பதிவுகள்

Wednesday 29 February 2012

துப்பாக்கியல்ல தீர்வு!

அண்மையில் நடந்தேறிய இரண்டு வங்கிக் கொள்ளைகள் எந்த அளவுக்கு அதிர்ச்சியை அளித்ததோ அதைவிட அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது, நள்ளிரவில் நடந்த காவல்துறையின் அதிரடி நடவடிக்கை. கொள்ளைக்காரர்களைக் காவல்துறையினர் பிடித்துச் சட்டத்தின் முன் நிறுத்தியிருந்தால் அதைத் தமிழக காவல்துறையின் திறமை, சாதனை என்று போற்றிப் பாராட்டலாம். எந்தவித வலுவான ஆதாரங்களோ சாட்சியங்களோ இல்லாமல், ஐந்து பேரைக் குற்றவாளிகள் என்று காவல்துறையே தீர்மானித்து அவர்களைச் சுட்டும் கொன்றுவிட்டிருப்பதை, கடமையைச் செய்திருக்கிறது காவல்துறை என்று அங்கீகரிக்க முடியவில்லை.
 வழக்கமாக எல்லா என்கவுன்டர் மரணங்களிலும் நடப்பதுபோல, காவல்துறையைச் சேர்ந்தவர்களுக்குத் துப்பாக்கித் தோட்டாக்கள் உராய்ந்து காயம் ஏற்பட்டிருக்கிறது. குற்றவாளிகள் என்று கருதப்படுபவர்கள் மட்டும் மரணமடைந்திருக்கிறார்கள். கதவை உடைத்ததற்கான அடையாளமோ கொலையுண்டவர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையில் பெரிய அளவிலான போராட்டம் நடந்ததற்கான அடையாளமோ இல்லை என்பது ஒருபுறம் இருக்க, காவல்துறையினரால் அடையாளம் காணப்பட்ட நபர்கள் அவர்களே அல்ல என்று தேசியக் காட்சி ஊடகங்கள் வெளிச்சம் போட்டு வேறு காட்டுகின்றன.
 வங்கிக் கொள்ளையும், அதில் தொடர்புள்ள குற்றவாளிகளைப் பிடிப்பதும் அல்ல பிரச்னை. குற்றவாளிகள் என்று சந்தேகிக்கும் நபர்களை அதற்குப் போதுமான ஆதாரமோ, சாட்சியமோ இல்லாமல், அவர்களிடம் எந்தவித விசாரணையும் மேற்கொள்ளாமல் தண்டிக்கும் உரிமை காவல்துறைக்கு உண்டா இல்லையா என்பதுதான் இந்த என்கவுன்டர் சம்பவம் எழுப்பும் மிக முக்கியமான கேள்வி.
 குற்றவாளிகள் என்று கருதப்படும் ஐந்து பேரில் ஒருவரையாவது உயிருடன் பிடித்து நீதிமன்றத்தின் முன்னால் நிறுத்தி இருந்தால், காவல்துறை தற்காப்புக்காகத்தான் துப்பாக்கிச் சூட்டில் இறங்கியது என்று நாம் ஏற்றுக்கொள்ள முடியும். இப்போது, நம்முன் ஓடுகின்ற கேள்வி, அந்த ஐந்து பேரில் ஒருவர் அல்லது இருவர் இந்தக் கொள்ளையில் தொடர்பே இல்லாதவராக இருந்திருந்தால், விவரம் தெரியாமல் குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்திருந்தால், அவரும் கொல்லப்பட்டிருப்பாரே, அது எந்த வகையில் நியாயம் என்பதுதான்.
 ""சட்டம்-ஒழுங்கு கெட்டுவிட்டது. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, திருட்டு என்று சமூக விரோதக் கும்பல்களின் நடமாட்டம் அதிகரித்துவிட்டது. இந்த நிலையில் இதுபோல சில அதிகார அத்துமீறல்களை அங்கீகரிப்பதால், சமூக விரோதிகளுக்குப் பயம் இருக்கும்'' என்பது காவல்துறையினரின் வாதமாக இருந்தால் அது ஏற்புடையதல்ல. சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கும், சமூக விரோதிகளை ஒடுக்குவதற்கும் துப்பாக்கியைப் பயன்படுத்துவது என்பதை சட்டத்தின் ஆட்சியில் அனுமதிக்க முடியாது.
