புதுதில்லியில் பாலியல் கொடுமைக்கு எதிரான போராட்டத்தால் மத்திய அரசு அறிவித்த, உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஜே.எஸ். வர்மா தலைமையிலான மூவர் குழு தனது பணியை உடனே தொடங்கிவிட்டது.
பெண்களின் மீதான பாலியல் குற்றங்களைத் தடுப்பது குறித்தும், இதற்கான தண்டனைகள், வழக்கு நடைமுறைகள் குறித்தும் பொதுமக்கள் தங்கள் ஆலோசனைகளை இணையதளத்தின் மூலமாகவும் (த்ன்ள்ற்ண்ஸ்ரீங்.ஸ்ங்ழ்ம்ஹஃய்ண்ஸ்ரீ.ண்ய்) தொலைநகல் மூலமாகவும் (011-23092675) தெரிவிக்கலாம் என்று இக்குழு அழைப்பு விடுத்துள்ளது.
இத்தனை நாள்களாக சமூகவலைத்தளங்களில் கருத்து தெரிவித்தும், போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்தும் எதிர்ப்புத் தெரிவித்துக்கொண்டிருந்த அனைவரும் இனி தங்கள் கோரிக்கைக்கு தாங்களே வலு சேர்க்க வேண்டிய பொறுப்பும் கடமையும் இப்போது ஏற்பட்டுள்ளது. அவரவர் தங்கள் ஆலோசனைகள் வழங்கவேண்டிய நேரம் வந்துள்ளது.
டிசம்பர் 16-ஆம் தேதி துணைமருத்துவ மாணவிக்கு ஏற்பட்ட துயரச் சம்பவத்தில் அனைத்து நடவடிக்கைகளும் வெகுவிரைவாக எடுக்கப்பட்டுள்ளன. இரண்டு காவல் துணை ஆணையர்களின் பணியிடை நீக்கம்; குற்றவாளிகள் 6 பேர் மறுநாளே கைது; விரைவுநீதிமன்றம் ஜனவரி 3-ஆம் தேதிமுதல் நாள்தோறும் விசாரணை நடத்தும் என்ற அறிவிப்பு; தில்லியில் பெண்களின் அவசர உதவிக்கு தொலைபேசி எண் 181 என பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள நிலையில் தில்லி மக்கள் தங்கள் போராட்டத்தை நிறுத்திக்கொள்வதே சரியானதாக இருக்கும். இப்போது இந்த கோபம் முழுவதும், புதிய நடைமுறை, புதிய சட்டம் உருவாக்குவதற்காகத் திருப்பிவிடப்பட வேண்டும்.
மத்திய அரசின் பெண்கள் மற்றும் சிறார் மேம்பாட்டு அமைச்சகத்தின் புள்ளிவிவரப்படி, 2011-ஆம் ஆண்டு இறுதியில் வல்லுறவு வழக்குகளின் எண்ணிக்கை 95,065. இதில் 79,476 வழக்குகளின் விசாரணை நிலுவையில் உள்ளது. பாலியல் அத்துமீறல் (ஙர்ப்ங்ள்ற்ஹற்ண்ர்ய்) வழக்குகள் 1,92,160. இதில் விசாரணை நிலுவையில் இருப்பவை 1,62,777.
பெண்கள் மீதான பாலியல் அத்துமீறல், பாலியல் அணுக்கம், பாலியல் வன்முறை, பாலியல் மிரட்டல், வல்லுறவு போன்ற வழக்குகள் விரைந்து முடிக்கப்படாமல், பல ஆண்டுகள் தள்ளிப்போடப்படுவதற்குக் காரணம், நீதித்துறை மட்டுமே அல்ல. வழக்குரைஞர்களும் காரணம். ஆகவே இத்தகைய வழக்குகளில் தொடர்ச்சியாக விசாரணை நடத்தி, உடனடியாகத் தீர்ப்பு வழங்குவது மட்டுமே பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நியாயம் கிடைக்க வழிசெய்யும். விரைவு நீதிமன்றம் அமைப்பது மட்டுமின்றி, இந்த வழக்குகளில் வாய்தா வழங்கக்கூடாது என்கின்ற நீதித்துறை நடைமுறை மிக இன்றியமையாதது.
