பதிவுகள்

Thursday 28 April 2011

தமிழினத் துரோகிகள்..!

இலங்கை அரசு திட்டமிட்டு இனப்படுகொலை நடத்தி வருகிறது என்று 2009-ல் எல்லோரும் கூறியதைத்தான் இப்போது ஐக்கிய நாடுகள் குழு அறிக்கை உறுதிப்படுத்தி இருக்கிறது. அப்போது, இந்தியா எப்படி, இந்த இனப்படுகொலை குறித்து எல்லோரும் குரல் எழுப்பியபோதும் அமைதி காத்ததோ, அதே அமைதியை இப்போதும் கையாள்கிறது. இலங்கை அதிபர் ராஜபட்ச ஒரு போர்க் குற்றவாளி என்று தண்டிக்கப்படுவதற்கான அனைத்துக் காரணிகளும் இந்த அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆனால் இலங்கை அரசு இதுபற்றித் துளியும் கவலை கொள்ளவில்லை. மாறாக, முழு அறிக்கையை வெளியிட்டால் இலங்கையில் நடைபெற்றுவரும் தமிழர்களின் இணக்கமான வாழ்க்கைக்கான அரசின் முயற்சிகள் பாதிக்கப்படும் என்று எதிர்ப்புத் தெரிவிக்கிறது. நம் ஒற்றுமையைக் காட்டும் விதமாக மே முதல் தேதி ஐ.நா. அறிக்கைக்கு எதிரான விளக்கம் தருவதாக மே தின ஊர்வலம் அமையட்டும் என்று அறைகூவல் விடுகிறார் அதிபர் ராஜபட்ச. இந்த அளவுக்கு இலங்கை எனும் சிறிய நாட்டுக்குத் தைரியம் இருக்கிறது என்றால் அதற்குக் காரணம் இந்தியா தரும் துணிவும், ஆதரவும்தான் என்றால் மிகையில்லை. துணையோடு அல்லது நெடுவழி போகேல் என்கிறது நீதிநூல். ராஜபட்சவின் வழித்துணை இந்தியா. இலங்கைக்கு எதிராக ஐ.நா. சபையில் ஜெனீவா மாநாட்டில் தீர்மானம் கொண்டுவந்தால் அதை எதிர்ப்பதும், சர்வதேச நிதியத்தில் நிதிபெற்றுத் தருவதும் என எப்போதும் அன்பு காட்டி ஆதரவு தந்துகொண்டிருப்பது இந்தியாதான். இலங்கை நடத்திய தாக்குதல், போர்ப்பயிற்சி, ஆயுத சப்ளை, கண்ணிவெடி அகற்றம் என எல்லாவற்றிலும் இந்திய அரசின் நேரடியான - மறைமுகமான உதவிகள் இருந்துள்ளது என்கிற குற்றச்சாட்டுகள் மறுக்கப்படவே இல்லை. இந்த ஆதரவு தரும் மனவலிமையால், இப்போதும் எங்களை ஐ.நா. ஒரு போர்க் குற்றவாளியாகச் சித்திரிக்குமானால், இந்தியா தடுத்துக் காப்பாற்றும் என்று வெளிப்படையாக அந்நாட்டு உயர் அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள் என்றால், இந்தியா குறித்து அவர்களது மதிப்பீடு என்னவாக இருக்கிறது என்பது வெளிப்படை. ஐ.நா. பாதுகாப்பு சபையில் தாற்காலிக உறுப்பு நாடாக இந்தியா இடம்பெற்றிருக்கிறது. உறுப்பு நாடுகள் கேட்டுக்கொண்டால்தான், இலங்கையில் நடந்த மனிதஉரிமை மீறல் மற்றும் பல்லாயிரம் பேர் கொல்லப்பட்டது தொடர்பாக ராஜபட்ச மீது சர்வதேச விசாரணை நடத்தப்படும் என்கிறார் ஐ.நா. சபை பொதுச் செயலர் பான் கீ மூன். இந்தியாவோ மெüனம் காக்கிறது. இந்திய அரசின் சார்பில் ஐ.நா. குழுவின் அறிக்கை பற்றி அதிகாரப்பூர்வமான கருத்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. தமிழ்நாட்டிலிருந்து எதிர்க்கட்சியான அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா, இலங்கை அதிபர் ராஜபட்சவை சர்வதேச நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்கிறார். தேமுதிக, பாமக, மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் என்று காங்கிரஸ் தவிர, ஏனைய கட்சிகள் அனைத்துமே ஐ.நா. குழுவின் அறிக்கையின்மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று குரலெழுப்பி இருக்கின்றன. ஆனால், மத்திய அரசில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் முக்கிய அங்கமாக இருக்கும் தி.மு.க.வின் உயர்நிலைக் குழு கூடியது. விவாதித்தது. தமிழினத்தின்மீது தொடுக்கப்பட்ட மிகப்பெரிய இனப்படுகொலையை எதிர்த்துச் சிலிர்த்தெழ வேண்டிய இயக்கம், தயக்கத்துடன் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றித் தனது கடமையை முடித்துக் கொண்டுவிட்டது. ""(ஐ.நா. குழு) விசாரணை இன்னும் அதிகாரப்பூர்வமாக, முழுமையாக வெளியிடப்படவில்லை. நமது இந்திய அரசு இந்த அறிக்கை மீது எப்படிப்பட்ட நடவடிக்கை எடுக்கப்போகிறது என்ற விவரமும் வரவில்லை'' என்று அதற்குக் காரணம் கூறியிருக்கிறார் முதல்வர் கருணாநிதி. இலங்கைத் தமிழருக்காக இவர் நடத்திய 2 மணி நேர உண்ணாவிரதத்தை ஜெயலலிதா கபடநாடகம் என்று சொன்னதைத் தமிழருக்கு நினைவூட்டத் தவறாத முதல்வர், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு ""இப்போதாகிலும் செயல்படுங்கள்'' என்று நினைவூட்டினாரா என்றால் இல்லை. பிரதமரிடமும் சோனியாவிடம் நினைவூட்டுவதற்குத் தமிழினத்தைப் பாதிக்கும், தமிழனுக்கு இழைக்கப்பட்ட அநீதியைச் சுட்டிக்காட்டும் ஐ.நா. குழு விசாரணையைவிடத் தனது குடும்பத்தினரைப் பாதிக்கக்கூடிய முக்கியமான விசாரணைகள் நடைபெற்று வருவதுகூட அதற்குக் காரணமாக இருக்கலாம். இந்திய அரசும், தன்னைத் தமிழினத் தலைவர் என்று அழைத்துப் பெருமை தட்டிக்கொள்ளும் முதல்வர் கருணாநிதி கூறுவதைப்போல, இன்னும் அறிக்கை முழுமையாக அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை என்று சொல்லக்கூடும். அதைவிட ஒருபடி மேலேபோய், போர்க் குற்றங்களில் விடுதலைப் புலிகளும் ஈடுபட்டனர், மக்களைக் கேடயமாகப் பயன்படுத்தினர் என்று ஐ.நா. அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதைச் சுட்டிக்காட்டி, நடுநிலை வகிப்பதற்குக் காரணம் தேடக்கூடும். இந்த வாதங்களை இந்திய அரசு முன்வைக்கும்போது அதை மறுக்கவோ எதிர்க்கவோ துணிவில்லாத கூட்டணிக் கட்சியாக, தமிழகம் இந்தியாவின் ஒரு பகுதிதான் என்றும், தமிழர்களும் இந்தியர்கள்தான் என்றும் தமிழர் நலனைப் பாதுகாப்பதன் மூலம் மட்டுமே இந்தியாவின் ஒற்றுமையைப் பாதுகாக்க முடியும் என்றும் மத்திய அரசுக்கு உணர்த்தும் கட்சியாக இன்றைய தி.மு.க. தலைமை இல்லை என்பதுதான் தமிழினத்துக்கு ஏற்பட்டிருக்கும் மிகப்பெரிய பின்னடைவு. தமிழர் குரல் தில்லியில் ஒலியிழந்து போனதற்குக் காரணம் தமிழினத்துக்காகக் குரல் கொடுக்க வேண்டியவர்கள் தங்கள் சுயநலத்துக்காகக் கைகட்டி, வாய்பொத்தி, தலைகுனிந்து நிற்பதால்தானே? இலங்கை அதிபர் ராஜபட்ச மீது சர்வதேச விசாரணை வேண்டும் என்று களத்தில் இறங்கிப் போராட வேண்டிய நேரத்தில், இவர்கள் சம்பந்தப்பட்ட வேறு விசாரணை நடந்து கொண்டிருக்கிறதே, இவர்கள் அதைப்பற்றித்தானே கவலைப்படுவார்கள். இவர்களே குற்றவாளிகளாக இருக்கிறபோது யாரைப் போர்க் குற்றவாளியாக்குவதற்காகப் போராடுவது? தமிழினத் துரோகி ராஜபட்ச அல்ல...

Wednesday 27 April 2011

ஐ நா அறிக்கை -முழு விவரம் !

இலங்கையின் இறுதிகட்டப் போர் தொடர்பிலான ஐ நா வின் தலைமைச் செயலரால் அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கை அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளது.
திங்கட்கிழமை(25.4.11) மாலை நியூயார்க்கில் இந்த அறிக்கை அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் இறுதிகட்ட யுத்தத்தின் போது ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அரச தரப்பின் ஷெல் தாக்குதலின் காரணமாக உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது.
ஐ நா வின் தலைமைச் செயலரால் நியமிக்கப்பட்ட அந்த மூவர் குழு அளித்துள்ள அறிக்கையில், இறுதிகட்டப் போரின் போது இடம்பெற்றதாகக் கூறப்பட்ட போர் குற்றங்கள் குறித்து சுயாதீனமான சர்வதேச விசாரணை ஒன்று தேவை என்று பரிந்துரைத்துள்ளது.
ஆனால் இலங்கை அரசு இந்த அறிக்கை பாரபட்சமானது என்றும் மோசடியானது என்றும் கூறியுள்ளது 
நடவடிக்கை எடுக்க அதிகாரமில்லை!
எனினும் இந்த அறிக்கை மீது நடவடிக்கை எடுக்க தனக்கு அதிகாரம் இல்லை என்று தலைமைச் செயலர் பான் கீ மூன் கூறியுள்ளார்.
போர்க் குற்ற விசாரணைகள் இடம்பெற வேண்டுமானால், இலங்கை அரசு இணங்கினாலோ அல்லது ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை அல்லது பாதுகாப்பு சபை அனுமதித்தாலோதான், அது நடக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
விடுதலைப் புலிகளுக்கு எதிராக 2009 ஆம் ஆண்டு மே மாதம் முடிவடைந்த போரில், அரசு வெற்றி பெற்ற நிலையில், அந்தப் போரில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்பதை இலங்கை அரசு மறுக்கிறது.
அந்தச் சம்பவங்களுக்கு இலங்கை அரசோ அல்லது இலங்கை இராணுவமோ பொறுப்பல்ல என்று இலங்கை அரசின் பேச்சாளர் லக்ஷமண் ஹுலுகல்ல பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
அப்பாவி பொதுமக்கள் யாரும் இங்கு குறிவைக்கப்படவில்லை என்றும், அரசு தரப்பு குண்டு வீச்சுக்களையோ அல்லது ஷெல் தாக்குதலையோ நடத்தவில்லை என்றும் கூறும் ஹுலுகல்ல, அரசு மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என்றும் அதை தம்மால் நிரூபிக்க முடியும் என்றும் கூறுகிறார்.
இந்த அறிக்கை வெளியானால் நாட்டின் நல்லிணக்க முயற்சிகளுக்கு பாதகம் ஏற்படும் என்று கூறி இந்த அறிக்கையை வெளியிட வேண்டாம் என்று அரசு முன்னர் கோரியது. 
மருத்துவமனைகள், ஐ நா அலுவலகம் மீது தாக்குதல்!
ஐ நா வின் தலைமைச் செயலரால் அமைக்கப்பட்ட குழு தனது அறிக்கையில், மருத்துவமனைகள் மற்றும் ஐ நா வின் மையங்கள், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் கப்பல்கள் ஆகியவற்றின் மீது திட்டமிட்டு ஷெல் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக கூறியுள்ளது.
அதே நேரம் சுமார் 330,000 பொதுமக்களை விடுதலைப் புலிகள் கேடையமாக பயன்படுத்தினர் என்றும் தப்பித்துச் செல்ல முயன்றவர்களை சுட்டுக் கொன்றனர் எனவும் கூறப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் தலையில் சுடப்பட்டார்கள் என்றும், மகளிர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டனர் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அரசு மற்றும் விடுதலைப் புலிகள் ஆகிய இருதரப்பு மீதும் நம்பகத்தன்மை வாய்ந்த குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவை நிரூபிக்கப்பட்டால், பரந்துபட்ட அளவில் சர்வதேச மனித நேய சட்டங்கள், மற்றும் சர்வதேச மனித உரிமை சட்டங்கள் மீறப்பட்டுள்ளதை கோடிட்டு காட்டும் எனவும் அந்த நிபுணர் குழு தனது அறிக்கையில் கூறியுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால், போர் குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் இழைக்கப்பட்டுள்ளதாக கருதப்படலாம் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது. 