 தீவிரவாதிகள், தேசத் துரோகிகள், சதித்திட்டத்தில் ஈடுபடுபவர்கள் போன்றவர்களிடத்தில் காவல்துறை கையாளும் அணுகுமுறையை கொலை, கொள்ளை, திருட்டு போன்ற சமூகவிரோதச் செயல்களில் ஈடுபடுவோரிடம் கையாளக் கூடாது. காவல்துறை என்கவுன்டரைத் தனது ஆயுதமாகப் பயன்படுத்துவது தெரிந்தால் இதுவரை கத்தி, கைத்துப்பாக்கி என்று மட்டுமே செயல்பட்டு வரும் குற்றவாளிகள் இனிமேல் ஏகே 47, வெடிகுண்டு என்று தொழில்நுட்பத்தை வளர்த்துக் கொள்ளத் தொடங்குவார்கள். அப்போது, அவர்களை எதிர்கொள்ளவே முடியாத நிலைக்குப் பழைய ரைபிள்களை வைத்துக் கொண்டிருக்கும் காவல்துறை தள்ளப்படுமே, அதை யோசித்துப் பார்த்தார்களா?
 காவல்துறை சட்ட-ஒழுங்கை நிலைநாட்டவும் சமூக விரோதிகளை ஒடுக்கவும் பல இடையூறுகளை எதிர்கொள்ள நேர்கிறது என்பது உண்மை. சமூக விரோதிகளில் பெரும்பாலோருக்கு அரசியல் ஆதரவு இருக்கிறது என்பதும் உண்மை. முறையாக விசாரணை நடத்திக் குற்றவாளிகளைக் கூண்டில் நிறுத்தினால், சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தி அவர்கள் நீதிமன்றத்தால் விடுவிக்கப்படுகின்றனர் என்கிற காவல்துறையினரின் ஆதங்கத்திலும் நியாயம் இருக்கிறது. அதற்காக, நீதி பரிபாலனத்தைக் காவல்துறையே எடுத்துக் கொள்வதா என்ன?
 குற்றவியல் சட்டத்தின் அடிப்படைத் தத்துவமே, நூறு குற்றவாளிகள் தப்பித்தாலும்கூடத் தவறில்லை. ஒரு நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது என்பதுதானே தவிர, நூறு நிரபராதிகள் ஒரு குற்றவாளியைத் தண்டிப்பதற்காகக் கொலை செய்யப்படலாம் என்று சொல்லவில்லை. சட்டத்தை மக்கள் எப்படிக் கையில் எடுத்துக்கொள்ள முடியாதோ அதேபோலக் காவல்துறையும் நீதிபரிபாலனத்தை, இன்னார் குற்றவாளி, இன்னார் நிரபராதி என்று தீர்ப்பளித்து அவர்களுக்குத் தண்டனை பிறப்பிப்பதைத் தனது கையில் எடுத்துக் கொள்வதை அனுமதிக்க முடியாது.
 சமூக விரோதிகளை அடக்குவதற்கும், சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவதற்கும் காவல்துறை அத்துமீறுவதை அனுமதிக்க வேண்டும் என்று சொல்பவர்கள் அதன் பின்விளைவுகளைப் பற்றி யோசிக்காமல் பேசுகிறார்கள். யார் குற்றவாளி, யார் நிரபராதி என்பதைக் காவல்துறை தீர்மானித்துத் தீர்ப்பளிக்க அனுமதித்துவிட்டால், ஆட்சியாளர்களின் கைப்பாவையாக அந்தத் துறை செயல்பட்டு எதிர்ப்பாளர்கள் அனைவரையும் வாயடைக்கச் செய்யும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டு விடுவோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். தட்டிக் கேட்கவோ, விமர்சனம் செய்யவோ, உரிமையே இல்லாத ஒரு சூழலுக்கு இதுபோன்ற செயல்கள் நம்மை நகர்த்திவிடக் கூடும்.
 முதல்வரின் பிறந்த நாள் பரிசாகக் குற்றவாளிகளை உயிருடன் பிடித்து சட்டத்தின் முன் நிறுத்துவதற்குப் பதிலாக, ஐந்து பேரை விசாரணையே இல்லாமல் சுட்டுத் தள்ளி சட்டம் - ஒழுங்கைப் பாதுகாத்ததாகக் கூறிக்கொள்ளும் சென்னை மாநகரக் காவல்துறை ஆட்சிக்கும் காவல்துறைக்கும் களங்கம் ஏற்படுத்தி இருக்கிறது என்பதுதான் உண்மை.
 குற்றவாளிகள் என்று கருதுவோரை காவல்துறை எந்தவித விசாரணையும் இல்லாமல் குருவி சுடுவதுபோல சுட்டுத் தள்ளுவது அல்ல, பெருகிவரும் குற்றங்களைத் தடுப்பதற்கான தீர்வு. காக்கிகளின் கையில் லத்தி இருப்பதையே மனித உரிமை மீறல் என்று சர்வதேச மனித உரிமை ஆணையம் கூறும்போது, காவல்துறையினர் துப்பாக்கித் தீர்ப்பு வழங்குவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?

