குஜராத் மாநிலத்தில் கடந்த 2002 ஆம் ஆண்டு நடந்த  இனக்கலவரத்துக்கு முதலமைச்சர் நரேந்திர மோடி துணை நின்றதாக, மூத்த காவல்துறை  அதிகாரி ஒருவர் வெள்ளிக்கிழமை உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்த நிலையில்,  முதலமைச்சர் இல்லத்தில் நடந்த உயரதிகாரிகள் கூட்டத்தில் அந்த அதிகாரி கலந்துகொள்ளவே  இல்லை என்று மாநில காவல்துறையின் முன்னாள் தலைவர் கே. சக்ரவர்த்தி  தெரிவித்துள்ளார்.
சஞ்சீவ் பட் என்ற அந்த போலீஸ் அதிகாரி, உச்சநீதிமன்றத்தில்  தாக்கல் செய்த மனுவில், 2002 ஆம் ஆண்டு பிப்ரவரி 27-ம் தேதி இரவு முதலைமைச்சர்  மோடியின் இல்லத்தில் நடந்த உயரதிகாரிகள் கூட்டத்தில் தானும் கலந்துகொண்டதாகக்  கூறியுள்ளார். 
குற்றச்சாட்டு
அவர் அப்போது உளவுத்துறைக்குப் பொறுப்பாக இருந்ததாகக்  கூறியுள்ளார்.
மறுப்பு
ஆனால், அந்தக் கூட்டத்தில் சஞ்சீவ் பட் கலந்துகொள்ளவில்லை என்று  முன்னாள் காவல்துறைத் தலைவர் கே. சக்ரவர்த்தி, செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.  
ஏற்கெனவே, நானாவதி கமிஷன் முன்பும், சிறப்புப் புலனாய்வுக்  குழுவின் முன்பும் தான் வாக்குமூலம் அளித்திருப்பதாகவும், சிறப்புப்  புலனாய்வுக்குழு தெரிவிக்கும் தகவல்களின் அடிப்படையில் உச்சநீதிமன்றம் இறுதி  முடிவெடுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 
ஆதாரம்!
அதே நேரத்தில், சஞ்சீவ் பட் அந்தக் குறிப்பிட்ட கூட்டத்தில்  பங்கேற்றதாக அப்போது அவருக்கு வாகன ஓட்டுநராக இருந்த காவல் துறையைச் சேர்ந்த  தாராசந்த் யாதவ் கூறியுள்ளார். 
அங்கு கூட்டம் முடிவடையும் வரை தான் அங்கு இருந்ததாகவும், இந்த  விவரங்களை சிறப்புப் புலனாய்வுக் குழுவின் முன்பு தெரிவித்திருப்பதாகவும் ஓட்டுநர்  தாராசந்த் யாதவ் கூறியுள்ளார். 
அரசியல்?
போலீஸ் அதிகாரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு, பாஜக  மற்றும் இந்துத்துவ அமைப்புக்களுக்கு எதிராக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கணை  தொடுக்க கை கொடுத்திருக்கிறது. 
அந்த மனுவின் விவரங்களை உச்சநீதிமன்றம் கவனத்தில் கொள்ள  வேண்டும் என காங்கிரஸ் கட்சி ஏற்கெனவே கோரிக்கை விடுத்துள்ள நிலையில்,  இனக்கலவரத்தில் நரேந்திர மோடியின் பங்கு குறித்து உடனடியாக விசாரணை நடத்தி,  அவருக்கு தண்டனை வழங்குவதற்கான நடைமுறைகளைத் துவக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு வலியுறுத்தியுள்ளது.