போர்க்குற்றம் !
குற்றங்கள்
பாரதூரமான ஷெல் தாக்குதல்களில் பொது மக்களைக் கொன்றது.
மருத்துவமனை மற்றும் மனித நேயப் பணிகளுக்குப் பயன்படும் இடங்களை தாக்கியது.
மனிதாபிமான உதவிகளை செய்யவிடாமல் தடுத்தது.
போரால் பாதிக்கப்பட்டோர் மற்றும் போரில் தப்பிப் பிழைத்தோர் சந்திக்கும் மனித உரிமை மீறல்கள். அதாவது இடம்பெயர்ந்தோர் மற்றும் புலிகள் என்ற சந்தேகத்துக்குள்ளானோர் நிலை.
போர் பகுதிக்கு வெளியே நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் - குறிப்பாக ஊடகங்கள் மீதும் அரசை விமர்சிப்போருக்கு எதிராக நடைபெற்ற சம்பவங்கள் என நடந்த குற்றங்களை ஐ நா வரிசைப்படுத்தி பட்டியலிட்டுள்ளது.
இலங்கைக்குள் மனித நேய மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் - சிவிலியன்களின் உயிரிழப்பை சிறிதும் பொறுத்துக் கொள்ளப் போவதில்லை என்றும் இலங்கை அரசு அந்த கால கட்டத்தில் சூளுரைத்து வந்தாலும் - ஐ நா குழுவிடம் இதற்கு முற்றிலும் மாறான நம்பத்தகுந்த புகார்கள் கிடைத்ததாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டுக்கள் நிருபிக்கப்படும் பட்சத்தில் அவை சர்வதேச மனிதநேய சட்டங்களையும் மனித உரிமை சட்டங்களையும் மீறுவதாக இருக்கும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர் தாக்குதல்கள்!
அதிலும் குறிப்பாக இறுதி கட்டப் போர் நடந்த காலப் பகுதியில் அதாவது செப்டம்பர் 2008 க்கும் 2009 ஆம் ஆண்டு மே 19 ஆம் தேதிக்கும் இடையேயான காலத்தில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து நம்பத்தகுந்த குற்றச்சாட்டுக்கள் தமக்கு கிடைத்துள்ளதாக கூறியுள்ள நிபுணர் குழுவின் அறிக்கை.. இலங்கை அரசு மோதல்களற்ற பகுதி என்று தான் அறிவித்த பகுதி மீது மூன்று தினங்களுக்கு தொடர்ந்து ஷெல் தாக்குதல்களை நடத்தியதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கனரக ஆயுதங்களை பயன்படுத்த மாட்டோம் என்று இலங்கை அரசு வாக்குறுதி அளித்த பிறகு இந்த தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன.
அதே போல ஐநா வேலைகளை ஒருங்கிணைக்கும் மையம், உணவு வினியோகத்துக்குப் பயன்படுத்தப்படும் பாதைகள் மற்றும் போரில் காயமடைந்தவர்களை மீட்டுச் செல்ல வந்த செஞ்சிலுவைச் சங்க கப்பல் போன்றவற்றின் மீது அரசு ஷெல் தாக்குதல்களை நடத்தியதாகவும் ஐ நா கூறியுள்ளது. மேலும் இது போன்ற தாக்குதல்களால் ஏற்படக்கூடிய பாதிப்பு குறித்து தமது உளவுப் பிரிவு மூலமும், ஐ நா முனகூட்டியே தெரிவித்திருந்த தகவல்கள் மூலமும் விபரங்கள் தெரிந்த நிலையிலும் அரசு இதைச் செய்துள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

மருத்துவமனைகள்
வன்னிப் பகுதியில் இயங்கி வந்த மருத்துவமனைகள் மீது தொடர்ந்து திட்டமிட்ட வகையில் ஷெல் தாக்குதல்களை அரச படையினர் நடத்தியதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உணவு மருந்து அதிலும் குறிப்பாக அறுவை சிகிச்சை செய்வதற்கான உபகரணங்கள் போர் பகுதிக்கு எடுத்துச் செல்லப்படுவது தடுக்கப்பட்டதன் காரணமாக மக்களின் பிரச்சனைகள் அதிகரித்ததாகவும் இந்த அறிக்கை கூறுகிறது.
போர் பகுதியில் சிக்கியிருந்த பொதுமக்களின் எண்ணிக்கையை இலங்கை அரசு வேண்டுமென்றே குறைத்துக் கூறியதாகவும் 2009 ஆம் ஆண்டு ஜனவரி முதல் மே வரை பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் போரில் இறந்து போனதாகவும் கூறும் ஐ நா அதிலும் குறிப்பாக போரின் இறுதி நாட்களில் ஏராளமானோர் யாரென்று தெரியாத நிலையில் - அடையாளம் காணப்படாத நிலையில் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 வல்லுறவு
போர்ப் பகுதியில் இருந்து வெளியே வந்தும் மக்களின் துயர்கள் நீங்கவில்லை
விடுதலைப் புலி உறுப்பினர்களை கண்டுபிடிக்க நடத்தப்பட்ட சோதனைகள் 
ஒளிவு மறைவற்ற  முறையிலும் -மூன்றவது தரப்பின் 
பாதுகாப்பின் கீழும் நடத்தப்படவில்லை என்று கூறியுள்ள ஐ நா, 
சோதனையின் போது பிடித்துச் செல்லப்பட்ட சிலர் விசாரணையின்றி 
உடனடியாக கொல்லப்பபட்டதாகவும், பெண்கள் பலர் பாலியல் 
வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. 
போரில் இடம்பெயர்ந்தோர் மிகவும் நெருக்கடியான இடத்தில் 
குடியமர்த்தப்பட்டதால் 
அங்கு மிக மோசமான நிலைமை ஏற்பட்டதுடன்
முகாம்வாசிகள் சிலர் சித்ரவதைக்குட்படுத்தப்பட்டு விசாரிக்கப்பட்டுள்ளனர்
என்றும் இந்த அறிக்கை கூறுகிறது.
விடுதலைப்புலி உறுப்பினர் என்ற சந்தேகத்தின் பேரில் முகாமில்
இருந்து வேறு இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டோருடன் வெளி
உலகத்துக்கான தொடர்பு அறுந்து விட்டது என்றும், அப்படி கொண்டு
செல்லப்பட்டோர்கள் மேலும் துஷ்பிரயோகங்களுக்கு ஆளாகலாம் என்றும்
அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
அறிக்கைக்கு வரவேற்பு!
ஐ நா வின் தலைமைச் செயலரால் நியமிக்கப்பட்ட அந்த குழுவின் அறிக்கையை வரவேற்பதாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இலங்கையில் 2009 ஆம் ஆண்டு மே மாதம் முடிவுக்கு வந்த போரின் இறுதி நாட்களில் என்ன நடைபெற்றது என்பதை துல்லியமாக அறிந்து கொள்ள இந்த அறிக்கை வழி செய்கிறது என்றும் ஐ நா வின் மனித உரிமைகள் ஆணையம் தனது அறிக்கையில் கூறியுள்ளது.
தமது அறிக்கையை இலங்கை அரசு வெளிப்படையாக அங்கீகரிக்க வேண்டும் என்றும் ஐ நா வின் மூவர் குழு கோரியுள்ளது. இறுதிகட்ட போரின் போது ஏற்பட்ட பெருமளவிலான பொதுமக்கள் உயிரிழப்புகளுக்கு இலங்கை அரசு பொறுப்பேற்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் சர்வதேச அளவுகோலுக்கு அமைய இலங்கை அரசு போரின் இறுதி நாட்கள் குறித்து நம்பகத்தன்மை வாய்ந்த நியாயமான ஒரு விசாரணைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் மூவர் குழு தமது அறிக்கையில் கூறியுள்ளது.

Saturday 23 April 2011

'குஜராத் கலவரமும் மோடியும்'

குஜராத் மாநிலத்தில் கடந்த 2002 ஆம் ஆண்டு நடந்த இனக்கலவரத்துக்கு முதலமைச்சர் நரேந்திர மோடி துணை நின்றதாக, மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் வெள்ளிக்கிழமை உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்த நிலையில், முதலமைச்சர் இல்லத்தில் நடந்த உயரதிகாரிகள் கூட்டத்தில் அந்த அதிகாரி கலந்துகொள்ளவே இல்லை என்று மாநில காவல்துறையின் முன்னாள் தலைவர் கே. சக்ரவர்த்தி தெரிவித்துள்ளார்.
சஞ்சீவ் பட் என்ற அந்த போலீஸ் அதிகாரி, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், 2002 ஆம் ஆண்டு பிப்ரவரி 27-ம் தேதி இரவு முதலைமைச்சர் மோடியின் இல்லத்தில் நடந்த உயரதிகாரிகள் கூட்டத்தில் தானும் கலந்துகொண்டதாகக் கூறியுள்ளார். 
குற்றச்சாட்டு



அந்தக் கூட்டத்தில் அதிகாரிகளிடம் பேசிய நரேந்திர மோடி, கோத்ராவில் இந்துக்கள் வந்த ரயில் எரிக்கப்பட்டதை ஏற்க முடியாது என்றும், இந்துக்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்துவதை யாரும் தடுக்க வேண்டாம் என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதாக சஞ்சீவ் பட் தனது மனுவில் கூறியுள்ளார்.
அவர் அப்போது உளவுத்துறைக்குப் பொறுப்பாக இருந்ததாகக் கூறியுள்ளார்.
மறுப்பு
ஆனால், அந்தக் கூட்டத்தில் சஞ்சீவ் பட் கலந்துகொள்ளவில்லை என்று முன்னாள் காவல்துறைத் தலைவர் கே. சக்ரவர்த்தி, செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே, நானாவதி கமிஷன் முன்பும், சிறப்புப் புலனாய்வுக் குழுவின் முன்பும் தான் வாக்குமூலம் அளித்திருப்பதாகவும், சிறப்புப் புலனாய்வுக்குழு தெரிவிக்கும் தகவல்களின் அடிப்படையில் உச்சநீதிமன்றம் இறுதி முடிவெடுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆதாரம்!
அதே நேரத்தில், சஞ்சீவ் பட் அந்தக் குறிப்பிட்ட கூட்டத்தில் பங்கேற்றதாக அப்போது அவருக்கு வாகன ஓட்டுநராக இருந்த காவல் துறையைச் சேர்ந்த தாராசந்த் யாதவ் கூறியுள்ளார்.



அந்தக் குறிப்பிட்ட தினத்தன்று இரவு சஞ்சீவ் பட்டை முதலில் காவல்துறை தலைமையகத்துக்கு அழைத்துச் சென்றதாகவும், அதன்பிறகு மற்ற அதிகாரிகளுடன் அவரையும் முதலமைச்சரின் இல்லத்துக்கு அழைத்துச் சென்றதாகவும் யாதவ் கூறியுள்ளார்.
அங்கு கூட்டம் முடிவடையும் வரை தான் அங்கு இருந்ததாகவும், இந்த விவரங்களை சிறப்புப் புலனாய்வுக் குழுவின் முன்பு தெரிவித்திருப்பதாகவும் ஓட்டுநர் தாராசந்த் யாதவ் கூறியுள்ளார்.
அரசியல்?
போலீஸ் அதிகாரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு, பாஜக மற்றும் இந்துத்துவ அமைப்புக்களுக்கு எதிராக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கணை தொடுக்க கை கொடுத்திருக்கிறது.
அந்த மனுவின் விவரங்களை உச்சநீதிமன்றம் கவனத்தில் கொள்ள வேண்டும் என காங்கிரஸ் கட்சி ஏற்கெனவே கோரிக்கை விடுத்துள்ள நிலையில், இனக்கலவரத்தில் நரேந்திர மோடியின் பங்கு குறித்து உடனடியாக விசாரணை நடத்தி, அவருக்கு தண்டனை வழங்குவதற்கான நடைமுறைகளைத் துவக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு வலியுறுத்தியுள்ளது. 


Tuesday 19 April 2011

தோல்விக்கு பின்-கலைஞரின் கண்ணீர் கடிதம்!

கொடி தோரணம் இல்லை. ஆரவாரம், பேரணி இல்லை. பொது கூட்டம், கல்வீச்சு, அடிதடி எதுவுமே இல்லை தமிழக தெருக்களின் வீட்டு சுவர்கள் சுத்தமாக இருக்கிறது. எருமை மாடு உரசுவதற்கும், பசுமாடு திண்பதற்கும் போஸ்டர்கள் கிடையாது. ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம் தேர்தல் முடிந்து விட்டதாம். நடந்ததும்  தெரியவில்லை, முடிந்ததும் தெரியவில்லை. ஒரு நீர்குமிழி விரிந்துபட்டென்றுவெடிப்பதுபோல்எல்லாமேஒய்ந்துவிட்டது.
 பழையகால தேர்தல் என்றால் எத்தனை ஊர்வலங்களை பார்க்கலாம். உங்கள் வீட்டு பிள்ளை, கூப்பிட்ட குரலுக்கு ஓடிவருவார், ஏழைகளின்  சின்னம் என்றெல்லாம் எத்தனை ஒலிபெருக்கிகள் அலறி காதை கிழிக்கும். தெருவிளக்கில் மின்சாரம் திருடி கட் அவுட்டுகளை அலங்கரிப்பதாகட்டும், திண்ணை தூங்கிகளுக்கு சாராயம் வாங்கி கொடுத்து அலற வைப்பதாகட்டும், ‘டீ’ கடை பெஞ்சில் கால்மேல் கால் போட்டு அரசியல் கச்சேரி நடத்துவதாகட்டும், வீடு வீடாக தேடி வந்து காலில் விழுகிறேன் பேர்வழி என முரட்டு கையால் பாதங்களை சுரண்டுவதாகட்டும,; அதில் ஒரு அலாதியான போதை இருக்கத்தான் செய்தது, ஒரு மக்கள் அரசு என்பது மக்களுக்கு கொடுக்கும் அதிகபட்ச சந்தோசம் இது மட்டும் தான் என்றிருந்த நிலைமாறி அதுவும் இல்லாமல் போய்விட்டது.