Tuesday 28 February 2012

தீர்ப்புகள் திருத்தப்படலாம்!

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் அன்றைய நிதியமைச்சராக இருந்த ப. சிதம்பரத்துக்கும் தொடர்பு இருந்ததால் அவரையும் முறைகேட்டுக்கு உடந்தையானவராகக் கருதி வழக்கில் எதிரியாக இணைக்க வேண்டும் என்கிற சுப்பிரமணியன் சுவாமியின் கோரிக்கையை நிராகரித்து விட்டார் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி. சைனி. ஒரு சிலர் லாபமடைந்தனர் என்பதாலும், அரசுக்குப் பேரிழப்பு ஏற்பட்டு விட்டது என்பதாலும் மட்டுமே ஓர் அரசு ஊழியர் எடுத்த கொள்கை முடிவில் குற்றம் காண முடியாது என்கிறது நீதிபதி ஓ.பி. சைனியின் தீர்ப்பு.
இப்படி தீர்ப்பளித்திருக்கும் அதே நேரத்தில், இன்னொரு கருத்தையும் அந்தத் தீர்ப்பில் தெரிவித்திருக்கிறார். 2001-ல் முந்தைய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு எடுத்திருந்த அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கான விலை நிர்ணய முறையில் மாற்றம் தேவையில்லை என்று அன்றைய தகவல், தொலைத் தொடர்பு அமைச்சர் ஆ. ராசாவிடம் அன்றைய நிதியமைச்சர் ப. சிதம்பரம் கூறினார் என்பதற்கும், அந்த முடிவு பிரதமருக்குத் தெரிவிக்கப்பட்டது என்பதற்கும் தெளிவுகள் இருப்பதாக அவர் ஏற்றுக் கொண்டிருக்கிறார். அதுமட்டுமல்ல, அலைக்கற்றை ஒதுக்கீடு பெற்ற நிறுவனங்கள் செயல்படத் தொடங்குவதற்கு முன்பே தங்களது பங்குகளை இன்னொருவருக்கு விற்றதும்கூட அன்றைய நிதியமைச்சர் ப. சிதம்பரத்திற்குத் தெரிந்துதான் நடந்திருப்பதையும் நீதிபதி ஓ.பி. சைனி ஏற்றுக் கொள்கிறார்.
இவ்வளவையும் தனது தீர்ப்பில் கூறிவிட்டு, அன்றைய நிதியமைச்சர் ப. சிதம்பரம்  எந்தவித உள்நோக்கத்துடனும் செயல்படவில்லை என்றும், வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஏனைய 17 எதிரிகளின் மீது சிபிஐ தாக்கல் செய்திருக்கும் சாட்சியங்களைப் போல ப. சிதம்பரம் மீது எதுவும் தரப்படவில்லை என்றும் தீர்ப்பில் கூறியிருக்கிறார்.
நீதிபதி ஓ.பி. சைனியின் தீர்ப்பு பல கேள்விகளை எழுப்புகிறது. அதில் முக்கியமான கேள்வி, ஏனைய 17 எதிரிகள் மீதும் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆவண சாட்சியங்கள் ப. சிதம்பரம் மீது ஏன் இல்லாமல் போனது என்பதுதான். ஆ. ராசாவின் மீது வழக்குத் தொடரப் பிரதமர் அலுவலகத்துடன் போராடி, அது கிடைக்காத நிலையில் நீதிமன்றங்களின் படிகளில் செருப்புத் தேய ஏறி இறங்கிக் கடைசியில் உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் சிபிஐ செயல்படத் தொடங்கிய பிறகுதான் ஆ. ராசா உள்ளிட்ட 17 பேர் மீதும் ஆவணங்களுடனான ஆதாரங்களைத் தாக்கல் செய்ய முடிந்தது. சிபிஐ அதிகாரிகளின் பதவி உயர்வை நிர்ணயம் செய்யும் உள்துறை அமைச்சராக இருக்கும் ஒருவருக்கு எதிராக வழக்குத் தொடர வாய்ப்பளிக்கப்படாமல், அவருக்கு எதிரான சாட்சியங்களை சுப்பிரமணியன் சுவாமியோ, சிபிஐயோ எப்படித் தாக்கல் செய்ய முடியும் என்பதை நீதிபதி ஓ.பி. சைனி ஏன் யோசிக்கவில்லை என்பது தெரியவில்லை.
