பதிவுகள்

Monday 22 August 2011

மறுபரிசீலனை தேவை!


சமுக ஆட்சியில் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலகக் கட்டடத்தை மருத்துவமனை, மருத்துவக் கல்லூரியாக மாற்றும் அறிவிப்பை தமிழக முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவித்தவுடனேயே அனைத்து எதிர்க்கட்சிகளும் பாராட்டின. சட்டப்பேரவையில் எல்லோரும் பாராட்டிவிட்டார்கள் என்பதற்காகவும், ஒரு சில பத்திரிகைகளும் நடுநிலையாளர்களும்கூட ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதற்காகவும், நாமும் நமது பங்குக்குத் தமிழக முதல்வரின் இந்த முடிவை முழுமனதுடன் பாராட்டிவிட முடியவில்லை. இந்தக் கட்டடத்தில் சட்டப்பேரவை நடத்தப் போதுமான வசதி இல்லை என்பதும், தற்போது செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் செயல்படும் 36 துறைகளையும் மாற்றுவதற்கான இடவசதி இல்லை என்பதும் எந்த அளவுக்கு உண்மையோ, அதே அளவுக்கு இந்தக் கட்டடம் மருத்துவமனைக்காகக் கட்டப்படவில்லை என்பதும்கூட உண்மைதானே?   தமிழ்நாட்டில் திரைப்படம் பார்ப்போர் எண்ணிக்கை குறையத் தொடங்கிய நேரத்தில் பல ஊர்களிலும் திரையரங்குகளைத் திருமண மண்டபங்களாக மாற்ற முனைந்தார்கள். ஆனால் மணமகன், மணமகள் அறை, உணவுக் கூடம், தங்கும் அறைகள், சமையல்கூடம் என மற்ற தேவைகள் விரிந்தபோது, இடித்து இடித்து ஒவ்வொன்றாகக் கட்டி மாளாமல், மொத்தமாக இடித்துவிட்டு திருமண மண்டபத்தைப் புதிதாகக் கட்டியவர்கள்தான் தமிழ்நாட்டில் நிறையப் பேர். ஒவ்வொரு தொழிலுக்கும், அத்தொழிலுக்கே உரித்தான நடைமுறைத் தேவைகளையும், வசதிகளையும் கருத்தில் கொண்டுதான் கட்டடங்கள் வடிவமைக்கப்படுகின்றன. நூலகம் என்றாலும் சரி, திருமண மண்டபம், குடியிருப்பு, ஷாப்பிங் மால் அல்லது பள்ளி, கல்லூரி என எதுவாக இருந்தாலும் அதற்கென தனி வடிவமைப்புத் தேவையாக இருக்கிறது. இதில் மருத்துவமனை விதிவிலக்கல்ல. ஆபரேஷன் தியேட்டர், பொது நோயாளிகளுக்கான படுக்கைகள் கொண்ட வார்டுகள், அந்த வார்டுகள் அருகே அந்தந்தத் துறை மருத்துவர்களுக்கான அறைகள், சிறப்பு நோயாளிகளுக்கான தனியறைகள், இவர்களுக்கான பிரத்யேக மின்தூக்கிகள், பிரத்யேக தண்ணீர்க் குழாய்கள், மருத்துவக் கழிவுகளை எரிக்கும் இன்சினேட்டர், பல ஆயிரம்பேர் வந்துசெல்லும் நிலையில் அவர்களது வாகன நிறுத்துமிடங்கள், இவர்களுக்கான உணவகங்கள், இருப்பிட மருத்துவருக்கான வீட்டு வசதிகள், ஸ்ரெட்சரைத் தள்ளிச் செல்லும் சாய்தளங்கள் என எத்தனையோ தேவைகள் மருத்துவமனைக்குத் தேவைப்படுகின்றன. இதற்காக தனியாக வரைபடம் தயாரித்து, கட்டடம் கட்டுவதுதான் மருத்துவமனையின் தேவையைப் பூர்த்தி செய்யும். மருத்துவமனைக் கட்டட வடிவமைப்பு, மருத்துவமனை நிர்வாக இயல் இவற்றுக்கான சிறப்புப் பாடத்திட்டங்களும், பொறியியல், நிர்வாக இயல் பட்டப் படிப்புகளும் ஏற்பட்டுவிட்ட காலம் இது. சூப்பர் ஸ்பெஷாலிட்டி எனப்படும் சிறப்பு மருத்துவமனைகளை விடுங்கள், சாதாரண மருத்துவமனைகளை வடிவமைப்பதற்கேகூடத் தேர்ந்த