     அரசாங்கமும் தேர்தல் கமிஷனும் மக்கள் சந்தோஷத்தை தின்று ஏப்பம் விட்டு விட்டதென்றால் நாமும் அப்படி செய்ய முடியுமா? தேர்தலை முடித்தோம்  ஓட்டுகளை எண்ணி பட்டாசு வெடித்து கொண்டாடியோ தலையில் துண்டு போட்டு ஒப்பாரி வைத்துவிட்டு அடுத்த வேலையை பார்ப்போம் என்றோ கூட போக முடியவில்லை. ஒரு நாள் கூத்தின் விடையை பார்க்க ஒரு மாதம் காத்திருக்க வேண்டுமாம். அது வரையிலும் தேர்தலில் நின்றவர்கள் குளிர் ஜுரத்தில் கிடந்து துடிப்பது ஒரு புறம் இருக்கட்டும். நமது திருவாளர் பொதுஜனம் யார் ஜெயிப்பர்? யார் ஆட்சி அமைப்பார்? எந்த கூட்டணி யார் பக்கம் அணி மாறும்? என்ற எதிர்பார்ப்பில் நெஞ்சி படபடக்க காத்திருப்பது தான் மகா பரிதாபம். எனவே நமது திருவாளர் பொதுஜனத்தின் ஆவலுக்கு தீனி போட தேர்தல் முடிவுகளுக்கு பின்னால் யார் தோற்றால் என்ன பேசுவார்கள் என்பதை சிறிது கற்பனை செய்து பார்ப்போம்.
கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு தோல்வி என்பது புதிய விஷயமல்ல அவர் பல முறை தோற்று இருக்கிறார் எனவே இந்த முறை தோற்று விட்டால் கழக உடன் பிறப்புகளுக்கு எப்படி கடிதம் எழுதுவார்? அவரின் துள்ளிவரும் தமிழ் நமக்கு வராது என்றாலும் முயற்சி செய்து தான் பார்ப்போமே!

உடன் பிறப்பே!
வான்புகழ் கொண்ட வள்ளுவனையும செம்மொழியில் சிலப்பதிகாரம் சமைத்த இளங்கோவையும் தந்த தாய் தமிழ்நாடு இன்று கண்டிருக்கும் அலங்கோலத்தை பார்த்தாயா? உடல் எங்கும் பாய்ந்தோடி கொண்டிருக்கும் பச்சை ரத்தம் நெஞ்சத்தை மட்டும் கிழித்து குபுகுபுவென பாய்வது போல, நீ துடித்திருப்பாய் அன்னை தமிழ்நாடு அமாவாசை இருளில் முழ்க போகிறதே என்று கலங்கி கண்ணீர் வடித்திருப்பாய்.

     தம்பி உன் மூத்த சகோதரனான நான் இளமை பிராயத்தை கடந்து முதுமையை தொட்டுவிட்டாலும், பாழ்பட்டு கிடக்கும் தாய் தமிழகத்தை வாழ வைத்து பார்க்கும் வற்றாத ஆசையில் சுற்றாத இடமில்லை. சூழன்று அடிக்கும் சூறாவளி போல என் தாய் நிலமெல்லாம் தம்பி உன் மலர்ந்த முகத்தை காண ஓடோடி வந்தேன். பல தாய் வயிற்றில் நாம் பிறந்தாலும் ஒரு தாய் மக்களென உன்னை நானும், என்னை நீயும் கண்ணார கண்டு நெஞ்சார தழுவி கொண்டோம். அந்த தழுவிலுள்ள பாசம் பணத்தால் வந்ததல்ல தமிழன் என்று இனத்தால் வந்தது என்று யாருக்கு தெரியும்?


இந்த அண்ணனும் தம்பியும் சேர்ந்து விட்டால் அடிமையாக கிடக்கும் தமிழன் அடலேறு என சீறி எழுந்து விடுவான். தன்னை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் ஆரிய மாயையின் நெஞ்சை பிளந்து விடுவான் என அஞ்சி நடுங்கிய தர்ப்பைபுல் கூட்டத்தார் சதி பேசினார்கள் தங்களுக்குள் உடைந்து கிடந்த பிணக்குகளை தற்காலிகமாக சமன் செய்து வானை மட்டுமே பார்த்து பழக்கப்பட்ட நாம் பள்ளத்தில் வீழ்வதற்கு குழி வெட்டினார்கள்.

     கிரேக்க வீதிகளில் சுற்றி திரிந்த ஒரு கிழவன் வருவோர் போவோரை எல்லாம் வாயார வரவேற்று உன்னையே நீ அறிவாய் என தத்துவம் பேசினானாம் அதே போல உடன்பிறப்பே உன்னையும் நீ அறிவாய், என்னையும் நீ மட்டுமே அறிவாய். கூழுக்கும், ஆடைக்கும் பாடிய பழந்தமிழ் புலவன் போல தமிழர் நலத்தை மட்டுமே...!


ஒரு கடவுள் மரணத்தை நோக்கி....?!

என்னப்பா இது? தலைப்பே தவறாக இருக்கிறதே! என்று எண்ணி முழுவதுமாக படிக்காமல் விட்டு விடாதீர்கள் முழுவதையும் படித்த பின்பு, உங்களுக்கு சரி என்று பட்டால் இதை பிறருக்கும் அனுப்புங்கள்.

ஆந்திர மாநில புட்டர்பத்தி சாய்பாபவை அறியாதவர்கள் இருக்க முடியாது. அவரை கடவுள் என்றும் கடவுளின் அவதாரம் என்றும் இந்துக்களில் பல பேர் நம்புகின்றனர். படிக்காத பாமர மக்கள் முதல் படித்த பட்டதாரி வரை, ஏழை முதல் கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் பணக்காரன் வரை பல பேர் இவருடைய பக்தர்களாக இருக்கிறார்கள்.

தன்னுடைய பேச்சாற்றல் மூலமாகவும், தந்திர வித்தைகள் மூலமாகவும் பல மக்களை கவர்ந்து தன்னை ஒரு மிகப்பெரிய அவதாரமாக ஆக்கிக்கொண்டவர்தான் இந்த புட்டர்பத்தி சாய்பாபா! சமீபத்தில் தொலைகாட்சியிலும், நாளிதழ்களிலும் ஒரு பரவலான் செய்தி வந்து கொண்டிருக்கிறது. அதுதான் சாய்பாபாவின் உடல் நிலைப் பற்றி..


சாய்பாபாவிற்கு சுவாசக்கோளாறு ஏற்பட்டுவிட்டதாகவும், அவருக்கு செயற்கை சுவாசக் கருவி (ஃபேஸ் மேக்கர்) பொருத்தப்படிருப்பதாகவும், நாளுக்கு நாள் அவருடைய உடல் நிலை மோசமாகி வருவதாகவும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இந்த கட்டுரையை படிக்கக் கூடியவர்கள் யாராவது இவரை கடவுள் என்றோ, கடவுளின் அவதாரம் என்றோ நம்புபவர்களாக இருந்தால் பொறுமையாக இந்த கட்டுரையை படிக்கவும். அதன் நன்றாக அமர்ந்து குறைந்தது 5 நிமிடமாவது சிந்தியுங்கள், நிச்சயமாக சத்தியம் உங்களை வந்தடையும்.
ஒரு சாதாரான் ஹிந்துக்களிடம் எத்தனை கடவுள் இருக்கிறது என்று கேட்டால்? ஒருவர் சொல்வார் மூன்று என்று, மற்றவர் சொல்வார் முப்பது என்று, மற்றொருவர் சொல்வார் மூவாயிரம் என்று இப்படியே போய் முப்பத்தி முக்கோடி தேவர்கள் என்றும் சில பேர் சொல்வார்கள். ஆனால் இந்து மத வேதங்களை படித்த மேதையிடம் கேட்டால் கடவுள் ஒன்று தான் என்று கூறுவார். இன்று எல்லா ஹிந்துக்களும் நம்பக்கூடிய ஒரு விஷயம் தான் கடவுளின் அவதாரம் என்பது. ஹிந்து மத புராணங்களிலும், இதிகாசங்களிலும் இத்தகைய அவதார புருஷர்கள் நிறையவே உண்டு. உதாரணம் இராமன், கிருஷ்ணன். இவர்களை கடவுள் என்றும் கடவுளின் அவதாரம் என்றும், இவர்கள் பூமியில் அசத்தியத்தை அழிப்பதற்காக மனிதர்களாக அவதாரம் எடுத்தார்கள் என்றும் நம்புகின்றனர்.
உலகத்தில் பெண்ணின் வயிற்றில் கருவாக உருவாகி பிறந்த மனிதர்கள் யாவும் மரணத்தை அடைந்தே தீர வேண்டும் என்பது தான் நியதி. அவ்வாறுதான் இன்று வரை பிறந்த மனிதர்கள் அனைவரும் இறந்தும் இருக்கின்றனர். மேற்கூறிய அவதார புருஷர்களின் இறுதி வாழ்க்கை என்ன ஆனது என்று எங்கையுமே குறிப்பிடப் படவில்லை. அவர்களுக்கு என்ன ஆனது என்பதும் நமக்கு தெரியவில்லை, காரணம் அத்தகைய அவதார புருஷர்கள் வாழ்ந்த காலங்கள் யாருக்குமே சரியாக தெரிவதில்லை, சில பல லட்சம் வருடங்களுக்கு முன்பாக வாழ்ந்தார்கள் என்று நம்புகிறார்கள். ஆனால் ஒன்றை மட்டும் உறுதியாக கூற முடியும், அது என்னவென்றால் ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீர வேண்டும், மரணத்தில் இருந்து யாரும் தப்பவே முடியாது என்பதுதான்.


இந்தியாவில் தற்போதைய காலகட்டத்தில் சில நபர்களை அவதாற புருஷர்களாக கருதுகிறார்கள், அதில் இரண்டு நபர்களைமட்டும் இங்கே காண்போம்.
ஓஷோ கம்யூனிட்டியின் நிருவனர் பகவான் ரஜ்நிஷ், இவர் அமெரிக்காவில் ஒரு ஆசிரமம் நடத்தி வந்தார். அங்கே இருந்த அமெரிக்கர்கள் பலரை தனது கவர்ச்சிகரமான பேச்சாற்றல் மூலமாக தனது பக்தர்களாக மாற்றினார். இதனால் அமெரிக்க அரசாங்கம் இவரை சிறையில் அடைத்தது, சிறையில் இவருக்கு விஷம் வழங்கப்பட்டதாக இவரே கூறியிருக்கிறார். பின்னர் இவரை விடுதலை செய்த அமெரிக்க அரசாங்கம் இந்தியாவிற்கு அனுப்பி வைத்தது. இங்கே இவர் ஓஷோ கம்யூனிட்டியை தொடர்ந்து நடத்தி வந்தார். பின்னர் மரணம் அடைந்தார்.




இவரை கடவுளாக நம்பும் மக்கள் இவர் பிறக்கவும் இல்லை, இறக்கவும் இல்லை ஆனால் உலகத்திற்கு சில காலங்களுக்கு விஜயம் செய்திருந்தார் என்றும் நம்புகின்றனர். சற்று யோசித்து பாருங்கள் கடவுளை அமெரிக்க அரசாங்கம் சிறையில் அடைத்ததும், அவரும் உணவில் விஷம் வழங்கப்பட்டதையும்! இப்படிப்பட்டவர்கள் கடவுளாக இருக்க முடியுமா?
 
தற்போது புட்டர்பத்தி சாய்பாபா, ஆந்திர மாநிலத்தில் ஒரு மிகப்பெரிய ஆசிரமத்தை நடத்தி வரும் சாய்பாபாவை பல மக்கள் கடவுளாக நம்புகின்றனர். தற்போது அவர்கள் நம்பும் கடவுளுக்கு சுவாசக்கோளாறு பிரச்சனை. ஆதலால் செயற்கை கருவி பொறுத்தியுள்ளனர். சாய்பாபா தற்போது உயிருக்காக போராடிவருகிறார். செயற்கை கருவி ஒரு போதும் இயற்க்கையை போன்று இருக்காது என்பது அனைவரும் அறிந்ததே, அதே போன்று செயற்க்கை கருவி பொருத்தப்பட்டவர்களும் நீண்ட நாட்களுக்கு வாழ்ந்ததாகவும் தெரியவில்லை.

 
 
 
 
 
 

 
 
 
அப்படியென்றால் சாய்பாபா தனது இறுதி நாட்களை நெருங்கிக்கொண்டிருக்கிறார். அவர்களுடைய பக்தர்கள் ஆத்திரம் அடையக்கூடாது, இது தான் நிதர்சனம். மனிதனாக பிறந்தால் மரணித்தே தீர வேண்டும். அப்படி மரணிப்பவர்கள் யாரும் கடவுளாக இருக்க முடியாது என்பதே சத்தியம்!


கடவுள் என்பவன் யார்? மிக அழகாக கூறுகிறது திருக்குர்ஆன். ஒருவரை கடவுள் என்று நம்புவதற்கு அவரிடம் 4 நிபந்தனைகள் இருக்க வேண்டும்.


1. அவர் ஒருவராக இருக்க வேண்டும்.


இன்று எல்லா மதத்தின் வேதங்களும் கடவுள் ஒன்று தான் என்று கூற அந்த வேதங்களைப்பற்றிய ஞானம் இல்லாதவர்கள் பல கடவுள் கொள்கையை ஏற்றுக்கொண்டுள்ளனர். ஆக கடவுள் என்பவர் ஒன்று தால் பலர் அல்ல என்பதை நாம் நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும்.


2. கடவுள் தேவையற்றவராக இருக்க வேண்டும்.


உலகத்தை படைத்த கடவுளை நம்பித்தான் மற்றவர்கள் இருக்க வேண்டுமே ஒழிய, கடவுள் பிறரை நம்பி இருக்கக்கூடாது. மேலே குறிப்பிட்ட இரண்டு நபர்களும் அவ்வாறு இருந்தார்களா? ரஜ்நிஷிற்கு அமெரிக்கா அரசாங்கம் விசாவை தள்ளுபடி செய்தது! கடவுள் உலகத்திற்கு விஜயம் செய்ய வருவாரானால் மற்ற நாடுகளுக்குச் செல்ல அவர் படைத்த மனிதர்களே விசா வழங்க வில்லை போலும் அப்படியா? மேலும் அவருக்கு உணவில் விஷம் கொடுக்கப்பட்டதாம்! சற்று யோசித்துப்பாருங்கள் கடவுளுக்கு மனிதர்கள் விஷம் கொடுத்தால் அது கடவுளை பாதிக்குமா? அப்படி பாதித்தால் அவர் கடவுளாக இருக்க முடியுமா?