ப. சிதம்பரத்துக்கு எதிராக சுவாமி தொடர்ந்திருக்கும் வழக்கின் அடிப்படையே, எந்தெந்தக் குற்றங்களுக்காக முன்னாள் அமைச்சர் ஆ. ராசா குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டிருக்கிறாரோ, அந்தக் காரணங்கள் அனைத்தும் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விலை நிர்ணயத்தை அங்கீகரித்த அன்றைய நிதியமைச்சராக இருந்த ப. சிதம்பரத்துக்கும் பொருந்தும் என்பதுதான். அப்படிப் பார்த்தால், ப. சிதம்பரம் குற்றவாளியல்ல என்பதற்கு நீதிபதி ஓ.பி. சைனி கூறும் வாதம் ஆ. ராசாவுக்கும் பொருந்துமே என்கிற வாதம் எழக் கூடும்.
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு என்பது ஒரு நிர்வாக முடிவு. அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கான விலை நிர்ணயமும், உரிமம் பெற்ற நிறுவனங்கள் தங்கள் பங்குகளைக் கொள்ளை லாபத்துக்கு இன்னொருவருக்கு விற்றதும் சட்டப்படி முறைகேடானதல்ல என்று கருத்துத் தெரிவித்திருக்கிறார் நீதிபதி ஓ.பி. சைனி. முதலில் ஒரு நிர்வாக முடிவில் நீதித் துறை கருத்துக் கூற முடியுமா என்பது சட்ட வல்லுநர்கள் தெளிவுபடுத்த வேண்டிய ஒன்று. இரண்டாவது, இதே வாதம் ஆ. ராசாவுக்கும்தான் பொருந்தும் என்பதால் அவர் மட்டும் காராகிரகத்தில் அடைக்கப்பட்டுக் கிடப்பானேன்?
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டிலும், அதன் விலை நிர்ணயத்திலும், உரிமம் பெற்ற நிறுவனங்கள் கொள்ளை லாபத்தில் தங்கள் பங்குகளை விற்று லாபம் சம்பாதித்ததிலும் மிகப்பெரிய முறைகேடு நடந்திருப்பதும், அதனால் அரசுக்கு மிகப் பெரிய இழப்பு ஏற்பட்டிருப்பதும் சிபிஐ நீதிமன்றத்திலிருந்து உச்ச நீதிமன்றம் வரை ஏற்றுக் கொண்டிருக்கும் உண்மை. அதற்கான அடிப்படைக் காரணங்கள் இருப்பதால்தான் சுப்பிரமணியன் சுவாமி வழக்குத் தொடரவே அனுமதிக்கப்பட்டார்.
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், அரசாங்கம் என்றுதான் கூறுகிறதே தவிர அது தனிக்கட்சி அரசா, கூட்டணி அரசா என்று இனம் பிரிப்பதில்லை. அரசின் முடிவு எதுவாக இருந்தாலும் அதற்கு அமைச்சரவை கூட்டுப் பொறுப்பு ஏற்க வேண்டும் என்பதுதான் அரசியல் அமைப்பு. இப்படிப்பட்ட ஒரு அமைப்பில், 2ஜி அலைக்கற்றை உரிமத்துக்கான விலை நிர்ணயத்தை அறிவித்த அமைச்சர் ஆ. ராசா குற்றவாளி, ஆனால் அங்கீகாரம் அளித்த அன்றைய நிதியமைச்சரோ, அமைச்சரவையின் முடிவுக்குத் தலைமை வகிக்கும் பிரதமரோ பொறுப்பல்ல என்பதை எப்படி ஏற்க முடியும்?
முறைகேட்டில் சம்பந்தம் இருப்பதற்கான காரணங்கள் இருக்கிறதா என்பதுதான் நீதிபதி ஓ.பி. சைனியின் பரிசீலனையில் இருந்திருக்க வேண்டுமே தவிர அதற்கான ஆதாரங்கள் இருக்கின்றனவா என்பதல்ல. ஆதாரங்கள் வழக்கு விசாரணையின்போது முன்வைக்கப்படுபவை. உரிமம் வழங்குவதில் ஆ. ராசாவுடன் ப. சிதம்பரத்துக்கும் பங்கு இருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்ளும் நீதிபதி ஓ.பி. சைனி அவர்மீது குற்றம் காண அடிப்படைக் காரணமில்லை என்று கூறியிருப்பது மேல் முறையீட்டில் ஏற்றுக்கொள்ளப்படும் என்று தோன்றவில்லை.
தீர்ப்புகள் திருத்தப்படக் கூடியவை என்பதற்காகத்தான் மேல் முறையீடு முறையே இருக்கிறது. சுப்பிரமணியன் சுவாமியின் ராசி உச்ச நீதிமன்றம் வரை போராடித்தான் வெற்றி அடைய வேண்டும் என்று இருக்கிறது போலும்!