பதிவுகள்

Saturday 25 June 2011

இதயங்களின் தூரமென்னவோ இமைகளின் இடைவெளிதான்...!


அன்பிற்கினியவரே!
இரவு நிசப்தத்தில் _ என்
"உச்சரிப்பு" உங்களுக்கு
மட்டும் கேட்கிறதா...?
நானோ.....
ராக்கோழியின் சுருதியில்
முகாரி முடைகிறேன்
நேருக்கு நேர்
முகம் காண ஏங்கி
எதிர் எதிர் திசையில்
வலம் வந்த
நம் வீட்டு வாசற்படி
இன்று என் தனித்த
காலடி ஓசை கேட்டு
தகவல் விசாரிக்கின்றது?
நகப் பூச்சுகளின் நடுவில்
என் மருதாணி விரல்
நினைவிற்கு வருவது
உனக்கு கடினம் தான்
ஆயினும்.......
கலைந்த முடியை
நீ
கோதும் போதெல்லாம்
சிக்கெடுத்த என்
சின்ன விரல்களை
சிந்திக்காதிருக்க முடியாது
என்ன செய்கிறாய் அங்கே?
நம் காதல் வரிகளை
கணிணிகளுக்கிடையே
காயப்படுத்திவிடாதே...
மைல் கற்களால்
நாம் பிரிந்திருந்தாலும்
இதயங்களின் தூரமென்னவோ
இமைகளின் இடைவெளிதான்
இருந்தாலும்....
காத்திருத்தலின் கனத்தை
சுமந்து சுமந்து
மடிக்கல்லுக்கே
மடி வலிக்கிறது..
பிரிந்து தவித்தது போதும்...
நீ .... இனியாயினும்
சின்ன சிரிப்பாய்
சிறகை விரித்து என்னருகில்
வர தடையேதும் இருக்கிறதோ!
அழுதாலும் ... சிரித்தாலும்
அன்பே நீதானடா ...
என் சுவாசம்........