அதே போன்று இன்று உடல் நிலை மோசமாகிக்கொண்டிருக்கும் சாய்பாபா? கடவுளுக்கு உடல் நிலை சரியில்லையா? அவருக்கு செயற்க்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டிருக்கிறதே! அதுவும் மருத்துவர்களின் உதவியோடு! அப்படி இருக்க சாய்பாபா கடவுளாகவோ கடவுளின் அவதாரமாகவோ எப்படி இருக்க முடியும்?


3. அவர் யாரையும் பெற்றிருக்கக்கூடாது! யாராலும் பெறப்பட்டவராக இருக்கக்கூடாது


ரஜ்நிஷ் மற்றும் சாய்பாபாவிற்கும் பெற்றோர்கள் உண்டு, மற்ற மனிதர்கள் போல் அவர்களும் தங்களுக்கு பல தேவைகளை பிறரின் உதவியுடன் பெற்றிருக்கிறார்கள். இப்படி இருக்க இவர்கள் கடவுளாக இருக்க முடியுமா?

4. அவரைப்போன்று எவறுமே இல்லை!


இந்த கட்டுரையின் மூலமே 2 நபர்களை தெரிவித்துவிட்டோம், தன்னை கடவுள் என்றும் கடவுளின் அவதாரம் என்றும் கூறும் பட்டியல் நமது இந்தியாவில் நீண்டுகொண்டே போகிறது.

ஆக, மனிதன் ஒரு போதும் கடவுளாக மாட்டான் என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும். திருக்குர் ஆன் கூறுகிறது, கடவுளுக்கு தேவைகள் கிடையாது, சோர்வுகள் ஏற்படாது, பெற்றோர்கள் கிடையாது, குழந்தைகள் கிடையாது, மனோ இச்சைகள் கிடையாது, அவன் மகாத்தூயவன், எந்த ஒரு மனிதனின் பார்வையும் அவனைக் காணமுடியாது அப்படிப்பட்டவேனே இறைவன், அவனை மனிதர்கள் தங்களுக்கு மொழிக்கு ஏத்தவாறு அழைக்கிறார்கள்..


தமிழில் - இறைவன்

ஆங்கிலத்தில் - GOD

ஹிந்தியில் - பகவான்

அரபியில் - அல்லாஹ்


என்று அழைக்கிறார்கள். எனவே நாம் இவ்வுலகிலும் நாளை மறு உலகிலும் வெற்றி பெற வேண்டுமென்றால் அந்த ஒரே இறைவனை மட்டுமே வணங்க வேண்டும். அப்படி வணங்குபவர்கள் தான் நம்பிக்கையாளர்கள் என்று அழைக்கப்படுவார்கள்.


ஆக நன்கு சிந்தியுங்கள் உண்மையை உணருங்கள், நேர்வழி அடைய வாழ்த்துகிறேன்!

உங்கள் அனைவருக்கும் அந்த ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமு உண்டாக பிரார்த்திக்கிறேன்!


Monday 18 April 2011

லஞ்சம் தவிர்த்து, நெஞ்சம் நிமிர்த்து: ஒரு நிஜ "ஹீரோ"வின், "ப்ளாஷ்பேக்"!

"ஒரு நாள் இந்த ஆபீசுக்குள்ளே போய், கலெக்டர் சீட்டில் உட்காரணும்...' புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தை தன் சகோதரருடன் சைக்கிளில் கடக்கும்போதே, ஆசை விதை, அந்த சிறுவனுக்குள் முளைவிட்டிருந்தது. அந்த விதை, இன்று விருட்சமாக வளர்ந்து, மதுரையில் மையம் கொண்டு, நாட்டையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. தேர்தல் களத்தை சூடாக்கிய அந்த, "ஹீரோ' மதுரை மாவட்ட கலெக்டர் சகாயம்.

புதுக்கோட்டை மாவட்டம் பெருஞ்சுணை கிராமத்தை சேர்ந்த, உபகாரம் என்பவருக்கு, ஐந்து மகன்கள். இதில் கடைக்குட்டியாய் பிறந்தவர் சகாயம். பெருஞ்சுணையில் பள்ளிப்படிப்பு, புதுக்கோட்டையில் பட்டப்படிப்பு, சென்னையில் முதுநிலை பட்டப்படிப்பு, சட்டப்படிப்பு என, அடுத்தடுத்து தன் கல்வி தகுதியை சகாயம் உயர்த்திக் கொண்டார். சிறுவனாய் இருந்தபோது முளைத்த, "கலெக்டர் கனவு' நிறைவேற, யு.பி.எஸ்.சி., தேர்வு எழுத வைத்தது. ஐ.ஏ.எஸ்., கிடைக்காத நிலையில், ஏற்கனவே எழுதியிருந்த, டி.என்.பி.எஸ்.சி., குரூப்-1 தேர்வு முடிவுகள் வெளியாக, துணை கலெக்டரானார் சகாயம். தர்மபுரியில் பயிற்சி கலெக்டர், நீலகிரி மாவட்டம், கூடலூரில், ஆர்.டி.ஓ., திருச்சி கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது), கள்ளக்குறிச்சி சர்க்கரை ஆலை சிறப்பு அதிகாரி, காஞ்சிபுரம் ஆர்.டி.ஓ., திருச்சி சிவில் சப்ளைஸ் முதுநிலை மண்டல மேலாளர், கோவை கலால் பிரிவு துணை கமிஷனர், சென்னை, டி.ஆர்.ஓ., தொழில் வணிகத்துறை இணை இயக்குனர், மாநில தேர்தல் ஆணைய செயலர், நுகர்பொருள் வழங்கல் துறை இணை ஆணையர், நாமக்கல் மாவட்ட கலெக்டர், புது திருப்பூர் மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குனர், மதுரை கலெக்டர் என, இவர், "பந்தாடப்பட்ட' விதமே இவரது நேர்மைக்கு சான்றாக சொல்லலாம்.

பதவி வகித்த இடங்களில் சகாயம் படைத்த சாதனைகளில் சில:

 * அ.தி.மு.க., ஆட்சி காலத்தில், நீலகிரி மாவட்டம், கூடலூரில் ஆர்.டி.ஓ.,வாக இருந்த போது, நேர்மையான நடவடிக்கைகளால், அப்பகுதி மக்களின், "தோழனாக' மாறினார் சகாயம். அப்போது மாவட்ட கலெக்டராக இருந்த லீனாநாயருக்கு, சகாயத்தின் செல்வாக்கு சங்கடத்தை கொடுக்க, அதிரடியாக அங்கிருந்து மாற்றம் செய்யப்பட்டார்.

 * காஞ்சிபுரம் ஆர்.டி.ஓ.,வாக இருந்தபோது, மாசடைந்த குளிர்பானத்தை விற்பனை செய்தது தொடர்பாக வந்த புகாரையடுத்து, "பெப்சி' குளிர்பான உற்பத்தி ஆலைக்கு, "சீல்' வைத்து பரபரப்பு ஏற்படுத்தினார். பாலாற்றில் மணல் திருட்டை தடுக்க எடுத்த கடுமையான நடவடிக்கையால், கொலை முயற்சி தாக்குதலில் இருந்து தப்பினார்.

 * கோவை மாவட்டத்தில் கலால் துறை துணை ஆணையராக இருந்த போது, மதுபானக் கடை ஏலத்தை அரசு விதிமுறைப்படி நடத்த வேண்டும் என்பதில் உறுதியாய் இருந்தார். அரசியல்வாதிகள், பினாமிகள் பெயரில் ஏராளமான கடைகளை எடுப்பதையும், "சிண்டிகேட்' முறையில் நடந்த முறைகேடுகளுக்கு, "செக்' வைத்தார்.

 * அ.தி.மு.க., ஆட்சி நடந்த போது, திருப்பூர் அ.தி.மு.க., பிரமுகர் ஒருவருக்கு சொந்தமான பிராந்தி கடைகளில் அதிரடி சோதனைகளை நடத்தி பரபரப்பு ஏற்படுத்தினார். கோவையில் பிரபலமான சைவ ஓட்டலில், அனுமதி பெறாமல் மது வகைகள் பதுக்கி விற்கப்படுவதை அறிந்து, நேரடியாக, "ரெய்டு' நடத்தி பரபரப்பை ஏற்படுத்தினார்.

 * சென்னை டி.ஆர்.ஓ.,வாக இருந்தபோது, பிரபல ஓட்டல் நிறுவனம் ஆக்கிரமித்திருந்த, 48 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை அதிரடியாக மீட்டார். இதேபோல், 500 கோடி ரூபாய் மதிப்புள்ள பல்வேறு ஆக்கிரமிப்புகள், சகாயத்தால் அரசின் வசமானது. சுனாமி நிவாரண பணிகளில் நடந்த முறைகேடுகளை களைந்து, உண்மையிலேயே பாதிக்கப்பட்டவர்கள் பலன் பெற உதவினார்.

 * தி.மு.க., ஆட்சியின் போது, முதல்வருக்கு இவர் எழுதிய கடிதம், அதிகாரிகள் மட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. "நேர்மையான அதிகாரிகள் புறக்கணிக்கப்படுகின்றனர்' என்பதோடு, தன் சொத்து விவரம், வங்கிக் கணக்கு உள்ளிட்டவற்றை கடிதத்தில் குறிப்பிட்டு, "இது தவிர எனக்கு ஏதாவது சொத்து இருந்தால், நடவடிக்கை எடுங்கள்' என்று பகிரங்கமாக சவால் விடுத்தார். அதோடு, "நியாயம் கேட்டு, குடும்பத்தோடு உண்ணாவிரதம் இருப்பேன்' என்ற போர் குரலை தொடர்ந்தே, சகாயத்திற்கு ஐ.ஏ.எஸ்., தகுதி உயர்வு கிடைத்தது என்கிறது நேர்மையான அதிகாரிகள் வட்டாரம்.

 * நாமக்கல் மாவட்ட கலெக்டராக சகாயம் பணியாற்றிய இரண்டரை ஆண்டுகள், அந்த மாவட்ட மக்களுக்கு பொற்காலமாக இருந்தது. அந்த காலகட்டத்தில் தன் சொத்து கணக்கை வெளியிட்டு, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மட்டத்தில் பொறாமைக்குள்ளானார்; பொதுமக்கள் மத்தியில் பெருமைக்குள்ளானார்.

 * இவரது நேர்மைக்கு தேர்தல் கமிஷன் கொடுத்த அங்கீகாரம், தற்போதைய மதுரை கலெக்டர் பதவி. இவரது இருக்கைக்கு பின்புறம் இருக்கும் வாசகங்கள், "லஞ்சம் தவிர்த்து, நெஞ்சம் நிமிர்த்து!'

'இலங்கை போர்க் குற்றங்கள்'- கசிந்த அறிக்கை !

இலங்கையில் இறுதிக்கட்டப் போரின் போது நடந்த குற்றச்சம்பவங்களுக்கு பொறுப்புக்கூறவைக்கும் நோக்குடன் ஐநா தலைமைச் செயலரால் அமைக்கப்பட்ட நிபுணர் குழுவின் இறுதி அறிக்கை அதிகாரபூர்வமாக இன்னும் வெளியிடப்படாதுள்ள நிலைமையில் அந்த அறிக்கையிலிருந்து கசிந்துள்ள விடயங்கள் என்று கூறி இலங்கையின் செய்தி நாளிதழ் ஒன்று தகவல்களை வெளியிட்டுள்ளது. 
  • அரச சார்பு நாளிதழில் வெளியானது
 அரச சார்பு பத்திரிகையான தி ஐலண்ட் ஐநா நிபுணர்குழு, அறிக்கையின் சுருக்கங்கள் என்று இதனை வெளியிட்டிருக்கின்றது.
ஐநா தலைமைச் செயலரின் ஆலோசனைக்கான நிபுணர்குழு ஆரம்பம் முதலே பெரும் வாதப்பிரதிவாதங்களுக்கு உரிய விடயமாகவே இருந்து வருகின்றது.
விடுதலைப் புலிகள் நீண்டகாலம் மேற்கொண்ட சிவில் யுத்தத்தின் போது அவர்களுக்கு எதிராக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட இறுதி யுத்தத்தின் கடைசிக் காலப்பகுதியில் பெரும் போர்க்குற்றங்களும் மற்றும் மனித உரிமை மீறல்களும் இடம்பெற்றதாக பரவலான குற்றச்சாட்டுக்கள் பல்வேறு தரப்பினராலும் முன்வைக்கப்பட்டன.
இந்த நிலையில், அது தொடர்பில் ஆராய்ந்து தனக்கு ஆலோசனை வழங்குமாறு ஐநா தலைமைச் செயலர் பான்கீ மூன் இந்த நிபுணர் குழுவை அமைத்திருந்தார்.
இந்த நிபுணர் குழு அமைக்கப்படுவதை இலங்கை அரசும் கடுமையாக எதிர்த்திருந்தது.
இப்போது, அரச ஊடகமான தி ஐலண்ட் நாளிதழே, ஐநா நிபுணர்குழு இறுதி அறிக்கையின் சுருக்கங்கள் என்று கூறி அவற்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.
கடுமையான குற்றச்சாட்டுக்கள் அந்த அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ளன.

  • போர்க் குற்றங்களும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களும்

இறுதிப் போரில் ஆயிரக்கணக்கில் மக்கள் கொல்லப்பட்டதாக குற்றச்சாட்டு
இலங்கை அரசாங்கம், அது முன்னர் பொதுமக்கள் எல்லோரையும் செல்லுமாறு வற்புறுத்திய பகுதிகள் மீது, பெரும் எடுப்பில் பாரியளவிலான ஷெல் தாக்குதல்களை நடத்தி, பொதுமக்களைக் கொன்றுள்ளதாக எழுந்த குற்றச்சாட்டுக்களை ஐநாவின் நிபுணர்குழு நம்பத்தக்க வகையில் கண்டறிந்துள்ளதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
‘யுத்தம் நடந்தபோது, அங்கிருந்த மருத்துவமனைகள் மீது திட்டமிட்டே அரசாங்கப் படைகள் ஷெல் தாக்குதல்களை நடத்தியுள்ளன, யுத்த வலயத்துக்குள் சிக்கிக்கொண்ட மக்களுக்கு உணவு மற்றும் மருந்துப்பொருட்கள் விநியோகத்தையும் அரசாங்கம் தடுத்து இல்லாதுசெய்தது’ என்றும், கசிந்துள்ளதாகக்கூறப்படும் ஐநா அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
யுத்தப் பிரதேசத்திலிருந்து தப்பிவந்த மக்களையும் அரசாங்கம் எப்படி மூடிய முகாம்களுக்குள் அடைத்து வைத்திருந்தது என்பதையும் விபரித்துள்ள அந்த அறிக்கை, அந்த முகாம்களின் நிலமையை ‘கொடூரமானது’ என்றும் வர்ணித்துள்ளது.
ஐநா குழுவின் படி, இங்கு சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால், அவற்றில் சில குற்றச் சம்பவங்கள் போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றச்செயல்கள் என்றளவுக்கு பாரதூரமானவை. 