மேலும், இத்தகைய வழக்குகளில், பெண்கள் வெளிப்படையாக பேசமுடியாமல் கூசிட வைக்கும் நீதிமன்ற நடைமுறைகளிலும் மாற்றம் தேவை. பாலியல் கொடுமைக்கு இலக்கான ஒரு பெண், தனது வாக்குமூலத்தை ஒரு பெண் நீதிபதியிடம் மட்டுமே சொல்வேன், தன்னிடம் கேள்விகேட்கும் எதிர்த் தரப்பு வழக்குரைஞர் ஒரு பெண்ணாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்த முடியாத நிலையில் பாதிக்கப்பட்ட பெண் பலவற்றை வெளிப்படையாகச் சொல்ல முடியாமல் தவிக்கிறார். ஒரு பெண் தனக்கு இழைக்கப்பட்ட பாலியல் கொடுமையை கூச்சமின்றியும், வார்த்தைகளை முழுங்காமலும் சொல்வதற்கு பெண்நீதிபதி அல்லது காவல்துறை பெண் அதிகாரியிடம் மட்டுமே இயலும். எதிர்த்தரப்பு வழக்குரைஞர் பெண்ணாக இருந்தால்தான், ஒரு ஆண் வழக்குரைஞர் கேட்கக்கூடிய வக்கிரம் பொதிந்த கேள்விகளை அந்தப் பெண்வழக்குரைஞர் கேட்டாலும்கூட, அதற்கு பாதிக்கப்பட்ட பெண் துணிச்சலுடன் பதில் அளிக்க சாதகமாக இருக்கும். பாலியல் கொடுமை தொடர்பான வழக்குகளில் தன்னை விசாரிக்கும் காவல்துறை அதிகாரி, வழக்குரைஞர், நீதிபதி அனைவரும் பெண்களாகத்தான் இருக்க வேண்டும் என்பது அந்த பாதிக்கப்பட்ட பெண்ணின் உரிமையாக மாற்றப்பட வேண்டும்.
அடுத்ததாக, இத்தகைய வழக்குகளில் அதிகபட்சமான தண்டனையாக மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்படுகிறது. இந்த ஆலோசனையை இந்தக் குழுவிடம் பொதுமக்கள் தெரிவிக்கலாம். இத்தகைய வழக்குகளில் தண்டனையை கடுமையாக்க வேண்டும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், மரண தண்டனை கூடாது என்றும், தீவிரவாத வழக்கில் மரண தண்டனை பெற்ற அப்சல் குரு உள்ளிட்ட அனைவரையும் மன்னித்து, தண்டனைக் குறைப்பு செய்ய வேண்டும் என்றும் கருத்துருவாக்கம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் சூழலில், பாலியல் கொடுமைக்கு மரணதண்டனையை நீதிபதிகள் பரிந்துரைப்பார்கள் என்பது சந்தேகமே!
புதுதில்லியில், நன்கு படித்த, நாகரீக இளம்பெண்கள் தாங்கிய பதாகைகளில் காணப்பட்ட வாசகங்கள் பலவும் மேலை நாடுகளில் இதேபோன்ற எதிர்ப்புகளின்போது எழுதப்பட்டவற்றின் மறுபிரதியே. ஆனால் தமிழ்நாட்டில், சில ஆர்ப்பாட்டங்களில் பெண்கள் தமிழில் எழுதி வைத்திருந்த பதாகை சற்று வித்தியாசமானது- "பாலியல் வெறியைப் பரப்பும் சினிமாக்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஒழித்துக்கட்ட வேண்டும்'. இந்த வாசகம் இன்றைய பிரச்னையை மிக நேர்மையாக அணுகுகின்றது. மனதில் விதைக்கப்படும் எண்ணங்கள்தான் செயலாக மாறுகின்றன.
பாலியல் கிளர்ச்சியைத் தூண்டும் திரைப்பாடல்கள், திரைப்படங்கள், பத்திரிகைப் படங்கள், செல்போன்களிலும் ஆபாச விடியோ காட்சிகள், இணையதளங்களில் போர்னோகிராபி, எதுவுமே தவறில்லை என்ற மனநிலையில் இந்தியர்கள் இருப்பதாக செக்ஸ் சர்வே என எல்லாவற்றையும் கிடைக்கச் செய்துவிட்டு, பெண்களுக்குப் பாதுகாப்பை அதிகரிப்பதாலும், கடுமையான சட்டங்கள் மூலமும் பாலியல் கொடுமைகளைத் தடுத்துவிட முடியும் எனச் சொல்வது சரியான வாதம் அல்ல. மேலைநாடுகளில் இவை இல்லையா? என்று கேட்கலாம். அந்த வாழ்க்கைமுறை இந்தியாவில் எல்லா வீடுகளிலும் இல்லை.