனதைப் பண்படுத்தவும், நாகரிகத்தை மேம்படுத்தவும் பயன்பட்டதுபோய், வியாபாரமாகிவிட்ட விபரீதம்தான் இதற்குக் காரணம். அது திரைப்படங்களாக இருந்தாலும், தொலைக்காட்சி சேனல்களாக இருந்தாலும், தினசரி, வார இதழ்களாக இருந்தாலும், வியாபாரம் என்கிற பெயரில் விரசத்தையும், வக்கிரத்தையும் நாகரிகத்தின் வெளிப்பாடுகளாகச் சித்திரிக்கும் போக்கு, மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
 பரபரப்பை மட்டுமே முன்னிறுத்தி செயல்படும் 24 மணிநேர செய்திச் சேனல்களும், பத்திரிகை தர்மம், நனிநாகரிகம் பற்றி எல்லாம் கவலையேபடாத வாரம் இருமுறை வெளிவரும் புலனாய்வு இதழ்களும், களவியல் சம்பவங்களையும், கொலை, கொள்ளை, கற்பழிப்பு நிகழ்வுகளையும் முன்னிலைப்படுத்தும் தினசரிகளும், சமுதாயத்தில் மலிந்துவரும் சீர்கேடுகளுக்கும் வக்கிரங்களுக்கும் காரணமாக இருக்கின்றன என்பதை யாரால் மறுக்க முடியும்? சமுதாயத்துக்கு வழிகாட்ட வேண்டிய ஊடகங்களே வியாபாரத்திற்காக வக்கிரத்தைக் கடை விரிப்பதால் ஏற்படும் பாதிப்புகள்தான், அரங்கேறிக் கொண்டிருக்கும் அநாகரிகங்கள்.
 மூலைக்கு மூலை திறக்கப்பட்டிருக்கும் மதுபானக் கடைகளும்; தெருவெங்கும் அசைவ உணவைப் பரிமாறும் துரித உணவகங்களும், கையேந்தி பவன்களும், அதிகரித்து விட்டிருக்கும் அசைவ உணவுப் பழக்கமும் உணர்ச்சிகளை அதிகரித்து, சாத்வீக குணத்தை மழுங்கடித்து விடுகின்றன என்கிற உண்மையை நாம் எப்போது உணரப் போகிறோம்? அவை மனிதனுக்குள் ஒளிந்து கொண்டிருக்கும் மிருக உணர்வுகளைத் தூண்டிவிடும் என்பது விஞ்ஞானம் ஏற்றுக்கொண்டிருக்கும் உண்மை.
 விரசத்தை வெளிச்சம்போட்டு வியாபாரம் செய்யும் ஊடகங்கள்; ஒழுக்கத்தைக் கற்றுக் கொடுக்காமல் வேலைவாய்ப்புக்காகவும், பணம் சம்பாதிக்கவும் மட்டுமே உதவும் கல்விச்சாலைகள்; பாசம் என்கிற பெயரில், குடும்ப உறவுகளையும், நல்ல பண்புகளையும் ஒதுக்கி வைத்துவிட்டுக் குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர்கள், மக்கள் நலனையும், வருங்கால சந்ததிகளையும் பற்றிக் கவலைப்படாமல் அன்னிய முதலீடு கிடைத்தால் போதும் என்று செயல்படும் அரசாங்கம் - வக்கிரங்கள் விஷக்கிருமிகளாய் வளராமல் என்ன செய்யும்?

Tuesday 8 January 2013

வேலியே பயிரை மேய்ந்தால்...

பெண்களின் பாதுகாப்பு மற்றும் பாலியல் கொடுமை வழக்குகள் தொடர்பாக அனைத்து மாநிலங்களும் எடுத்துள்ள நடவடிக்கை என்ன?'' என்று உச்ச நீதிமன்றம் கேட்கும் முன்பாகவே, இந்தியாவில் முதல் மாநிலமாக தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பாலியல் கொடுமை வழக்குகள் குறித்து விசாரிக்க விரைவு நீதிமன்றம் அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்துள்ளது பாராட்டுக்குரியது. இத்தகைய வழக்குகளில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக 13 உத்தரவுகளையும் பிறப்பித்துள்ளார்.