  • இலங்கை அரசாங்கம் நிராகரித்தது!

ஐநா குழுவுக்கு அரசாங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது
இலங்கை அரசாங்கம் இந்த அறிக்கையை அடிப்படை ஆதாரமற்றது எனவும் ஒருபக்கச்சார்பானது எனவும் முன்னரே நிராகரித்துவிட்டது.
ஐநா அறிக்கை, பொதுவான அடிப்படையில் தகவல்களை வெளியிட்டுள்ளதே தவிர, எதனையும் குறிப்பாக சுட்டிக்காட்டவில்லை எனவும் இலங்கை ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவ விஜேசிங்க பிபிசிக்குத் தெரிவித்தார்.
இவ்வாறான குற்றச்சாட்டுக்களில் வெளிப்படையான அரசியல் நிகழ்ச்சியே இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

  • நிபுணர்குழு சிபார்சுகள்!
 இதேவேளை, இலங்கை அரசாங்கத்திற்கும் சர்வதேச சமூகத்திற்குமான சிபாரிசுகள் சிலவற்றையும் ஐநா நிபுணர் குழு அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, ஐநா நிபுணர் குழு முன்வைக்கக்கூடிய சிபாரிசுகளை இலங்கை அரசாங்கம் கருத்தில் கொண்டு அவற்றை செயற்படுத்த வேண்டும் என மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள் (யாழ்) சங்கத்தை சேர்ந்த கே. சிறிதரன் தெரிவித்தார்

இலங்கை அதிபரின் மே தின அழைப்புக்கு எதிர்ப்பு !

இலங்கை போரின் இறுதி நிகழ்வுகள் குறித்து ஐநா குழுவினால் தயாரிக்கப்பட்ட அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக மே தின ஊர்வலங்களை பயன்படுத்த வேண்டும் என்று இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.
தனது கட்சி உறுப்பினர்கள் மத்தியில் பேசும்போதே சனிக்கிழமையன்று அவர் இவ்வாறு பேசியுள்ளார்.
ஊடகங்களில் கசிந்த ஐநாவின் அந்த அறிக்கையின்படி இலங்கை அரசாங்கத்தின் மீது போர் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தது. ஆனால், அதனை இலங்கை அரசாங்கம் முற்றாக நிராகரித்துள்ளது.
தமது அரசாங்கத்துக்கும், செயலுக்கும் பொதுமக்களின் பூரண ஆதரவு இருக்கிறது என்பதை காண்பிப்பதற்காகவே, இந்த மே தின கொண்டாட்டங்களை ஐநாவின் அறிக்கைக்கு எதிராக குவிப்பதற்கு அதிபர் கோரிக்கை விடுத்திருந்தார்.
தனது நாட்டுக்காக மின்சார நாற்காலியில் அமரவும் தான் தயார் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஆனால், தொழிலாளர் தினமான மே தினத்தை ஐ நாவின் போர் குற்ற அறிக்கையை எதிர்ப்பதற்கான தினமாக பயன்படுத்துவதை தொழிற்சங்கங்கள் எதிர்த்துள்ளன.
இலங்கை அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்கத்தில் அங்கம் வகிப்பவரும், செங்கொடிச் சங்கம் உட்பட பல மலையக தொழிற்சங்கங்களின் மூத்த தலைவருமான ஓ. இராமையா அவர்கள, தொழிற்சங்கவாதி என்ற ரீதியில் மே தினத்தை இதற்கு பயன்படுத்துவதை தான் ஆதரிக்கவில்லை என கூறினார்.
அதேவேளை அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் மற்றுமொரு இடதுசாரி அமைப்பான லங்கா சமசமாஜக் கட்சியின் தொழிற்சங்கமான லங்கா தொழிலாளர் சங்கத்தின் செயலாளரான ரி. எம். ஆர் . ரசூல்டீனும் அதிபரின் இந்தக் கோரிக்கையை நிராகரித்துள்ளார். தமது சங்கங்கள் எல்லாம் அரசாங்கத்தின் தனியார் துறைக்கான பென்சன் திட்டத்தை எதிர்த்து அதனையே மே தின கோசமாகக் கொள்ளப்போவதாகவும் அவர் கூறினார்.

நியாயமானது!

ஆதங்கம் நியாயமானது!
வாக்குப்பதிவு நாளுக்கும் வாக்கு எண்ணிக்கைக்கும் ஒரு மாத கால இடைவெளி இருப்பதால் அரசு நிர்வாகம் எந்தப் பணியையும் செய்ய முடியாமல் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், ஜூன் மாதத்தில் தொடங்க இருக்கும் தென்மேற்குப் பருவமழை காலத்தின்போது வேளாண்மைப் பணிகள் முறையாக நடைபெறுவதற்குச் செய்ய வேண்டிய பராமரிப்பு ஆய்வுப் பணிகளைக்கூட அதிகாரிகள் மேற்கொள்ள முடியாமல் தேர்தல் ஆணையத்தின் ஆணை தடுக்கிறது என்றும் முதல்வர் கருணாநிதி குற்றம் சாட்டியிருக்கிறார். இந்தப் பிரச்னையில் முதல்வரின் ஆதங்கம் நியாயமானது என்பது மட்டுமல்ல, ஜனநாயகம் முறையாக நடைபெற வேண்டும் என்று விழையும் அனைவரின் சிந்தனைக்குரியதும்கூட. தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட உடனேயே, "காத்திருப்பு தேவையில்லை' என்கிற தலைப்பில் "தினமணி' ஒரு தலையங்கம் தீட்டியிருந்தது. அதில் குறிப்பிட்டிருந்த சில கருத்துகளை வாசகர்களின் பார்வைக்கு மீண்டும் பதிவு செய்கிறோம். ""ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு தேதியில், ஒரே நாளில் அல்லது பல கட்டங்களில் வாக்குப் பதிவை நடத்த முடியும் என்றால், வாக்கு எண்ணிக்கையை மட்டும் ஏன் ஒரே நாளில் நடத்த வேண்டும்? அந்தந்த மாநிலத்துக்கு ஏற்ப வாக்கு எண்ணிக்கைத் தேதியை நிர்ணயிப்பதில் என்ன தவறு? இதில் நடைமுறைச் சிக்கல் என்ன? மக்களவைத் தேர்தல் நடத்தப்படும்போது, தேர்தல் முடிவுகள் ஒரே நேரத்தில் வெளியாகும் வகையில், வாக்கு எண்ணிக்கையை ஒரே நாளில் நடத்துவதுதான் சரியானது. ஏனென்றால், ஒரு மாநிலத்தில் ஒரு தேசியக் கட்சிக்குக் கிடைக்கும் அதிகமான வெற்றி அல்லது அதுபற்றி தேர்தலுக்குப் பிந்தைய கணிப்புகள் வாக்குப்பதிவு நடைபெற்றுக் கொண்டிருக்கும் மற்றொரு மாநிலத்திலும் வாக்காளர்களிடையே உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தி, வெற்றிபெறும் கட்சிக்கே தங்கள் வாக்கு என்ற மனநிலையை உருவாக்கும் என்பதால் இதை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், சட்டப்பேரவைத் தேர்தலின் முடிவுகள் அந்தந்த மாநிலத்தோடு மட்டுமே தொடர்புடையவை. இதுபோன்று 30 நாள் இடைவெளி தருவதால் தேவையில்லாத பிரச்னைகளுக்குத் தேர்தல் ஆணையம் வழி வகுக்கிறது. தேர்தல் ஆணையம் இந்தப் பிரச்னையில் மறுபரிசீலனை மேற்கொண்டு தவறைத் திருத்திக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது. அடம்பிடிக்காமல் நடைமுறைச் சிந்தனையுடன் ஆணையம் செயல்பட்டால் நல்லது'' என்று அந்தத் தலையங்கத்தில் குறிப்பிட்டிருந்தோம். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடன் அரசு நிர்வாகம் ஆணையத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்து விடுகிறது. அப்படி இல்லாமல் போனால், தேர்தல் நடைமுறைகளை ஆளும் கட்சிக்குச் சாதகமாக ஆட்சியாளர்கள் வளைத்துக் கொள்வார்கள் என்பதும், பெரிய அளவில் தேர்தல் தில்லுமுல்லுகள், பண விநியோகம் நடைபெறும் என்பதுதான் அதற்குக் காரணம். தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, உதிரிக் கட்சி, சுயேச்சை என்கிற வேறுபாடு இல்லாமல் சமபலத்துடன் தேர்தலில் பங்குபெற இது தேவைப்படுகிறது என்பதிலும் நமக்கு மாற்றுக் கருத்து இல்லை. அதேநேரத்தில், தேர்தல் முடிந்துவிட்ட நிலையில் வாக்கு எண்ணிக்கையை ஒரு மாத காலத்துக்குத் தள்ளிப்போட்டு, அதிகாரம் இல்லாத காபந்து அரசிடம் நிர்வாகத்தை ஒப்படைப்பது பிரச்னைகளுக்கு வழிகோலுவதாக அமைந்துவிடும். திடீரென்று சுனாமி போன்ற இயற்கைச் சீற்றமோ, ஒரு பேரழிவோ ஏற்பட்டது என்றால், அதை நிர்வாகம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதா, முதல்வர் மௌனம் காப்பதா, இல்லை தேர்தல் ஆணையத்தின் உத்தரவுக்குக் கட்டுப்பட்டு அதிகாரிகள் செயல்படுவதா? அப்படியொரு விபரீதம் ஏற்பட்டுவிடவில்லை, ஏற்படவும் வேண்டாம். ஆனால், நாம் தொலைநோக்குப் பார்வையுடன் இந்தப் பிரச்னையை அணுகாமல் இருக்க முடியாதே? இன்றைய முதல்வர் கருணாநிதி சந்திக்கும் இந்த விசித்திரமான சூழ்நிலை நாளைக்கு முதல்வராக வரக்கூடிய எவருக்குமே ஏற்படலாம். இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் இதுபோன்ற பிரச்னை இன்றைக்கு இல்லாவிட்டாலும் நாளைக்கு ஏற்படலாம். தேர்தலுக்கு மூன்று மாதத்துக்கு முன்பு, ஆட்சியில் இருக்கும் அரசு பதவி விலகி குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படுவது இதற்கு மாற்றாக இருக்கும் என்று ஒரு யோசனை மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டபோது, மக்களவையில் சில உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்டது. மாநில அரசுகள் கலைக்கப்பட்டு, குடியரசுத் தலைவர் ஆட்சியின்கீழ் தேர்தல் நடந்தால், அது மத்திய ஆளும் கட்சிக்குச் சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தக்கூடும் என்பதால் அந்த யோசனை கைவிடப்பட்டது. மேலும், மக்களவைத் தேர்தல்களின்போது என்ன செய்வது என்கிற கேள்வியும் எழுகிறது. முதல்வர் எழுப்பியிருக்கும் நியாயமான கேள்விக்குத் தேர்தல் ஆணையம் மட்டுமல்ல, இந்திய அரசும் வழிகாண வேண்டிய கட்டாயம் உள்ளது. எல்லா அரசியல் கட்சிகளையும், மாநிலங்களையும் பாதிக்கும் பிரச்னை இது என்பதால், இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர் என்கிற முறையில் முதல்வர் கருணாநிதி இந்தப் பிரச்னையை விவாதிக்க முதல்வர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், முன்னாள் தேர்தல் ஆணையர்கள், சமூக ஆர்வலர்கள் என்று அனைவரையும் அழைத்து ஒரு கருத்தரங்கை நடத்தினால்கூட நல்லது. மக்களாட்சி, காலத்துக்கு ஏற்றாற்போல மாற்றிக் கொள்ளும், மாறிக் கொள்ளும் வாய்ப்பை நமக்கு அளிக்கிறது. முதல்வர் எழுப்பி இருக்கும் கேள்வி விவாதிக்கப்பட வேண்டியது மட்டுமல்ல, ஒரு நல்ல முடிவு காணப்பட வேண்டிய ஒன்றும்கூட!

Sunday 17 April 2011

இலங்கை ராணுவம் போர்க்குற்றம் புரிந்தது: ஐநா நிபுணர் குழு!