பொறியியலாளர்கள் வெளிநாடுகளுக்குப் போய் படித்துவிட்டு வருகிறார்கள். ÷செயல்படாத நிலையில் இருக்கும் புதிய தலைமைச் செயலகத்தை மருத்துவமனையாக மாற்றிவிட முடியும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அது திரையரங்கைத் திருமண மண்டபமாக மாற்றிய கதையாகத்தான் முடியும். அதைவிட இப்போதுள்ள கட்டடத்தை முற்றிலுமாக இடித்துவிட்டுப் புதிதாக மருத்துவமனைக் கட்டடம் கட்டுவதுதான் புத்திசாலித்தனம். அப்படிச் செய்தால், அண்ணா சாலையில் ஒரு மருத்துவமனை இருப்பதைப் போன்று நோயாளிக்கு வேறு தொல்லை எதுவுமே இருக்க முடியாது. அரசினர் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலக வளாகம் கட்டப்போவதாக முந்தைய திமுக அரசு அறிவித்தபோது, அண்ணா சாலையில், சென்னையின் மத்திய பகுதியில் தலைமைச் செயலகம் அமைப்பதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் பற்றி தீர்க்கதரிசனத்துடன் கவலை தெரிவித்த முதல்வர் ஜெயலலிதா, இப்போதும் அதே காரணங்கள் மருத்துவமனைக்கும் பொருந்தும் என்பதை கவனத்தில் கொள்ளாதது வியப்பை ஏற்படுத்துகிறது. மத்திய சிறைச்சாலையைப் புழலுக்கு மாற்றியதைப் போல, ராஜீவ் காந்தி தலைமை மருத்துவமனையின் விரிவாக்கத்தையும் ஊருக்கு வெளியே கொண்டு செல்ல வேண்டிய தேவை உள்ளது. நூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்த மருத்துவமனை கட்டப்பட்ட நேரத்தில் இருந்த சுற்றுச்சூழலும் போக்குவரத்தும் மக்கள் தொகையும் முற்றிலும் மாறானவை. அன்றைய தினம் கூவம் ஒரு நதியாக இருந்தது. இன்றோ கூவம் என்பது சென்னைப் பெருநகரின் பெரிய சாக்கடையாகத் திகழும் காலம். ராஜீவ் காந்தி தலைமை மருத்துவமனையிலிருந்து கொட்டப்படும் மருத்துவக் கழிவுகள் போதாதென்று, புதிதாகக் கட்டப்பட இருக்கும் அல்லது சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்பட இருக்கும் அரசினர் தோட்டத்து மருத்துவமனையின் கழிவுகளும் கூவத்தில் கொட்டப்பட்டால், சென்னைப் பெருநகரின் நிலைமைதான் என்ன என்பதை ஏன் அரசு யோசித்துப் பார்க்கவில்லை? எல்லோரும் ஊருக்குள் வந்தாக வேண்டும் என்று தெரிந்திருந்தும், போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதாக, பொய்க் காரணங்களுடன், பேருந்து நிலையங்களை ஊருக்கு வெளியே கொண்டு செல்கிறோம். நோயாளிகள் அமைதியான, மாசற்ற சூழலில் இருக்க வேண்டியவர்கள் என்று தெரிந்தும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை நகரத்தில் இரைச்சலுக்கு நடுவே கொண்டு வருகிறோம். ஏன் இந்த முரண்? அரசினர் தோட்டத்தில் முந்தைய திமுக அரசால் கட்டப்பட்ட தலைமைச் செயலக வளாகம், அரசு அலுவலகங்கள் செயல்படுவதை முன்னிறுத்தி வடிவமைக்கப்பட்ட கட்டடம். அதில் தலைமைச் செயலகம் செயல்படுவதில் சிரமம் இருக்கலாம். ஆனால், அது அலுவலக வளாகம் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. சென்னையின் பல்வேறு பகுதிகளில் இயங்கும் அத்தனை அரசு அலுவலகங்களையும் அங்கே மாற்றி, அது ஏன் ஒருங்கிணைந்த அரசு அலுவலக வளாகமாக மாற்றப்படக் கூடாது?