இந்த வழக்குகளில் பாலியல் கொடுமைக்கு ஆளாகும் பெண்களின் மருத்துவச் செலவை அரசே ஏற்கும் என்பதும், இந்த வழக்குகளில் அரசுத் தரப்பு வழக்குரைஞர்கள், விசாரணை நடத்தும் காவல்துறை அதிகாரிகள் ஆகியோரும் பெண்களாகவே இருப்பார்கள் என்பதும் வரவேற்கத்தக்கவை. இத்தகைய ஏற்பாடு, பாதிக்கப்பட்ட பெண்களுக்குப் பேருதவியாக அமையும்.
வணிக வளாகம், கடைகள், கல்லூரிகள் உள்ளிட்ட எல்லா இடங்களிலும் ரகசிய கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்படுவது பெண்கள் மீதான பாலியல் அத்துமீறல்களைத் தடுக்க உதவும். ஆனால், அது மட்டுமே பிரச்னையைக் குறைத்துவிடாது.
பாலியல் வன்கொடுமையில் மக்கள் மட்டுமே ஈடுபடுகிறார்கள் என்பதில்லை. பல சம்பவங்களில் காவல்துறையினரே ஈடுபட்டுள்ளனர். அண்மையில் விழுப்புரம் அருகே தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண், காவல்துறையினர் தன் மீது நடத்திய பாலியல் அத்துமீறல்கள் குறித்து புகார் கொடுத்து, தொடர்புடையோர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அந்த வழக்கு அத்துடன் மறக்கப்பட்டுவிட்டது.
வாச்சாத்தி சம்பவத்தில், பல ஆண்டுகள் கழித்து தீர்ப்பு கிடைத்தும் மேல்முறையீடு நடந்துகொண்டிருக்கிறது. காவல்நிலையத்தில் பாலியல் அத்துமீறலுக்கு ஆளாகும் பெண்களில் சிலர்தான் அதுபற்றிப் பேசுகிறார்கள். கெட்ட வார்த்தைகள் பேசி பெண்களைக் காவல்துறையினர் கூசிக்குறுகி நிற்க வைப்பது, பாலியல் அத்துமீறலுக்கு சமமான குற்றம். அதன் விளைவாகக் காவல்நிலையத்திலிருந்து திரும்பியதும் பெண்கள் தற்கொலை செய்துகொண்ட சம்பவங்களும் உள்ளன.
மகளிர் காவல்நிலையங்கள், காவல்துறையின் உயர் அதிகாரிகளின் பேச்சுக்கு கட்டுப்பட்டு, சும்மா இருப்பதைத் தவிர வேறு வழியில்லாமல் இருக்கின்றன. அரசியல்வாதிகளும், காவல்துறையும் சேர்ந்து எதையும் செய்ய முடியும் என்ற நிலைமை மாறிவிடவில்லை என்பதுதான் நடைமுறை உண்மை.
பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணுக்கு உடனடியாக மருத்துவப் பரிசோதனை செய்வதும் தடய அறிவியல் ஆய்வை முடிப்பதும் வழக்கிற்கு மிகவும் இன்றியமையாதவை. இதனைச்செய்ய வழக்குப் பதிவு அவசியமாகிறது. வல்லுறவு வழக்குகளில், இந்த அரசியல் மற்றும் காவல்துறை கூட்டணியின் முதல் வேலை, காலதாமதம் செய்து தடயங்களை இயற்கையாகவே அழிந்துபோகச் செய்வதுதான். ஆகவே, பாலியல் வல்லுறவுக்கு ஆளான பெண், தன் உடலில் தங்கிய தடங்கள் அழியும் முன்பாக, ஒரு மாவட்ட ஆட்சியர் அல்லது மாவட்ட நீதிபதி முன்பாக புகார் கொடுத்து, நேரடியாக மருத்துவப் பரிசோதனை, தடய அறிவியல் ஆய்வுக்கு உட்படச் செய்வதும், இதில் அந்தப் பெண்ணுக்கு உதவிட மகளிர் அமைப்புகளை துணைநிற்க ஊக்கப்படுத்துவதும்தான் பெண்களுக்கு நியாயம் கிடைக்க உதவும்.