இலங்கை ராணுவம் போர்க்குற்றம் புரிந்துள்ளது என்று ஐக்கிய நாடுகள் சபை அமைத்த நிபுணர் குழு அறிக்கை அளித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இலங்கையில் ராணுவத்துக்கும் விடுதலைப்புலிகளுக்குமிடையே 2009-ம் ஆண்டில் நடந்த இறுதிப்போரில் ராணுவம் அத்துமீறிசெயல்பட்டு, ஏராளமான தமிழர்களை கொன்று குவித்ததாக ஐக்கிய நாடுகள் சபைக்கு புகார்கள் அளிக்கப்பட்டிருந்தன. அதன் அடிப்படையில், அதுபற்றி விசாரிக்க 3 பேர் அடங்கிய நிபுணர் குழுவை ஐ.நா.சபை பொதுச் செயலாளர் பான் கி-மூன் அமைத்திருந்தார். அக்குழு இலங்கைக்குச் சென்று விசாரணை நடத்த முயன்றபோது அக்குழுவை அனுமதிக்க இலங்கை அரசு மறுத்துவிட்டது. இந்நிலையில் பல்வேறு நிலைகளில் 3 பேர் கொண்ட நிபுணர் குழு விசாரணை நடத்தியது. கடந்த வாரம் அக்குழு தனது அறிக்கையை ஐ.நா.பொதுச் செயலாளரிடம் தாக்கல் செய்துள்ளது. அக்குழு அளித்துள்ள அறிக்கையில் இடம்பெற்றுள்ள விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. என்றாலும் அக்குழு அளித்த அறிக்கை விவரம், இலங்கையிலிருந்து வெளியாகும் நாளிதழில் வெளியாகியுள்ளது. அதில் இலங்கை அரசு போர்க்குற்றம் புரிந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இறுதிக்கட்ட போர் நடந்தபோது விடுதலைப்புலிகள் பலர் வன்னியிள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தனர். அவர்களை இலங்கை ராணுவம் கொன்று குவித்துள்ளது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. அதுபோல் வன்னிப்பகுதி மக்களை விடுதலைப்புலிகள் பிணைக் கைதிகளாகப்பிடித்து வைத்துக் கொண்டு ராணுவத்துக்கு எதிராக போரிட்டனர். அப்போது தப்பியோடிய பொதுமக்களை விடுதலைப்புலிகள் கொன்றுள்ளனர் என்றும் அச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. ஐ.நா. குழு அளித்த பரிந்துரை குறித்து இலங்கை அரசு தரப்பில் கருத்துத் தெரிவிக்கையில், விடுதலைப்புலிகள் அளித்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள் அடிப்படையில், விசாரணை குழுவை ஐ.நா. அமைத்துள்ளது. அக்குழுவின் அறிக்கை ஒருதலைப்பட்சமானது என்று கூறியுள்ளது.

இஸ்லாமியர்களுக்கு என தனி இண்டெர்நெட்!

உலகம் முழுவதும் வசித்துவரும் இஸ்லாமியர்களுக்கு என தனி இண்டெர்நெட் விரைவில் உருவாக்கப்படும் என ஈரான் அறிவித்துள்ளது. தற்போது வேர்ல்டு வைட் வெப் (www) என்றழைக்கப்படும் இண்டெர்நெட் மூலம் அனைத்து மக்களும் அனைத்து தகவல்களும் உடனுக்குடன் கிடைத்துவருகிறது. இந்த இண்டெர்நெட்டில் அமெரிக்கா முக்கியமான பங்கை வகிக்கிறது. பெரும்பாலான சைட்டுகள் அமெரிக்காவை மையமாக கொண்டே செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இண்டெர்நெட்டில் அமெரிக்காவின் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக ஈரான் அரசு இஸ்லாமிய மக்களுக்கு என தனியான இண்டெர்நெட்டை உருவாக்க உள்ளது. இந்த இண்டெர்நெட்டில் இஸ்லாமின் கொள்கைகள், சர்வதேச தகவல் பரிமாற்றத்திற்காக பார்ஸி மொழியை மேம்படுத்துவது போன்றவை உட்பட பல்வேறு தகவல்கள் இடம் பெறும் வகையில் உருவாக்கப்பட உள்ளது என ஈரான் அரசின்பொருளாதார பிரிவை சேர்ந்த அலி அக்வமொகம்மதி தெரிவித்துள்ளார்.

Saturday 16 April 2011

தேர்தலில் தினமணியின் பங்கு பாராட்டுக்குரியது!

 நாங்க மாறிட்டோம்.. நீங்க?
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிகளவு வாக்குப்பதிவுக்குக் காரணம் இரண்டு மட்டுமே. இந்த இரண்டு காரணங்களுக்கும் வாழ்த்தப்பட வேண்டியவை ஊடகமும், தேர்தல் ஆணையமும்தான். தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர் எண்ணிக்கையில் (4.7 கோடி பேர்) 18 வயது முதல் 29 வயதுக்குள் உள்ளவர்களின் எண்ணிக்கை 22 விழுக்காடு. இன்றைய இளைஞர்கள் அரசியலில் ஈடுபாடு இல்லாதவர்களாக இருக்கிறார்கள் என்பது எந்த அளவுக்கு உண்மையோ அந்த அளவுக்கு உண்மை, இவர்கள் பத்திரிகை படிக்கிறவர்களாகவோ, அல்லது தொலைக்காட்சிகளைப் பார்க்கிறவர்களாகவோ இருக்கிறார்கள் என்பதும். இணையதளத்தில் தங்கள் வலைதளங்களுக்குள் புகும் முன்பாக, கூகுள் அல்லது யாகு தரும் செய்திகளையும் போகிறபோக்கில் பார்க்கிறவர்களாக இருக்கிறார்கள். இவர்களுக்கு அரசியலில் ஈடுபாடு இல்லை என்றாலும், இவர்களுக்கு நாட்டில் நடக்கும் ஊழல்கள் பற்றிய தகவல்கள் நிச்சயம் போய்ச் சேர்ந்திருக்கிறது. தேர்தல் குறித்த செய்திகளும் போய்ச் சேர்ந்திருக்கிறது. இவர்கள் தங்கள் எதிர்ப்பை அல்லது ஆதரவைப் பதிவு செய்தே ஆக வேண்டும் என்ற விழிப்புணர்வுக்கு ஆளானார்கள். இதற்கான முக்கிய காரணம் தகவல் தொழில்நுட்பம்தான். இந்த இளைஞர் கூட்டத்தில் வழக்கமாக வாக்களிக்க வருவோர் மட்டுமன்றி, பெருவாரியாக வாக்களிக்க வந்த காரணத்தால்தான் வழக்கமான 65 விழுக்காடு வாக்குப்பதிவு இந்த முறை 77.8 விழுக்காடு என உயர்ந்தது. அதற்காக இவர்கள் எதிர்க்கட்சியைத் தேர்வு செய்தார்கள் என்பதை உறுதியாகச் சொல்லிவிட முடியாது. இன்றைய இளைஞர்களின் மனப்போக்கு வித்தியாசமானது. கதாநாயகர்களுடன் மட்டுமல்ல, வில்லன்களுடனும் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் வித்தியாசமான மனநிலை கொண்டவர்களாக இருக்கிறார்கள் இன்றைய இளைஞர்கள். இவர்கள் ஊழல்பேர்வழிகளுக்கு எதிராகத் திரண்டார்கள் என்று ஒரேயடியாக நம்புவதற்கு இல்லை. இரண்டாவது காரணம் தேர்தல் கமிஷன். மிகப்பெரிய பாராட்டுதலுக்கு உரியதாகவும், தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2011-ன் கதாநாயகனாகவும் இருப்பது தேர்தல் ஆணையம் மட்டுமே. இந்தமுறை தேர்தல் காலத்தில், ஊடகம் பார்த்தோரும், பத்திரிகை படித்தோரும் பேசிக்கொண்டவை அனைத்தும்- அது வீட்டுச் சமையல்கூடமாக இருந்தாலும் டீக்கடையாக இருந்தாலும்- தேர்தல் கமிஷனின் நியாயமான, நேர்மையான நடவடிக்கைகள் பற்றித்தான். என்னதான் தமிழக முதல்வர் கருணாநிதி புலம்பித் தீர்த்தாலும், மக்கள் அதன் நடவடிக்கைகளால் மனம் மகிழ்ந்தார்கள். தங்கள் வீட்டுச்சுவர்கள் நாசப்படுத்தப்படாத ஒரே காரணத்துக்காகத் தேர்தல் கமிஷனுக்கு மதிப்பளித்தார்கள். எங்குபார்த்தாலும் ஒலிபெருக்கிகள் இல்லாத சூழலைப் பாராட்டினார்கள். வீடுதேடி வந்து பத்திரிகை வைத்துவிட்ட ஒரே காரணத்துக்காக கல்யாணத்துக்குப் போய் தலையைக் காட்டுவதுபோல, தேர்தல் கமிஷனின் நேர்மைக்காகவே வாக்குச் சாவடிக்கு வந்த பொதுமக்களும், அறிவுஜீவிகளும் அதிகம். அந்த அளவுக்கு நம்பகத்தன்மையை உருவாக்கியது தேர்தல் ஆணையம். இந்த முறை பூத் சிலிப்புகளைத் தேர்தல் ஆணையமே வழங்கியது. அழகாகப் படத்துடன்கூடிய ரசீதுகளை அளித்தது. வாக்குச் சாவடிக்கு வந்தவர்களில் பெரும்பாலோர், தேர்தல் ஆணையம் அளித்த இந்த பூத் சிலிப்புகளை வைத்துக்கொண்டுதான் வாக்களித்தார்கள் என்பது நாளிதழ், தொலைக்காட்சி பார்த்த எவராலும் யூகிக்க முடியும். முன்பெல்லாம் ஏதோ ஒரு அரசியல் கட்சியினர் அவர்கள் சின்னத்துடன் பூத் சிலிப் கொடுக்கும்போது அதைக் கொண்டு வருவதில் தயக்கம் இருந்தது. ஆனால் இப்போது வாக்காளர் பொதுமனிதராக வாக்குச்சாவடியில் வரிசையில் கூச்சமின்றி, தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளாமல் நிற்கமுடிந்தது. இதற்காகவே வோட்டுபோட வந்தவர்களும் அதிகம். மேலும், இந்தப் புகைப்படங்களுடன் கூடிய வாக்காளர் பட்டியல் புதிய சூழலை உருவாக்கியுள்ளது. பூத் ஏஜன்டாக இருப்பவர் தனது வரையறைக்கு உள்பட்ட நான்கு அல்லது ஐந்து தெருக்களுக்கான வாக்காளர்களைப் பெயர் வைத்து அறிவதில்லை. மாறாக, புகைப்படத்தை வைத்தே அறிந்துகொள்ளும் சூழல். இதனால் யார் வாக்களிக்க வரவில்லை என்பதை அவரால் மிகத் தெளிவாகச் சொல்லிவிட முடியும். கிராமங்களில் அத்தகைய சூழலில், மறுநாள் சந்திக்கும்போது, வயற்காட்டுக்குப் போகும்போது, நீ வோட்டுபோடவே வரவில்லையே என்று எல்லார் முன்னிலையிலும் கேட்டுவிட்டால் என்ன செய்வது என்கிற கூச்சமும்;எல்லாரும் போய்ப் போட்டுவரும்போது நாம் மட்டும் சும்மா இருப்பதா என்கிற பெருந்திரள் மனநிலையையும் (மாஸ் சைக்காலஜி) உருவாக்கியதில் தேர்தல் ஆணையம் மிகப்பெரும் சாதனை நிகழ்த்தியுள்ளது. இந்தத் தேர்தலில் எந்தவொரு கட்சியாலும் தங்கள் பிரசாரத்துக்கு கூட்டத்தைக்கூட கூட்ட முடியவில்லை என்கிறபோது, இந்த அதிகபடியான வாக்காளர்கள் அரசியல் ஈடுபாட்டால் வாக்களிக்க வரவில்லை என்பது நிச்சயம். அரசியல்வாதிகள் தங்கள் பொய்முகங்கள் கிழிந்து அம்பலப்பட்டுக் கிடக்கிறார்கள். அதனால்தான் இவர்கள் பேச்சைக் கேட்கவே பணம் கொடுத்து ஆள்திரட்டும் நிலை, கட்சிக்காரர்களுக்கு ஏற்பட்டது. ஆனால், இந்த கூடுதல் வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்திருந்தபோதிலும், ஊழலுக்கு எதிராக அல்லது விலைவாசி உயர்வுக்கு எதிராக என எதுவாக இருந்தாலும், தங்கள் கடமையாற்றும் உணர்வால் உந்தப்பட்டு வந்தவர்கள் இவர்கள், இந்த உணர்வை ஊட்டியவர்கள் தேர்தல் ஆணையமும், ஊடகங்களுமே. மக்கள் தங்கள் ஜனநாயகக் கடமையைச் சரியாகவே ஆற்றியிருக்கிறார்கள். இதே கடமை உணர்வு அரசியல்வாதிகளுக்கும் ஏற்பட்டுத் தேர்ந்தெடுக்கப்படும் வேட்பாளர்களும் பொறுப்புணர்வுடன் தங்களைத் தேர்ந்தெடுத்த மக்களின் நலனையும், தேச நலனையும், வருங்காலச் சந்ததியினரின் (தங்களுடைய வருங்காலச் சந்ததியினரை அல்ல) நலனையும் கருத்தில்கொண்டு செயலாற்றினால், இங்கே ஒரு நல்லரசு அமையும். இந்தியா வல்லரசாக உலக அரங்கில் மிளிரும்

Wednesday 13 April 2011

வேல்துரை எம்எல்ஏ பெற்ற வெற்றி செல்லாது

2006 பேரவைத் தேர்தலில் சேரன்மாதேவியில் வேல்துரை எம்எல்ஏ பெற்ற வெற்றி செல்லாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2006 தேர்தல் நடைபெறும்போது தமிழக அரசு ஒப்பந்தங்களைப் பெற்றிருந்ததால் அவர் பெற்ற வெற்றி செல்லாது என அறிவிக்கக் கோரி அதிமுகவின் பி.எச்.மனோஜ் பாண்டியன் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.  அவரது மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், வேல்துரை பெற்ற வெற்றி செல்லாது என இன்று(13042011) தீர்ப்பளித்துள்ளது

தீர்ப்புகள் தாமதவதால் நம் நாட்டு நீதிமன்றங்களின் மேல் உள்ள நம்பிக்கை மேலும் குறைகிறது   

Saturday 9 April 2011

தமிழகத்தில் தேர்தல் நடத்தும் பணி சவாலானது- குரேசி




தேர்தல் ஆணையரின் கருத்து ஒவ்வொரு தமிழனும் தலைக்குனியக்குடிய வகையில் உள்ளது தேர்தல் ஆணையரின் கருத்து!  சரியா? தவறா? என் ஆராயத் தேவை இல்லை.நம் மாநிலத்தில் கடந்த ஒரு மாத காலமாக சோதனையின்போது கைப்பற்றபடும்.பணங்களே இதற்கு  சாட்சிகளாக உள்ளன.அப்படி உண்மையில் நாமும் சொல்லலாம் இந்த தேர்தல் பணநாயகத்துக்கும் பணநாயகத்துக்கும் நடக்கும் தேர்தல் அதனால் தான் தமிழகத்தின் அரசியல் கட்சிகள் அனைத்துக் கட்சிகளும்  பெரும்பாலும் பண முதலைகளை வேட்பாளர்களாக அறுவித்துள்ளனர். இதில் யாரும் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில்தான் உள்ளது. ஏன் பண முதலைகளாக இருந்தால் மட்டும் தான் சட்டமன்றதிக்கும் நாடாளுமன்றதிக்கும் செல்ல முடியும் என்பது எழுதப் படாத விதியாக மாறிவிட்டதே !   பணத்தை மட்டுமே தகுதியாக கொண்டு எத்தனையோ முதலைகள் ஜனநாயகத்தையே  மவ்னமாக்கி கொண்டு இருக்கிறார்களே   மக்களுக்கு சேவை செய்யவா பணங்களை வாரி இறைக்கிறார்கள்?.                 