பாலியல் கொடுமைகள் ஆண்களால் மட்டுமே நடத்தப்படுவதில்லை. விழுப்புரம் தனியார் பள்ளியில் ஒரு நர்சரி மாணவிக்கு பாலியல் கொடுமையை நிகழ்த்திய புகாரில் கைதானவர்கள் வகுப்பு ஆசிரியை மற்றும் தலைமையாசிரியைதான். சிறுவர்களும்கூட, ஆண்களாலும் பெண்களாலும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறார்கள் என்பதை மறந்துவிடக்கூடாது. இத்தகைய நேர்வுகளில் எத்தகைய நடவடிக்கை, பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நியாயம் கிடைக்க உதவும் என்பதையும் யோசிக்க வேண்டும்.
மேலும், பாலியல் அத்துமீறல், வல்லுறவு ஆகிய குற்றங்களில் ஈடுபடுவோரில் 18 வயதுக்குக் குறைந்தவர்கள் அதிகரித்து வருவதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அதைப் பற்றியும் நாம் தீவிரமாகச் சிந்தித்து சட்டத்தில் சேர்த்தாக வேண்டும்.
தில்லியில் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமைக்கு பலியான சம்பவம் இந்தியா முழுவதையும் உணர்வுக் கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளதால், தற்போது இத்தகைய நடவடிக்கைகளுக்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. எனினும், நாளடைவில் இந்த நடவடிக்கைகளுக்கு மெல்ல எதிர்ப்புகள் கிளம்பும். சட்டவிதிகளைத் தளர்த்தவும் மாற்றவும் கோருவார்கள்.
பாலியல் பலாத்காரத்தில் சாதாரண குடிமகன்கள் தண்டனை பெறும்போது பாராட்டும் இதே அரசியல்வாதிகள், அவர்களது உறவினர்களும், கட்சிக்காரர்களும் தண்டனை பெறும்போது, பொய்ப் புகார் என்றும், சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்றெல்லாம் எதிர்ப்புக்குரல் கொடுக்கத் தொடங்குவர்.
ஒரு தொலைக்காட்சியில், தற்போதைய நடவடிக்கைகள் குறித்த பார்வையாளர்கள் கருத்துகளைக் கேட்கும்போது ஒரு தொகுப்பாளினி கேட்கிறார்: "இந்தச் சட்டம் தவறாகவும் பயன்படுத்த வாய்ப்பு இருக்கிறதல்லவா'? அதற்கு தொலைபேசியில் பேசும் பார்வையாளர், "ஆமாம். நிலப்பறிப்பு வழக்குகள்போல, எந்த அடிப்படையும் இல்லாமல் வழக்குத் தொடுத்திட முடியும். உடனே ஒரு வருஷம் குண்டர் சட்டத்தில் போடலாம்' என்கிறார். பெண்களுக்கு பாதுகாப்பு தரும் நடவடிக்கைகளுக்கு எதிராக இப்போதே "விதை தூவ'த் தொடங்கிவிட்டார்கள்!
இத்தனை களேபரம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறதே, எத்தனை காவல்நிலையங்களில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்களுக்கு என்னென்ன உரிமைகளும், உதவிகளும் தரப்படும் என்று கண்ணில் படும்படி ஏதாவது தகவல் பலகை வைக்க முன்வந்திருக்கிறார்களா? இந்தியா முழுவதும் காவல்துறை பெண்களுக்குப் பாதுகாப்பாக இருந்துவிட்டாலே இந்தக் குற்றங்கள் 90% குறைந்துவிடுமே... காக்கிச் சட்டை குற்றவாளிகள் இல்லாமல் இருப்பதை உறுதி செய்யாதவரை, சட்டம் போட்டும் பயனிருக்காது.