திமுகவின் திராவிட முகம் !


Thursday 7 April 2011

வெற்றுப்பத்திரிகை!

2ஜி அலைக்கற்றை (ஸ்பெக்ட்ரம்) முறைகேட்டுக்கு ஓர் அதிர்ஷ்டம் உண்டு. அந்தப் பிரச்னை விஸ்வரூபம் எடுக்கும் போதெல்லாம் வேறு ஏதாவது பரபரப்பான செய்தி வெளிவந்து ஸ்பெக்ட்ரம் பிரச்னை ஊடகங்களில் முக்கியத்துவம் பெறாமல் பின்னுக்குத் தள்ளிவிடும்.  ஸ்பெக்ட்ரம் ஊழல் பணத்திலிருந்து வெட்டப்பட்ட ஒரு கால்வாய் திமுகவின் தலைமையிடமான சென்னையிலுள்ள அண்ணா அறிவாலயத்திலிருந்து இயங்கும் கலைஞர் தொலைக்காட்சியைச் சென்றடைந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணைக்காக மத்தியப் புலனாய்வுத் துறையினர் அண்ணா அறிவாலயத்துக்கு வந்து கலைஞர் டி.வி.யின் பங்குதாரர்களான முதல்வரின் மனைவி தயாளு அம்மாளையும், மகளும் மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழியையும் விசாரித்தனர்.  பாருங்கள் அதிர்ஷ்டத்தை, எந்தப் பத்திரிகையும் விசாரணை தொடர்பான செய்திகளுக்கு முக்கியத்துவம் தர முடியாமல் ஜப்பானை சுனாமி தாக்கிய செய்தி தடுத்துவிட்டது. முக்கிய ஊடகங்களான சன் தொலைக்காட்சியும், கலைஞர் தொலைக்காட்சியும் அவர்கள் குடும்ப நிறுவனங்கள் என்பதால் அடக்கி வாசித்து விசாரணை நடந்த விஷயத்துக்கு முக்கியத்துவம் அளிக்காமல் தவிர்த்துவிட்டன.  இப்போதும் பாருங்கள், 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான சிபிஐயின் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நாளில் இந்தியா உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெற்றிபெற்று, அந்தச் செய்தியைப் பின்னுக்குத் தள்ளிவிட்டது. சுமார் 80,000 பக்கங்களுக்கும் அதிகமான அந்தக் குற்றப்பத்திரிகை 654 ஆவணங்களையும், 125 சாட்சிகளையும் முன்வைத்திருக்கிறது. ஒன்பது நபர்களையும், மூன்று நிறுவனங்களையும் இந்திய குற்றவியல் சட்டத்தில் பல்வேறு பிரிவுகளின் கீழ் குற்றம்சாட்டியிருக்கிறது.  கைது செய்யப்பட்டுள்ள முக்கிய எதிரிகளான முன்னாள் தொலைத்தொடர்பு அமைச்சரும், திமுகவின் கொள்கை பரப்புச் செயலருமான ஆ. ராசா, முன்னாள் தொலைத்தொடர்புத்துறை செயலர் சித்தார்த் பெஹுரா, ஆ. ராசாவின் தனிச்செயலர் ஆர்கே. சந்தோலியா இப்போது எட்டிசலாட் டி.வி. என்று வழங்கப்படும் ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தின் இயக்குநர் உஸ்மான் பால்வா ஆகிய நால்வருக்கும் குற்றப்பத்திரிகை வழங்கப்பட்டிருக்கிறது. ஸ்வான் டெலிகாம், யூனிடெக், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் கலைஞர் தொலைக்காட்சி போன்றவை குற்றப்பத்திரிகையில் ஸ்பெக்ட்ரம் முறைகேட்டுடன் தொடர்புடைய நிறுவனங்களாக அடையாளம் காட்டப்பட்டுள்ளன, அவ்வளவே.  கடந்த 2-ம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாவிட்டால், ஆ. ராசாவின் காவல் 60 நாளைக் கடந்திருக்கும் என்பதால் அவரைக் கட்டாயமாகப் பிணையில் விடுவிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கும். ஏற்கெனவே, ஸ்பெக்ட்ரம் உள்ளிட்ட பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளால் அவப்பெயரைச் சம்பாதித்துக் கொண்டிருக்கும் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு ராசாவின் விடுதலை மேலும் தலைவலியை ஏற்படுத்திவிடும் என்பதாலோ என்னவோ அவசரக் கோலத்தில் ஒரு குற்றப்பத்திரிகையைப் புலன் விசாரணைத்துறை தாக்கல் செய்திருக்கிறதோ என்கிற சந்தேகம் எழுகிறது.  சிபிஐ தாக்கல் செய்திருக்கும் குற்றப்பத்திரிகை 80,000 பக்கங்கள் கொண்டது என்கிற பிரமிப்பை ஏற்படுத்துகிறதே தவிர, முறையாகக் குற்றங்களைப் பட்டியலிட்டுத் தகுந்த சாட்சிகளுடனும், ஆதாரங்களுடனும் தாக்கல் செய்திருக்கிறதா என்றால் இல்லை. ஸ்பெக்ட்ரம் முறைகேடுகளை விசாரிக்க ஏற்படுத்தப்பட்டிருக்கும் உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பு இருப்பது தெரிந்தும், அரசியல் நிர்பந்தங்களை மீறி நமது புலனாய்வுத் துறையால் செயல்பட முடியவில்லையோ என்கிற தோற்றத்தைத்தான் குற்றப்பத்திரிகை ஏற்படுத்துகிறது.  60 நாள்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாவிட்டால், எதிரிகளாக அடையாளம் காட்டப்பட்டிருப்பவர்கள் பிணையில் விடுதலையாகி விடுவார்கள் என்பது, அரைகுறையாகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்குக் காரணமாக இருக்க முடியாது. குற்றம் நிகழ்ந்திருப்பது கண்டறியப்பட்டிருக்கும் நிலையில் எதிரிகள் அனைவரும் ஐயம் திரிபறக் கண்டறியப்பட்டு, தகுந்த ஆதாரங்களுடன் குற்றப்பத்திரிகைகளில் அடையாளம் காட்டப்பட்டிருக்க வேண்டுமே, ஏன் செய்யவில்லை?  சிபிஐ கைது செய்திருப்பதும்கூட தேர்ந்தெடுத்த சிலரைத்தானே தவிர, குற்றத்தில் சம்பந்தப்பட்ட அனைவரும் கைது செய்யப்படவில்லையே, ஏன்? கலைஞர் தொலைக்காட்சிக்குப் பணம் போயிருக்கிறது. கலைஞர் தொலைக்காட்சியில் விசாரணை நடத்தப்பட்டு அது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அப்படியானால், கலைஞர் தொலைக்காட்சி முதல்வரின் குடும்பத்தினருடன் தொடர்புடையது என்பதால், சட்டப்பேரவைத் தேர்தல் முடியும்வரை நடவடிக்கைகள் தள்ளி வைக்கப்பட்டிருக்கிறதா? அரசியல் காரணங்கள் சிபிஐயின் கையை ஏன் கட்டிப்போட வேண்டும்?  தலைமைத் தணிக்கை அதிகாரியின் அறிக்கையை அடிப்படையாக எடுத்துக்கொண்டுதான் மத்தியப் புலனாய்வுத் துறை வழக்குப் பதிவு செய்திருக்கிறது. தணிக்கை அதிகாரியின் அறிக்கைப்படி ஸ்பெக்ட்ரம் முறைகேடுகளால் ஏற்பட்டிருக்கும் உத்தேச இழப்பு ரூ. 57,666 கோடியிலிருந்து ரூ. 1,76,645 கோடிவரை. ஆனால், குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டிருக்கும் தொகை வெறும் ரூ. 22,000 கோடி மட்டும்தானே, ஏன் அப்படி?  முறைகேடு நடக்கிறது என்று மன்மோகன் சிங்குக்குத் தெரிந்தும், தனக்குப் பலர் தகவல்கள் தந்தார்கள் என்று பிரதமரே வாக்குமூலம் அளித்தும் அவரைப் பற்றிக் குற்றப்பத்திரிகையில் ஒரு வார்த்தைகூட இல்லையே, ஏன்? பிரதமர் மத்தியப் புலன் விசாரணைத் துறையின் விசாரணை வரம்புக்கு அப்பாற்பட்டவரா?  அனில் அம்பானியில் தொடங்கி ரத்தன் டாடா வரை பல பெரு முதலாளிகள், கார்ப்பரேட் முதலைகள் சம்பந்தப்பட்டிருக்கிறார்களே, அவர்களை நெருங்க மத்தியப் புலனாய்வுத் துறை பயப்படுகிறதே, ஏன்? ஏனோ தானோ என்று வழக்கை ஜோடித்து, கார்ப்பரேட் முதலாளிகளும், அவர்களது இடைத்தரகர்களாகச் செயல்பட்டவர்களும் தப்பித்துப்போக வழிவகுத்து விடுமோ மத்தியப் புலன் விசாரணைத் துறை என்கிற அச்சம் மேலிடுகிறது. குற்றப்பத்திரிகையில் சம்பந்தப்பட்ட கார்ப்பரேட் நிறுவனங்களும், அரசியல் தொடர்புள்ள குடும்பத்தினரும் ஏன் இடம்பெறவில்லை என்கிற கேள்விக்கு இடமாகிவிட்டது.  சுதந்திர இந்தியாவில் நடந்த மிகப்பெரிய முறைகேடு இது. சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் இனம் காணப்பட்டுத் தகுந்த ஆதாரங்களுடன் சட்டத்தின்முன் நிறுத்தப்படாவிட்டால், மக்களாட்சியின் மீதான நம்பிக்கையே தகர்ந்துவிடும் என்பதை மத்தியப் புலன்விசாரணைத் துறை புரிந்துகொள்ள வேண்டும்!

Tuesday 5 April 2011

வாழ்க பணநாயகம்!

பணக்காரர்கள் மட்டும்தான் தேர்தலில் போட்டி போட முடியும் என்கிற நிலைமை ஏற்பட்டுவிட்டால், ஜனநாயகத்துக்கு அதைவிடப் பெரிய ஆபத்து வேறு எதுவுமே இருக்க முடியாது. ஒன்றிரண்டு தேர்தல்களில் வேண்டுமானால் இது செல்லுபடியாகுமே தவிர, இதுவே பரவலான அதிருப்தியையும், மக்களாட்சிக்கு எதிரான மனப்போக்கையும் ஏற்படுத்தித் தீவிரவாதிகளுக்குத் தீனிபோடும் சூழ்நிலைக்குத் தேசத்தைத் தள்ளிவிடக்கூடும். 2011 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 240 கோடீஸ்வரர்கள் போட்டியிடுகிறார்கள். அதில் முதலிடத்தில் இருக்கும் நாங்குநேரி காங்கிரஸ் வேட்பாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான எச். வசந்தகுமார், ஊரறிந்த வியாபாரி. தமிழகத்தின் மிகப்பெரிய வணிக நிறுவனத்தின் உரிமையாளர். இவருக்கு ரூ. 133 கோடி சொத்து இருப்பதில் குற்றம் காண முடியாது. ஆனால், எந்தவிதப் பின்னணியும் இல்லாத பலர் கோடீஸ்வரர்களாக வலம் வருவது எப்படி என்பதுதான் புரியவில்லை. 240 வேட்பாளர்களில் 75 பேர் அதிமுகவினர். 73 பேர் திமுகவைச் சேர்ந்தவர்கள். காங்கிரஸ் (33), பாஜக (25), தேமுதிக (12) பாமக (11) போன்ற கட்சிகள் மட்டுமல்லாமல் விடுதலைச் சிறுத்தைகள், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சிகள்கூடத் தங்களது வேட்பாளர்களாகக் கோடீஸ்வரர்களைக் களமிறக்கி இருக்கின்றன என்பதுதான் வியப்புக்குரிய ஒன்று. ஐந்து ஆண்டுகள் அமைச்சராக இருந்தால் ஐம்பது தலைமுறை வீட்டில் உட்கார்ந்து சாப்பிடலாம் போலிருக்கிறது. எப்படித்தான் இவர்களுக்கு இவ்வளவு சொத்துச் சேருகிறது என்று யாரையும் கேட்கவிடாமல் இருப்பதற்காகவே, நாய்க்கு ரொட்டித் துண்டு போடுவதுபோல, தனது தொகுதியிலுள்ள வாக்காளர்களின் வீட்டில் நடைபெறும் நல்லது கெட்டதுக்கு "மொய்' எழுதிவிடுகிறார்கள். அவர்களும் "அள்ளிக் கொடுக்கும் வள்ளல்' என்று வாயாரப் புகழ்ந்து வாலாட்டவும் செய்கிறார்கள். தமிழக உணவு அமைச்சர் எ.வ. வேலு கடந்த 2006 தேர்தலில் போட்டியிடும்போது தனது வேட்புமனுவுடன் இணைத்திருந்த சொத்து விவரப்படி, அவரிடம் ரூ. 60,000 மதிப்புள்ள 1.1 ஏக்கர் விவசாய நிலமும், வெறும் ரூ. 15,000 மதிப்புள்ள நகைகளும், வங்கியில் ரூ. 25,000 இருப்பதாகவும் கணக்குத் தாக்கல் செய்திருந்தார். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, இப்போது அவரது வங்கிக் கணக்கில் ரூ. 17.47 லட்சம் இருக்கிறது. ரூ. 1.75 கோடி மதிப்புள்ள விவசாய நிலங்கள் உள்ளன. அவரது வீட்டின் மதிப்பு ரூ. 4.5 கோடி. சொத்து பத்து எதுவும் இல்லாமல் இருந்த அவரது மனைவிக்கும் இப்போது லட்சக்கணக்கில் சொத்து சேர்ந்திருக்கிறது. அவரை விடுங்கள் பாவம். தனது பெயரிலும், மனைவி பெயரிலும்தான் சொத்துச் சேர்த்து வைத்திருக்கிறார். முதல்வர் உள்ளிட்ட சில அமைச்சர்கள் தங்களைவிடத் தங்களது மனைவியின் பெயரிலும், அதைவிட அதிகமாகத் துணைவியின் பெயரிலும் சொத்துச் சேர்த்து வைத்திருக்கிறார்களே, அவர்களை என்ன சொல்ல? முதல்வர் கருணாநிதியின் சொத்து மதிப்பு வெறும் ரூ. 4.92 கோடி மட்டுமே. அவரைவிட அவரது மனைவி தயாளு அம்மாளுக்குச் சொத்து அதிகம் - ரூ. 15.45 கோடி. அதைவிடத் துணைவியார் ராஜாத்தி அம்மாளுக்கு அதிகம் - ரூ. 23.97 கோடி. தலைவன் எவ்வழி தொண்டன் அவ்வழி. அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் சொத்து மதிப்பு ரூ. 75.18 லட்சம் மட்டும்தானாம். அவரது மனைவி ரங்கநாயகியின் சொத்து மதிப்பு ரூ. 93 லட்சம். ஆனால், துணைவியார் லீலாவின் சொத்து எவ்வளவு தெரியுமா? ரூ. 2.25 கோடி. அமைச்சர்கள் பொன்முடி, துரைமுருகன், பெரியகருப்பன், பரிதி இளம்வழுதி, என். செல்வராஜ், வெள்ளக்கோவில் சாமிநாதன், தங்கம் தென்னரசு என்று இவர்களைவிட இவர்களது மனைவிகளுக்குத்தான் பல மடங்கு அதிகமாகச் சொத்துக் குவிகிறது. எந்தப் பதவியும் வகிக்காத அவர்கள் மீது சொத்துக் குவிப்பு வழக்குத் தொடர முடியாது. கேட்டால் வியாபாரம் செய்கிறார்கள் என்றோ, இப்போது யாரைக் கேட்டாலும் சொல்லும் பதிலான "ரியல் எஸ்டேட் செய்து சம்பாதித்தது' என்றோ கூறுவார்களோ என்னவோ... சட்டப்பேரவை உறுப்பினர்களும், அமைச்சர்களும் ஐந்து ஆண்டு பதவிக் காலத்தில் எப்படி இவ்வளவு சொத்துகளைத் தங்கள் பெயரிலும், தங்கள் உறவினர்கள் பெயரிலும் வாங்கிக் குவிக்கிறார்கள் என்பதைத் தட்டிக் கேட்க வேண்டிய வருமானவரித் துறையோ, லஞ்ச ஊழல் தடுப்புத் துறையோ இதைப்பற்றியெல்லாம் கவலைப்படுவதே கிடையாது. கேட்டால் ஆடிட்டர் மூலம் முறையாகக் கணக்குத் தாக்கல் செய்து வரியும் கட்டி இருக்கிறார்கள் என்று பதிலளித்து விடுகின்றனர். முறைகேடாகச் சம்பாதித்து முறையாக வரி கட்டி விட்டால் நேர்மையான மனிதர் என்று நற்சான்றிதழ் கொடுக்கப்படும் ஒரே தேசம் நமது இந்தியாவாகத்தான் இருக்கும். ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்று வேறுபாடே இல்லாமல் கோடீஸ்வரர்களை அடையாளம் கண்டு வேட்பாளர்களாகக் களமிறக்கி இருக்கின்றன. வேட்பாளர் தேர்வுக்கு வரும்போதே "உங்களால் எவ்வளவு பணம் செலவழிக்க முடியும்?' என்கிற கேள்வியுடன்தான் நேர்முகமே தொடங்குகிறது. பணம் கொடுத்து வேட்பாளர்களானதாகக் கூறப்படுகிறது. அரசியல் என்பது மக்கள் சேவைக்கான ஒன்றாக இல்லாமல் ஆதாயம் தரும் தொழிலாக மாறிவிட்டதன் காரணம் இதுதான். தெருக்கோடியில் மக்கள், பல கோடிகளில் புரளும் வேட்பாளர்கள். வாழ்க பணநாயகம்!

Monday 4 April 2011

இந்தியாவின் கேட்பாரற்ற நிலை!

உலகப் பணக்காரன், அமெரிக்க கோடீஸ்வரன் வாரன் பப்பெட்டின் இந்திய விஜயம்  களைகட்டத் தொடங்கியிருக்கிறது. இந்து, எக்ஸ்பிரஸ் போன்ற அவாளின் மேல்  லோகங்கள் மட்டுமல்ல, தினகரன் பத்திரிகை வரை எஜமான் காலடி மண்ணெடுத்து எழுத  ஆரம்பித்து விட்டன. “பாவம்! பப்பெட் கஷ்டப்பட்டு பாட்டில் கழுவி பங்குச் சந்தை வரை முன்னேறி,
 ஜெயலலிதா நான் ஏழு வயசுல இளநி வித்தவ என்று பாடியது போல பப்பெட் பதினேழு  வயசுலயே பங்குச் சந்தையை வித்தவன்னு தினகரன் பலூன் ஊதுகிறது. தமிழ்நாட்டு  சனீஸ்வரன் கோயிலுக்கும் திருச்செந்தூருக்கும் சட்டையில்லாமல் பக்திப் பழமாகும்  கர்நாடக -எடியூரப்பா பெங்களூருவில் குண்டு குண்டுன்னு போய் அமெரிக்க  குலதெய்வம்   பப்பெட்டை கோட்டு சூட்டோடு ஈர்த்து வரவேற்றிருக்கிறார்.
 திரைக்கு வந்து சில மாதங்களே ஆன உத்தமபுத்திரன் படத்தில் அமெரிக்க
 கோடீஸ்வரனுக்கு பொண்ணைக் கொடுத்து தானும் கோடீஸ்வர சம்பந்தியாக கொண்டைய  அறுத்துக் கொள்ளும் அந்தப் படத்தின் அற்ப கதாபாத்திரங்களை நிஜத்தில்  தோற்கடித்து விட்ட்டார் எடியூரப்பா. வெளிநாட்டு மூலதனத்தை ஈர்ப்பதில்  கருணாநிதி கறுப்புக் கண்ணாடியை துடைத்து மாட்டுவதற்குள் எடியூரப்பா முந்திக்  கொண்டாலும், வந்தாரை வாழவைக்கும் தமிழனின் பண்பாட்டுப்படி பப்பெட்டை  சென்னைக்கு அழைத்து வந்து ஒருவாய் சோறுபோடாமலா அனுப்பி விடுவார் தளபதி… உலகப்  பணக்காரனோடு சம்பந்தம் வைத்துக் கொள்வதன் மூலம் அப்படடியே நாமும் ஒரு
 ஓரத்தில் உள்ளூர் பணக்காரனாக சுவிஸ் வங்கியில் ஒரு குடிசையைப் போட்டுக்  கொள்ளலாம் என்ற இந்த அடிமைகளின் ஆசை தனிக்கதை..
 விருந்து சாப்பிட வர்றேன்னு வீட்டு அட்ரச வாங்கிட்டு, இலை போடுற நேரத்துல எங்க  உன் பொண்டாட்டிய தர்றியேன்னு  கேட்ட கதையாய், இந்தியாவுக்கு வருவதற்கு முன்பே  “என் விருந்துக்கு உபசாரமாய் இந்தியாவின் இன்சூரன்ஸை தூக்கி தரவேண்டும்  என்கிறான் பப்பெட். எம்பெருமான் மனம் நோகாதிருக்க இயற்பகை நாயனார்கள் எதை
 வேண்டுமானாலும் கொடுக்கலாம். மூலதன அடியார்கள் முற்றும் துறந்தவர்கள்.  நாட்டின் மீது பற்று கொண்டவர்கள் பப்பெட்டை லெப்ட் ரைட் வாங்க வேண்டாமா? அமெரிக்காவில் பணம் கட்டி படிக்கப் போன இந்திய மாணவர்களையே சந்தேகக் கேசு  என்று காலில் கேமராவைப் பொருத்தி இழிவுபடுத்துகிறான். அங்கு போய் நாம்  வாழ்வதற்கான உரிமைக்கே போராட வேண்டியிருக்கிறது.  இங்கு வரும் அமெரிக்க  பணக்காரனோ ஒரு விருந்துக்கே இட்லி வடையைக் கேட்பது போல் இன்சூரன்ஸை கேட்பதும்
 சில்லறை வணிகத்தை திறந்து விடச் சொல்வதும் இந்திய சந்தையை தடையில்லாமல்  மேய்ந்து கொள்ள கனிம வளங்கள் வரை கையை வைப்பதும் இந்தியாவின் கேட்பாரற்ற  நிலைமையையும், அமெரிக்க ஆதிக்கத்தின் கொக்கரிப்பையும் நம் கண்முன்னே  நிறுத்துகிறது.
 வாரன்பப்பெட்டுடன் யார் விருந்தில் கலந்து கொண்டாலும் அவனுக்கு 11 கோடி  ரூபாய் தரவேண்டுமாம். அவனோடு விருந்து சாப்பிட தரப்படும் “மொய்” அவனது  அறக்கட்டளைக்கு போய்ச் சேருமாம். இதற்குப் பெயர்தான் ஊரை அடித்து உலையில்  போடுவது! இவனோடு உக்காந்து ஒருவாய் சோறுதிங்க 11கோடி கேட்கும் இந்த பங்குச்  சந்தை தாதா இந்தியாவில் மட்டும் தன்னோடு விருந்து சாப்பிட இந்திய இன்சூரன்ஸ்  துறையின் அதிகாரி நாராயணனை விரும்பி அழைப்பதாகவும், அவர் தனக்கு 11 கோடிக்குப்  பதில் இன்சூரன்ஸ் துறையிலிருக்கும் வெளிநாட்டு மூலதனத்திற்கான வரம்பு  26 %
  என்பதை 49 % உயர்த்த வேண்டும் என திருவாய் மலர்ந்திருக்கிறான்
 பப்பெட். உண்ட வீட்டுக்கு ரெண்டகம் என்பார்கள். இவனோ உண்ண வரும்போதே  ரெண்டகம். ஊரான் வூட்டு நெய்ய, பப்பெட்டு கையேன்னு இந்தியாவையே வழிச்சு நக்க  பாக்கறான். அதாவது மத்தவன மாதிரி நான் மட்டமான ஆள் கிடையாது. ஒரு வேள விருந்துக்கு உன்  வீட்ட எழுதித் தர்றவேணாம்…. வயசுக்கு வந்த பொண்ண குடுங்குறான்… விலை
 மதிப்பில்லாத பொதுத்துறைகளை மட்டுமல்ல முன்பு இந்தியாவுக்கு வந்த ஒபாமா, ஜனாதிபதி வரவேற்பில் இடம்பெற்ற ஒட்டகத்தைக் கொடு  என்று ஆசைப்பட்டு கேட்க, ஒட்டகத்தோடு இந்திய அணுசக்தி உரிமையையும் ஒட்ட ஓட்டிவிட்டனர் அடிமைகள். பொதுவாக நம் ஊரில் விருந்துக்குப் போகிறவன்தான் மொய் வைத்துவிட்டு வருவது  வழக்கம். அமெரிக்க, பன்னாட்டு முதலாளிகளோ இந்தியாவில் விருந்துக்கு வந்தாலே
 மின்சாரம், தண்ணீர், மருத்துவம் என்று எல்லாப் பொதுத்துறைகளையும் மொய்யாய்  வை.. என அன்புக் கட்டளையிடுகிறான். எச்சிலை எடுக்கும் பாராளுமன்ற மாமாக்களோ  பப்பெட் கடைக்கண் பார்வை காட்டிவிட்டால் மன்மோகன் சிங்குக்கு மாமலையும் ஓர்  கடுகாம்..என ஆடை வரைக்கும் அவிழ்த்துப் போட தயாராகி விட்டார்கள்.  பொதுத்  துறைகள் மட்டுமல்ல வெளிநாட்டுக் காரன் பிள்ளை பெற இந்தியாவின் கருப்பைகள் வரை
 உலகச் சந்தைக்கு திறந்துவிடப் பட்டுவிட்டது. வர்றவன் போறவன்லாம் இந்த நாட்டையே  எச்சிலை ஆக்கும் இழிநிலையை உலகப் பணக்காரர்களையே இந்தியா ஈர்த்துவிட்டது என்பது  போல பிரச்சாரம் செய்கின்றன மானங்கெட்ட ஊடகங்கள். தலையைக் கவிழ்ந்து கொண்டு தானுண்டு வேலையுண்டு என்று கைக்குட்டைகளால் மட்டும்  இந்த அவமானத்தை துடைத்து விட முடியாது. அமெரிக்க மற்றும் பன்னாட்டு மூலதன  ஆதிக்கத்திற்கெதிரான போராட்ட அணிகளில் கை கோர்ப்பதன் மூலமாகவே நாடும் நாமும்  இனி தலைநிமிர்ந்து வாழமுடியும்.